ஒரு கிராமத்துக்கு வந்த ஒரு சாமியார், அங்கு தரையில் துண்டை விரித்துச் சில சீட்டுகளைப் பரப்பினார்.
கூட்டம் கூடியது. அப்போது அவர், ''பக்தர்களே... உங்களுக்கு மாபெரும் நற்செய்தி! இதோ என்னிடம் பாவமன்னிப்புச் சீட்டுகள் விற்பனைக்கு உள்ளன. ஒரு சீட்டு நூறு ரூபாய் மட்டுமே... நீங்கள் இதுவரை எவ்வளவு பாவம் செய்திருந்தாலும், இதைக் கொண்டு போனால்... உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். இது சொர்க்கத்துக்கான நுழைவுச் சீட்டு” என்று கூவினார்.
அதைப் பார்த்த் பலரும் போட்டி போட்டுக் கொண்டு சொர்க்கத்திற்கான நுழைவுச் சீட்டை வாங்கினர்.
சாமியாரிடம் பணம் சேர்ந்து கொண்டே இருந்தது.
சாமியார் கடைசியாக, ''என்னிடத்தில் இன்னொரு சீட்டும் உள்ளது. நீங்கள் இனி செய்யப் போகும் பாவத்தையும் மன்னிக்கக் கூடிய அந்த சீட்டின் விலை இருநூறு ரூபாய்'' என்று சொல்லி அதையும் விற்றுப் பணத்தைச் சேர்த்தார்.
சாமியார் புறப்பட நினைத்த சமயத்தில் அங்கு ஒருவன் வந்தான். அவன் சாமியாரிடம் இரண்டு சீட்டுகளையும் வாங்கினான். பின்னர் சாமியாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டினான். சாமியார் சேர்த்த பணத்தையெல்லாம் வாங்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான்.
அப்போது சாமியார், ''திருடனே உனக்கு நரகம்தான்...'' என்று சாபம்விட்டார்.
அவன் ஓடிக் கொண்டே, ''சுவாமி, நான்தான் இனி செய்யப் போகும் பாவத்திற்கான இருநூறு ரூபாய் சீட்டையும் உங்களிடம் வாங்கிவிட்டேனே... உங்கள் சாபம் பலிக்காது...'' என்றான்.
அந்த போலிச் சாமியார் திகைத்து நின்றார்.