ஓரை அறிந்து நடப்பவன் எதிலும் வெற்றிபெறுவான் என்பது சித்தர் வாக்கு. சுப நிகழ்ச்சிகளான திருமணம், கிரகப்பிரவேசம், வீடு குடித்தனம் செல்ல, சீமந்தம், பொருள் வாங்க விற்க, பெண் பார்ப்பது, பதவியேற்பது, குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு தொடங்குதல், இல்லற சம்பந்தமான செயல்பாடுகளை ஜாதகரின் லக்னத்திற்கு, ராசிக்கு அடுத்து சுபஓரை என்கிற ஒருமணி நேரம் மிக முக்கியமானதாகும்.
குரு, சுக்கிரன், சந்திரன், புதன் நல்ல ஓரைகள். சூரியன், செவ்வாய், சனி நல்ல ஓரைகள் அல்ல. ஒவ்வொரு ஓரையில் என்ன என்ன செய்யலாம் எனும் குறிப்பு இது.
சூரிய ஓரை
சுபசெயல்கள் மற்றும் புதிதாகத் தொடங்கும் அலுவல் செயல்களைச் செய்திட இந்த சூரியன் ஓரை ஏற்றதல்ல. ஆனால், இந்த ஓரையில் உயில் சாசனம் எழுத, பெரியோர்கள் ஆசி பெற, மற்றவரின் சிபாரிசு பெற, மற்றவர்களிடம் ஆலோசனை பெற, அரசு தொடர்பான செயல்கள், வழக்கு தொடர்பான செயல்களை மேற்கொள்ளச் சிறப்பானதாக இருக்கும். இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்குத் திசையில் கிடைக்கலாம்.
சந்திர ஓரை
சந்திர ஓரை காலத்தில் எல்லா சுபசெயல்களையும் செய்யலாம். குறிப்பாக, பெண்கள் தொடர்புடைய சுப நிகழ்வுகளுக்கு மிகவும் ஏற்ற காலம் இது. இந்த ஓரைகளில் புதிய தொழில் தொடங்க, வணிகம் தொடங்க, வணிகம் தொடர்புடைய பயணம் மேற்கொள்ள ஏற்றது. ஆன்மீக யாத்திரை செய்யலாம், பெண் பார்ப்பது மற்றும் திருமண விழாக்கள், சீமந்தம், மொட்டையடித்தல், காது குத்துதல், வெளிநாடு செல்தல், பதவி ஏற்றல், வேலைக்கு விண்ணப்பித்தல், சேமிப்பு தொடங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். அதிலும் வளர்பிறை காலத்தில் வரும் சந்திரன் ஓரை மிகவும் நல்ல நேரமாகக் கருதப்படுகிறது. இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.
செவ்வாய் ஓரை
இந்த செவ்வாய் அசுப கிரகம், எல்லாக் கிழமையில் வரும் இந்த ஓரை எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. செவ்வாய் ஓரையானது யுத்தம், பொருள் அழிவு, நோய், விபத்து, ஆகியவற்றை உண்டாக்கும். இருப்பினும் இந்த ஓரையில் நிலம் வாங்குவது விற்பது பற்றிய பேச்சு வார்த்தை, அக்ரிமென்ட் போடுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது, ஆயுதப் பிரயோகத்தைப் பயன்படுத்தி யுத்தம் செய்யலாம். பல போர்கள் முற்காலத்தில் இந்த ஓரையில் செய்வார்கள். செவ்வாய் பெரிய அழிவுக்கு உரிய கிரகம் என்பதாலும், அதிகாரத்தைப் பிரயோகம் செய்து சமாதான கட்டுக்குள் கொண்டுவர முடியாது. இந்த ஓரையில் தெய்வீகம் தொடர்பான விஷயங்களையோ, முருகன் அல்லது அம்பாளை வழிபடலாம். இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால், சீக்கிரம் முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.
புதன் ஓரை
புதன் என்றவுடன் அனைவருக்கும் புத்தி என்று தெரியும். இந்த ஓரையில் புத்தியைப் பலப்படுத்தும் கல்வி சேர்க்கை, தகவல் தொடர்பு, நிலம் வாங்க, பெண் பார்க்க, திருமணம், ஜோதிடம் பார்க்க மற்றும் பேச, கதை கட்டுரைகள் மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும், நற்காரியங்கள் ஆரம்பிக்க, வங்கி சேமிப்பு, வழக்குப் பதிவு ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம் ஆகும். சுப செயல்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேரம் உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் காணாமல் போகும் பொருட்கள், விரைவில் அதிகச் சிரமமின்றி கிடைத்து விடும். திருமணம் விஷயமாகப் பேச்சு வார்த்தைகள் நடத்தக் கூடாது.
