
"உங்களுக்குப் பின்னாலும்
வர இருக்கிறார்கள்
நிறையப் பேர்கள்
அடித்தல் திருத்தல் அற்று."
- என்று அழகிய புதுக்கவிதையை எழுதியுள்ளார் கவிஞர் கல்யாண்ஜி . எதிர்கால
இந்திய சமூகம் எப்படி? எவ்வழியில்? எந்த கால கட்டத்துக்குள் அடித்தல்
திருத்தல் அற்று வலிமையுடன் நேரிய வழியில் உருவாக வேண்டும் என்று தனது
“Vision 2020” புத்தகத்தின் மூலமாகவும், நேர்காணல்கள், பள்ளி, கல்லூரி உரைகள்
மூலமாகவும் விளக்கி வரும் மரியாதைக்குரிய A.P.J. அப்துல் கலாமின் வாழ்க்கை
குறித்த ஆவணப் படம் ஒன்றை மின்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்திய அரசின் “Film Division” அறிமுகப்படுத்திய திரைப்படக்காட்சிக்கு
முன்பான டாக்குமென்ட்ரிகள் ஏற்படுத்திய எரிச்சலும் ஆயாசமும் நீள அகலம்
குறைத்தும் வடிவம் மாற்றப்பட்டும் கூட சமீபத்திய டாக்குமென்ட்ரி டைரக்டர்களால்
குறைக்கப்பட்டதாக தெரியவில்லை. இச்சூழலில் ஆவணப்படங்களும், குறும் படங்களும்,
நிமிடப்படங்களும் கடைகளில் வந்து குவிந்து கொண்டுள்ளன. ஆவணப்படம், அதிலும்
கலாமின் வாழ்வு குறித்தான படம், மீண்டும் அதிலும் ஆங்கில மொழியில் என்னும்
பொழுது தொடுவதற்கே சற்று பயமாக இருந்தது. ஆனால் தொட்டால், திரையிட்டுப்
பார்த்தால் “Surprising Shock” ஒரு தாத்தா, பேரன், அம்மா ( ஷோபனா ) ஆகிய
மூவரின் மூலமாக கலாம் குறித்த சிறு குழந்தைப்பருவம், கல்லூரி வாழ்க்கை, விமான
தொழில்நுட்ப பயிற்சி, அணு உலை ஆய்வுப் பணி, செயற்கைக்கோள் மற்றும் ஏவுகனை
பணிகள், மத்திய அரசுக்கான அறிவியல் ஆலோசகர் பணி, குடியரசுத் தலைவராக அமர்வு,
ஐரோப்பிய பாராளுமன்ற உரை, ஊரக வளர்ச்சிக்கான அவருடைய கனவு, கர்நாடக சங்கீத
கீர்த்தனைகள் மற்றும் இலக்கிய ஆர்வம் என்று அனைத்தும் சுவாரஸ்யமாக Cut-shot-
களின் மூலம் காட்சிப்படுத்தப் படுகின்றது. விண்வெளி ஆய்வு, பாதுகாப்பு,
அணுசக்தி ஆகியவற்றில் வியக்கத்தக்க அறிவினைப் பெற்ற கலாம் இத்திறமைகளை
கிராமப்புற வளர்ச்சிக்காக எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவருடைய PURA (
Providing Urban Facilities in Rural Areas ) திட்டத்தின் வெற்றியே சான்று
என்று முன்னாள் உளவுத்துறை இயக்குநர் கார்த்திகேயன் சுருக்கமாக
விளக்குகின்றார்.
சாமான்ய மக்கள் கேள்விப்பட்டிராத மனிதர்களைப் பற்றியும் தொன்மங்கள் குறித்தும்
பழங்குடி இன, மொழி, கலாச்சாரங்கள் ஆகியவற்றை பற்றியும்தான் பெரும்பாலும்
டாக்குமென்ட்ரிகள் வந்து கொண்டிருக்கின்றன. அரைகுறை இருட்டில் ஐம்பது வயதைக்
கடந்த தாடி வைத்திருக்கும் டாக்டரேட்டுகளின் உரையும், வறுமையும், நடுக்கமும்
நிறைந்த பிண்ணனிக் குரல்களும், காட்சிப்படுத்துவதில் ஒரு வகை Academic-
த்தனமும், இதுவரை கேள்விப்பட்டிராத ஒரு தினுசான வறண்ட சோகம் கொண்ட பிண்ணனி
இசை கோர்ப்பும் மற்றும் நீண்ட மொழி பெயர்ப்பு உரையாடல்களும் இல்லாத
டாக்குமென்ட்ரிகளை பல்கலைக் கழகத்துக்காரர்கள் ஒத்துக் கொள்வதில்லை என்று
பரவலான பேச்சு அடிபடுகின்றது.
இச்சூழலில் ரசனையான ஒளிப்பதிவு, ஆங்கிலம் எழுத்துக் கூட்டி வாசிக்க
முடிந்தவர்கள் கூட புரிந்து கொள்ளும் உரையாடல், மிகச் சுருக்கமான விவரனைகள்,
சுவாரஸ்யமான வெட்டுக் காட்சிகள் ( Cut Shots ) மற்றும் கலாமைப்பற்றி இதுவரை
நாம் கேள்விப்படாத தகவல்களுடன் ஒரு அழகிய திரைப்படம் போல ஆரம்பித்து
முடிவடைகின்றது இந்த ஆவணப்படம். ஐரோப்பிய கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர்களிடையே அவர் ஆற்றும் உரை “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்னும்
புகழ் பெற்ற சங்கத் தொடருடன் ஆரம்பிக்கின்றது .
“ Where there is Ritual ness in the heart, there is Beauty in the
character, where there is Beauty in the character there is Harmony in the
Home, where there is Harmony in the home, there is order in the nation,
where there is order in the national there is peace in the world”.
இவ்வுரையைக் கலாம் முடித்தவுடன் “It is very unique speech” என்று கூறி
கை தட்டுகின்றார்கள். இந்த ஆவணப் படம் எடுத்த டைரக்டரைக் கூட இதே போல் பாராட்டத்
தோன்றுகின்றது .
இந்த ஆவணப்படத்தில் இடம் பெறும் மிக உயர்மட்ட குடும்பத்தினருக்கான இல்லம்,
ஏழைகளை அதிசயமாகவும், கருணையுடனும் பார்க்கும் சிறுவன், கலாமின் “Song of
Youth” பாடலை படமாக்கிய முறை மற்றும் intellectual உரையாடல்கள் ஆகியவை
அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படித்து, அடித்துப் பிடித்து என்ஜினியராகவோ, வேறு
வேலைகளிலோ ஒட்டிக் கொண்ட முன்னாள் உழவர் பெருங்குடி மக்களின் பிள்ளைகளுக்கு
ஒரு வகை அந்நியத் தன்மையை ஏற்படுத்தும் போல் தெரிகிறது இந்த ஆவணப் படம்.
இருப்பினும் “Box Office Hit” ஐ தயாரிப்பாளருக்கு ஏற்படுத்தும்.
-எஸ்.எஸ்.பொன்முடி.

எஸ்.எஸ்.பொன்முடி
அவர்களின் இதர படைப்புகள்

முந்தைய புத்தகப்பார்வை காண
