........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

புத்தகப்பார்வை-73

பக்கம்-64                               விலை: ரூ. 45

 

 

சுதந்திரன் கவிதைகள்

 -சுதந்திரன்-

ஓவியா பதிப்பகம்,
9-6-18/2, ஒற்றைத் தெரு,
வத்தலக்குண்டு - 642 202,
திண்டுக்கல் மாவட்டம்.
தொலைபேசி: 04543 - 26 26 86.

பார்வை:

 

கவிதை எனறாலே காத தூரம் ஓடும் நிலைக்கு இன்று கவிஞர்கள் பலர் முளைத்து விட்டார்கள். தற்போது வரும் பல கவிதைகளில் அர்த்தங்களில்லை... அதைப் படிக்க விருப்பங்களுமில்லை... என் நண்பர் ஒருவர் வேடிக்கையாகக் கூறுவதுண்டு. இன்று கணினி இயக்கத் தெரிந்தவர்களெல்லாம் கவிஞர்களாகி விட்டார்கள். கணினியில் எதையாவது தட்டச்சு செய்து வைத்துக் கொண்டு அதை வரிசைப்படுத்த (Alignment) உதவும் இடத்தில் வைத்து இடது அல்லது வலது வரிசைக்குக் கொண்டு வந்து விட்டால் அது புதுக்கவிதையாகி விடுகிறது. இப்படித்தான் இன்றைய கவிதைகள் இருக்கின்றன. ஆனால் சுதந்திரன் கவிதைகள் அப்படியில்லை... அவருடைய வயதுக்கேற்ற முதிர்ச்சியை அவருடைய கவிதைகளில் காணமுடிகிறது.

இன்றைய மனிதனின் பிறப்பிலிருந்து சாவு வரை சொல்லி அவன் வாழ்ந்ததற்கான அடையாளமே இன்றி மனித வாழ்வு முடிந்து போவதை வருத்தத்துடன் சொல்லி, பணம் ஒன்றே பிரதானமாகிப் போய்விட்ட உலகில் எந்த அடையாளத்தையும் எதிர்பார்க்க முடியாமல் போய்விட்டது என்பதை உணர்த்தும் அடையாளம் கவிதை நன்றாக இருக்கிறது. பணத்திற்காகச் செலவிடும் நேரத்தில் குடும்பத்தை மறந்து மகிழ்ச்சியையும் உறவுகளையும் தொலைத்து நிற்கும் கருத்தை நேரம் எனும் கவிதை சொல்கிறது. பாரதியார் பாடிய பராசக்தியைத் தழுவி தற்போது இருந்ததும் போனது என்று சொல்லும் பராசக்தி கவிதையும் நன்றாக இருக்கிறது.

இப்படியே சுதந்திரன் எழுதிய 31 கவிதைகளும் சமுதாய அவலங்களைச் சுட்டிக் காட்டுகிறது. இந்த நூலில் காண்போம்!, வீழும், தொடரட்டும், அழிவே, இவையே, வந்திடும் மெய்யே! எனும் தலைப்பிலான கவிதைகள் அச்சில் இரண்டு பத்திகளாக்கப்பட்டு இருப்பதால் ஒவ்வொரு வரியும் உடைந்து இரண்டு பகுதிகளாகப் பிரிந்து நிற்கிறது. இதைப் பதிப்பகத்தார் சற்று கவனித்திருக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு,  ஓவியா பதிப்பகம் வெளியிட்டுள்ள சுதந்திரன் கவிதைகள் படிக்க நன்றாக இருக்கிறது. கவிதையை விரும்பும் கவிஞர்கள் மட்டுமில்லை, அனைவரும் படிக்கக் கூடியதாக இருப்பது இந்நூலுக்குச் சிறப்பு.  

     -தாமரைச்செல்வி

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு