புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
காட்டில் ஒரு சிங்கம்,ஒரு ஆட்டை அழைத்து, “என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச் சொல்”என்று கேட்டது.
ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு, “ஆமாம். நாறுகிறது” என்று சொல்லிற்று.
உடனே சிங்கம், “முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்” என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.
அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து அதனுடைய கருத்தைக் கேட்டது.
அந்த ஓநாய் முகர்ந்து பார்த்துவிட்டு, “கொஞ்சம் கூட நாறவில்லை” என்றது.
சிங்கம், “மூடனே, பொய்யா சொல்கிறாய்?” என்று கூறி அதை அடித்துக் கொன்றது.
பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.
நரி சொன்னது, “நாலு நாளா எனக்குக் கடுமையான ஜலதோஷம். அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை”
சிங்கம் நரியை விட்டுவிட்டது.
புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.