பஞ்சகவ்யம் – பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களான 1. சாணம், 2. கோமியம், 3. பால், 4. நெய், 5. தயிர் இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இது இந்து சமய இறை வழிபாட்டின்போது முக்கியப் பூசை பொருளாகவும், ஆயுர்வேத வைத்தியம், வேளாண்மைப்பயிர் பாதுகாப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த பஞ்சகவ்யத்தில், பசும் பாலில் சந்திரனும், பசுவின் தயிரில் வாயு பகவானும், கோமயத்தில் வருண பகவானும், பசும் சாணத்தில் அக்னிதேவனும், நெய்யில் சூரியபகவானும் இருக்கின்றனர் .
பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்கின்ற போது கிடைக்கின்ற பயன்கள்:
1. பசும்பால் - ஆரோக்கியம், ஆயுள் விருத்தி
2. பசுந்தயிர் - பாரம்பரிய விருத்தி
3. பசும்நெய் - மோட்சம்
4. கோசலம் - தீட்டு நீக்கம்
5. கோமலம் - கிருமி ஒழிப்பு
கோயில் கருவறைகளில் நிறுவப்பட்டுள்ள சிலைகள் எப்போதும் குளிர்ச்சியில் இருக்கின்றன. பெரும்பாலான கருவறைகளில் சூரிய ஒளி புகுந்து படிவதில்லை. எனவே, மிகக் குளிர்ச்சி, மிகுந்த இருட்டின் காரணமாகக் கருவறைகள், சிலைகள், இடுக்குகள், பிளவுகள் போன்ற இடங்களில் கிருமிகளும், பாசிகளும், பூச்சிகளும் வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். அவற்றை முழுமையாக அழிக்கின்ற ஆற்றல் இந்தப் பஞ்சகவ்யத்திற்கு உண்டு என்பதால் கோயில்களில் பஞ்சகவ்ய அபிசேகம் செய்யப்படுகின்றது.