திருமணத்திற்குத் தடையாக இருக்கும் தோசங்களில் முக்கியமானது செவ்வாய் தோசம். மனதாலும், உடலாலும் முற்பிறவிகளில் நாம் செய்த பாவச் செயல்களின் விளைவுகளே செவ்வாய் தோசம் ஏற்படக் காரணமாகிறது. மற்றவர்களின் நலனைப் பாதிக்கக் கூடிய வகையில் நாம் செய்யும் செயல்கள் நமக்குப் பின்பு பாவ பலனாக வந்து சேர்கிறது என்கின்றனர்.
ஆண் அல்லது பெண் ஜாதகத்தில், ஜாதகக் கட்டத்தில் லக்கினத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோசம் ஆகும். ஆனால் இந்த செவ்வாய் தோசம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம். ஒருவருக்கு செவ்வாய் தோசம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோசம் இல்லை எனில், அவர்களுக்குத் திருமணம் செய்யக்கூடாது என்கிறது ஜோதிட விதி. இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. அவை;
1. மேசம், விருச்சிகம், மகரம், ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோசம் இல்லை.
2. குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோசமில்லை.
3. சூரியன், சந்திரன், குரு, சனி ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை.
4. சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை.
5. இரண்டாமிடம் மிதுனம், அல்லது கன்னியாக இருந்தாலும் தோசமில்லை.
6. நான்காமிடம் மேசம், விருச்சிகமானால் தோசமில்லை.
7. ஏழாமிடம் இடம் கடகம், மகரமானால் தோசமில்லை.
8. எட்டாமிடம் தனுசு, மீனம் இருந்தால் தோசமில்லை.
செவ்வாய் தோசமிருந்தால், திருமணத் தடை, திருமண முயற்சி தோல்வி, திருப்தியில்லா மணவாழ்க்கை, சந்தேகக் குணம், இடைக்காலப் பிரிவு, குழந்தையின்மை, மணமுறிவு, விட்டுகொடுத்தல் இல்லாத தன்மை, முரட்டுப் பிடிவாதம், ஒழுக்கமின்மை, மாங்கல்ய பலமில்லாமை, சகோதர உறவுகளுடன் ஒற்றுமைக் குறைவு, பூர்வீகச் சொத்துக்களான நிலம், வீடு சம்பந்தப்பட்ட வழக்குகள் இழுபறி, ஆயுள் பலமின்மை, கடன் தொல்லை போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்கிறது ஜோதிட நூல்கள்.
இப்பிரச்சினைகளைத் தீர்க்கவும், வாழ்வில் வளம் சேர்க்கவும் கீழ்க்காணும் செயல்பாடுகள் பலனளிக்கின்றன.
* முருகன் மற்றும் துர்க்கை வழிபாடு சிறப்பு தரும்.
* அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை வழிபடவும், அங்குள்ள நவக்கிரக சன்னதியில் செவ்வாயையும் வழிபடவும் செய்யலாம்.
* வைத்தீஸ்வரன் கோயில் சென்று அங்குள்ள அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வதும் நல்ல பலன் தரும்.
* வாயில்லா ஜீவன்களுக்கு உணவளியுங்கள்.
* நவக்கிரக செவ்வாய்க்குப் பிறந்ததேதி அல்லது கிழமைகளில் அர்ச்சனை செய்வதால் நன்மை உண்டாகும்.