இந்து சமயத்தில் பசுவுக்கும் பாம்புக்கும் முதல் மரியாதை அளிக்கப்படுகிறதே ஏன்?
மனிதன் நெல்லிலிருந்து பெறும் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுகிறான், நெல்லின் உமியைத் தவிடாகவும், நெற்கதிரின் வற்றிய நாற்றான வைக்கோலையும் பசு உணவாகக் கொண்டு, தன் கன்றுக்கு மட்டுமில்லாமல், அனைவருக்குமே தன் பாலைத் தருகின்றது.
மனிதன் கடலை, எள், தேங்காய் போன்ற எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய்யை எடுத்து உட்கொள்கிறான். ஆனால், அதன் கழிவாக இருக்கும் புண்ணாக்கை உட்கொள்கிறது பசு.
இப்படி மனிதன் சாப்பிட்ட உணவின் இயற்கை மிச்சங்களைச் சாப்பிடும் பசு , மனிதர்களைத் தன் குழந்தைகளாகவே கருதித் தனது பாலைக் கொடுக்கிறது. இப்படித் தன்னலம் கருதாமல் மனித சமுதாயத்துக்குப் பாலைக் கொடுப்பதுடன், தனது சாணத்தையும் வரட்டியாக, சாண எரிவாயு உள்ளிட்ட எரிபொருளாகப் பயன்படுத்த வழங்குகிறது.
பசுவின் சாணத்துக்கு நோய்த்தொற்று தடுக்கும் குணம் உண்டு என்று இன்றைய அறிவியல் விளக்கி இருக்கிறது. ஆனால், பண்டைய காலத்திலேயே வீட்டுத் தரைகளில் பசுவின் சாணம் வைத்து மெழுகும் பழக்கம் இருந்தது. பசுவின் மூத்திரத்தில் அது சாப்பிடும் புல் வகைகளிலிருந்து கிடைக்கும் மருந்துச் சத்து இருப்பதால், பல மருந்துகள் தயாரிப்பில் கோமூத்திரம் இடம்பெறுகிறது.
பண்டையக் காலத்தில், பசுவின் மூத்திரம் கலந்த பஞ்சகவ்யம் என்ற மருந்துக் கலவை முக்கியமானதாகப் பயன்படுத்தப்பட்டது. அள்ளி அள்ளிக் கொடுக்கும் பசுவுக்குக் காமதேனு என்ற கடவுளாக்கி வணங்கினார்கள்.
சாதுவான பிராணி, மென்மையான பிராணி என்பதுடன் மனிதனின் பொருளாதார முன்னேற்றத்தில் பசுவின் பெரும்பங்கையும் மனதில் கொண்டுதான் அதைக் கடவுளாக நினைத்து வணங்கினார்கள்.
தன்னலம் கருதாது கொடையளிக்கும் பசுவைத் தெய்வமாக்கிக் கொண்டாடும் நாம், கொடிய விசமுடைய பாம்பையும் நாகம் என்று கடவுளாக்கிக் கொண்டாடுகிறோமே...? என்று நமக்குள் கேள்வி எழுவதும் இயற்கைதான்.
மகாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல் படுத்திருக்கிறார். பரமசிவன் கழுத்தில் பாம்பு அழகாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. விநாயகப் பெருமான் இடுப்பில் பாம்பை சுற்றிக் கொண்டிருக்கிறார். பகவான் கிருஷ்ணர் காளிங்கன் என்ற பாம்பின் மேல் நர்த்தனம் ஆடுகிறார். முருகனின் வாகனமான மயில்கூட வாயில் பாம்பைக் கொத்திக் கொண்டிருப்பது போல் இருக்கிறது.
இதெல்லாம் பாம்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கிறதே...?
நாம் வைக்கும் பாலைக் குடித்துவிட்டு, நஞ்சை உமிழும் பாம்புக்குப் புற்றமைத்துப் பாலையும் ஊற்றி, அதையும் கடவுளாக்கிக் கொண்டாடுவது தவறில்லையா?
இந்த குழப்பத்திற்கு வாரியார் சுவாமிகள் சொல்லும் விடையைப் பார்க்கலாம்...!
மனிதப் பிறவி என்பது பாவங்களும், புண்ணியமும் கலந்த ஒன்று. மனிதனுக்கு மனிதன் பாவ, புண்ணிய விகிதாச்சாரம் வேறுபடலாம். ஆனால், வாழ்க்கை முழுவதும் 100 சதவிகிதம் பாவம் செய்தவனுமில்லை, புண்ணியம் செய்பவனும் இருப்பது சாத்தியமில்லை.
இறைவன் எப்படிப்பட்ட மனிதனையும் தன் படைப்பாகவேக் கருதி கவனிக்கிறான். அதன் அடையாளமாகத்தான் மனித உணவின் எச்சத்தை உண்டு, சத்தான பாலைக் கொடுக்கும் பசுவையும் கடவுளாக்கிக் கொண்டாடச் செய்கிறார். அந்தப் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்பையும், கழுத்திலோ இடுப்பிலோ தன் உருவத்திலோ அணிந்து கொண்டு நஞ்சையளிக்கும் நாகப் பாம்பையே ஏற்றுக் கொள்கிறேன். உன்னையா ஏற்றுக்கொள்ள மாட்டேன் ? என்று சொல்வது போல்தான் பாம்பையும் கடவுளாக்கிக் கொண்டாடச் செய்திருக்குகிறார்.
நல்லவனுக்கும் சரி, கெட்டவனுக்கும் சரி, ஆத்திகனுக்கும் சரி, நாத்தினுக்கும் சரி. எல்லோருக்கும் கடவுள் ஒன்றுதான்!