குரு ஓரை
குரு ஓரையில் தொடங்கும் எல்லாவித நற்காரியம் முக்கிய வெற்றியில் முடியும், நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் சந்தோஷம் ஏற்படுத்தும். இந்த ஓரையில் எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், திருமணம், குரு உபதேசம் ஆசீர்வாதம் பெற, புது வேலைக்குச் சேர, வியாபாரம், மருத்துவம் பார்க்க, விவசாயம் செய்ய நல்லது. ஆடை மற்றும் பொருள்கள் வாங்கவும், தங்கம் வாங்க, சட்டத்திற்கும் ஏற்ற காரியங்கள், வீடு மனை வாங்க சரியான முழு சுப ஓரை ஆகும். இந்த நேரத்தில் காணாமல்போன பொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் உடனே கிடைத்துவிடும்.
சுக்கிர ஓரை
சுக்கிரன் என்பவன் போகக்காரகன். அதனால், ஆடம்பரமான வாழ்க்கை வாழத் தேவையான அடுக்குமாடி அல்லது கட்டிய வீடு, புது வாகனம், ஆடை, வெள்ளி ஆபரணம் மற்றும் வீட்டிற்கு வேண்டிய அலங்கார பொருள்கள், நட்பு, காதல் புரிவதற்கு, கேளிக்கை நிகழ்ச்சிகள், பெண்கள் தொடர்பான சகல காரியங்களிலும், விவசாயத்திற்கும், பயணங்கள் செய்ய, பெண் பார்க்க, சாந்தி முகூர்த்தத்திற்கு மிக முக்கிய ஓரையாகும். இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாட்களில் கிடைக்கும்.
சனி ஓரை
இது ஒரு அசுப கிரக ஓரை. அதனால் இந்த ஓரையில் தான் சிறை வாசம், சண்டை, எதிரிகளால் துன்பம் போன்றவை ஏற்படும். எந்தவித சுபகாரியங்களும், அறுவைச்சிகிச்சை செய்தல் மற்றும் புதிதாக எந்த வேலையும் செய்யக்கூடாது. இருப்பினும் பொருள் சேர்க்கை பற்றிப் பேசவோ, கடனை அடைப்பதற்கு முயற்சியோ, பழைய வீடு, வாகனம் மற்றும் இயந்திரம் வாங்க, பூர்வ ஜென்ம பாவம் தீர்க்க, உழைப்பு பற்றிய பேச்சு வார்த்தை, சட்டப்பூர்வமான விஷயங்களைப் பற்றி முடிவெடுக்க, மரம் செடி நடுதல், நடைப்பயணம் துவங்க நல்லது. இந்த ஓரையில் காணாமல்போன பொருள் கிடைக்காது. பல வருடங்கள் கழித்து எதிர்பாராத விதமாகக் கிடைக்கலாம். சனிக்கிழமை அன்று சந்திர ஓரை தவற்றை ஏற்படுத்தும்.
ஜோதிடர்கள் ஓரையை வைத்துத்தான், நல்ல நாளில் முக்கிய நல்ல நேரத்தைக் கணக்கிட முடியும். இன்னும் ஓரை பற்றிச் சொல்லவேண்டுமானால் வெள்ளிக்கிழமை, குரு ஓரையைத் தேர்ந்தெடுக்கக்கூடாது. சிலநேரங்களில் ஓரை தோஷத்தினால் பாதிப்பு ஏற்படும். நம்மை அறியாமலே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும் அதற்கேற்ப முற்காலத்தில் “கட்டளை கலித்துறையில்” எந்தெந்த ஓரையில் பிறந்தால் எவ்வாறெல்லாம் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஓரை என்பது காலத்தின் ரகசிய கணக்கு, அதனைத் தெரிந்து வைத்துச் செயல்பட்டால் நல்லது. ஒருவருக்கு இந்த சுப ஓரைகள் மிக மோசமான தசை, புத்தி காலத்திலும் நமக்கு உதவ முற்படும், இதனால் நற்பலனையும் மற்றும் சந்தோஷத்தையும், அள்ளித்தரும் என்பது முன்னோர்கள் வாக்கு.