ஒரு நாளின் அறுபது நாழிகை நேரத்தில், சில நாழிகைகள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களின் தனித்துவமான ஆதிக்கத்தில் இருக்கும். அந்த நேரம் அந்தக் கிரகத்தின் ஓரை என்று அழைக்கப்படுகிறது. நிழல் கிரகங்களான ராகு, கேதுவிற்கு ஓரை குறிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் எந்தக் கிரகத்தின் ஓரையுடன் தொடங்குகிறது என்றும் வரையறுத்து வைத்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். அதன்படியே அந்த நாளின் மற்ற ஓரைகள் கணக்கிடப்படுகின்றன். மொத்தத்தில் சுப ஓரையில், சுப நிகழ்ச்சிகள் செய்யலாம். அசுப ஓரையில் முடிந்த வரை நல்ல செயல்களைத் தவிர்ப்பது நல்லது. எந்தெந்த ஓரைகளில் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி இங்கேக் காண்போம்.
சூரிய ஓரை
விண்ணப்பம் செய்தல், அதிகாரிகளை சந்தித்தல், மருந்துண்ணல், சொத்துப் பிரிவினை செய்தல், வேலைக்கு முயற்சித்தல், அரசு அனுமதி பெறுதல், பதவி ஏற்றிடல் ஆகியன செய்யலாம்.
சந்திர ஓரை
திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி, கலை கற்றிட ஆரம்பித்தல், தொலைதூரப் பயணம் தொடங்குதல், கால்நடைகள் வாங்குதல் ஆகியன செய்யலாம்.
செவ்வாய் ஓரை
போர்க்கருவிகள் செய்தல், வாகனங்கள் பழுது பார்த்தல், போர் தொடுத்தல், வீடு நிலம் வாங்குதல், விற்றல், மருந்துண்ணல், ஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் ஆகியன செய்யலாம். சுப செயல்களைத் தவிர்ப்பது நல்லது.
புதன் ஓரை
ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், பந்தயங்களில் பங்கேற்றல், கடிதத் தொடர்பு கொள்ளுதல், புதிய பொருட்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல் ஆகியன செய்யலாம்.
குரு ஓரை
புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், சேமிக்கத் தொடங்குதல், வர்த்தகக் கொள்முதல் செய்தல், விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல், பெரியோர்களைச் சந்தித்து ஆசி பெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம் இது.
சுக்கிர ஓரை
கலைகளைக் கற்கத் தொடங்குதல், திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தல், காதல் புரிதல், மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் ஆகியன செய்யலாம்.
சனி ஓரை
உழுதல், எருவிடுதல், இரும்பு, மின் சாதனங்களை வாங்குதல், தோப்பு துரவு (கிணறு) அமைத்தல், பயணம் செய்தல் ஆகியன செய்யலாம்.