நாட்காட்டிகளில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த நாட்கள் எதனடிப்படையில் இப்படிப் பிரிக்கப்படுகிறது? இந்நாட்களில் எதைச் செய்தால், என்ன பலன் கிடைக்கும்? என்பதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று அந்த நாளுக்குரிய நட்சத்திரத்தின் அடிப்படையிலேயேக் கணிக்கப்படுகிறது.
மேல்நோக்கு நாள்
உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களை மேல்நோக்கு நாள் என்கின்றனர்.
இந்த நாட்களில் மேல்நோக்கிச் செய்யும் வேலைகளைத் தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு, மரங்களை நடுவது, கட்டிடம் எழுப்புவது மற்றும் மேல்நோக்கி வளரக்கூடிய விதைகளை விதைப்பது போன்றவற்றைச் செய்யலாம்.
இந்நாட்களில் திருமணத்தடை உள்ளவர்கள், வெட்டிவேர் மாலையை விநாயகர், முருகன், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சாற்றி வணங்கினால் திருமணத்தடை நீங்கும்.
கீழ்நோக்கு நாள்
கிருத்திகை, பரணி, பூரம், ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களை கீழ்நோக்கு நாட்கள் என்கின்றனர்.
இந்த நாட்களில் கீழ் நோக்கிச் செய்யும் வேலைகளைத் துவங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு, கிணறு தோண்ட ஆரம்பிப்பது, வீட்டில் போர் வெல் போடுவது, சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு கீழ் வளரக்கூடிய காய்கறிகள், கிழங்குகளை பயிரிடுவது ஆகியவற்றைச் செய்யலாம்.
சமநோக்கு நாள்
அஸ்தம், அசுவினி, அனுஷம், மிருகசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களைச் சமநோக்கு நாட்கள் என்கின்றனர்.
இந்த நாட்களில் ஓரளவிற்குச் சமமாக செய்யும் வேலைகளைத் துவங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு, சமமான சாலையில் ஓட்டக்கூடிய வாகனங்களை வாங்குவது, சாலை அமைப்பது, வீட்டிற்குத் தளம் அமைப்பது, வயல்களை உழுவது போன்றவற்றைச் செய்யலாம்.