சுக முனிவர் ஒரு முறை மகாலட்சுமி தேவியிடம், “செல்வம் உட்பட சகல வளங்களையும் அருளும் தேவியே! பக்தர்களின் வீடுகளில் தாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டுமெனில் மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?” என்று கனிவுடன் கேட்டார்.
அதற்கு மகாலட்சுமி, “வெள்ளை மாடப் புறாக்கள் வாழும் இடம், அடக்கமும் அமைதியும் கொண்ட பெண்கள் வாழும் இல்லம், நவதானியங்கள் நிறைந்துள்ள இடம், தானம் செய்து எல்லோருடனும் பகிர்ந்து உண்டு வாழும் நல்ல மனிதர்கள், இனிமையான சொற்களைப் பேசுபவர்கள், பணிவு நிறைந்தவர்கள், நாவை அடக்கியவர்கள், சாப்பிடுவதிலேயே நீண்ட நேரத்தைக் கழிக்காதவர்கள், பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்கள் போன்றவை அனைத்திலும் நான் நித்திய வாசம் செய்வேன்.
மேலும் சங்கு, நெல்லிக்காய், கோமியம், தாமரை மலர், வெண்மை நிற உடைகள், சுத்தமான ஆடைகள், சுத்தமான இல்லங்கள் இவற்றிலும் நான் வாசம் செய்கிறேன். தூய உள்ளம் கொண்டு பரிசுத்தமாக இருப்போர் அனைவரிடத்திலும் நான் நிச்சயம் இருப்பேன்” என்று சொன்னார்.