யோகங்கள் மொத்தம் 27ஆகும். யோகம் என்பது வானத்தில் (ஆகாயத்தில்) ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லுகின்ற மொத்தத் தூரமாகும்.
இந்த 27 யோகங்களும் கூட முகூர்த்தம் எனும் நற்காரியங்கள் செய்வதற்கான நாள் தேர்வு செய்ய, கிழமை, நட்சத்திரம், திதி ஆகியவைப் போன்றே பயன்படும் நான்காவது அமைப்பாகும். பஞ்சாங்கம் எனும் பஞ்ச (ஐந்து) அங்கங்களில் நான்காவது அமைப்பான இதைப் பெரும்பான்மையினர் கண்டு கொள்வதே இல்லை.
ஜாதகக் குறிப்பில் ஜனன வாக்கியத்தில் பலர் இதையும் சேர்த்துக் குறிப்பிட்டாலும், முகூர்த்த அடிப்படையில் நல்ல நாள் தேர்வு செய்யும் போது நான்காவதான இந்த நித்திய நாம யோகமும் அடங்கும் என்பதை மறந்து விடுகின்றார்கள்.
திதி – நட்சத்திரங்களைப் போன்றே நித்திய நாம யோகத்தில் பிறந்த பலரும் அதையும் பயன்படுத்திக் கொள்வது சிறப்பாகும்.
27 வகையான யோகங்கள்
1. விஷ்கம்பம் (விஷ் யோகம்)
2. ப்ரீதி (ப்ரீ யோகம்)
3. ஆயுஷ்மான் (ஆயு யோகம்)
4. செளபாக்யம் (செள யோகம்)
5. சோபனம் (சோ யோகம்)
6. அதிகண்டம் (அதி யோகம்)
7. சுகர்மம் (சுக யோகம்)
8. திருதி (திரு யோகம்)
9. சூலம் (சூல யோகம்)
10. கண்டம் (கண் யோகம்)
11. விருத்தி (விரு யோகம்)
12. துருவம் (துரு யோகம்)
13. வ்யாகதம் (வ்யா யோகம்)
14. ஹர்ஷணம் (ஹர் யோகம்)
15. வஜ்ரம் (வஜ் யோகம்)
16. சித்தி (சித் யோகம்)
17. வியதீபாதம் (விய யோகம்)
18. வரீயான் (வரீ யோகம்)
19. பரிகம் (பரி யோகம்)
20. சிவம் (சிவ யோகம்)
21. சித்தம் (சித் யோகம்)
22. சாத்தியம் (சாத் யோகம்)
23. சுபம் (சுப யோகம்)
24. சுப்பிரம் (சுப் யோகம்)
25. பிராம்மியம் (பிரா யோகம்)
26. ஐந்திரம் (ஐந் யோகம்)
27. வைதிருதி (வை யோகம்)
இந்த 27 வகையான யோகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
1. விஷ்கம்பம் (விஷ் யோகம்)
இது அசுப யோகமாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதிரியை வெற்றி கொள்வார்கள். உடல் உறவு சுகத்தில் அதிகமான விருப்பம் உடையவர்களாகவும், எந்த நேரத்திலும் உடல் உறவு கொள்ளத் துடிப்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களைச் சட்டென்று அறிந்து கொள்வதுடன், பின்னால் நடக்கப் போவதை முன் கூட்டியே உணரும் தீர்க்க தரிசனம் இருக்கும். மாந்திரீக விஷயங்களில் நாட்டமிருக்கும். எவருக்கும் கட்டுப்படாத தன்னிச்சையான சுதந்திரப் பிரியர்கள், சுற்றங்களை மதிப்பார்கள். எவரிடமும் ஏமாறாதவராக இருப்பார்.
2. ப்ரீதி (ப்ரீ யோகம்)
இது சுபமான யோகமாகும். இதில் பிறப்பவர்கள் இனிய சொல் பேசுபவராகவும், நல்ல செயல்களையும் செய்பவர்களாகவும் இருப்பார்கள். பெரியோர்கள், ஞானிகள், மகான்கள், குரு ஆகியோர்களை மதிப்பவராகவும் அவர்களை வணங்குபவராகவும் இருப்பார்கள். உறுதியான மனமும், செயல்பாட்டுத் திறமையும் இருக்கும். கடவுள் பக்தி அதிகமுள்ளவர். அனைவரையும் அரவணைத்துச் செல்பவர்தான். காம இச்சை சற்று அதிகம் இருக்கும் நற்குணமுடைய இவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.
3. ஆயுஷ்மான் (ஆயு யோகம்)
இது சுப யோகமாகும். பெரியவர்கள், மகான்கள், ஞானி – யோகிகள் “ஆயுஷ்மான் பவ” என்று இந்த யோகத்தின் பெயரால் வாழ்த்துவது உண்டு. “ஆயுஷ்மான் பவ” என்றால் நீடுழி பல்லாண்டு வாழ்க என்று பொருளாகும். அதற்கேற்ப இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல வசதியாக வாழ்வார்கள். அனைவரையும் மதிப்பவர்கள், பக்திமான்களாகத் தெய்வ காரியங்கள் செய்வார்கள். கால்நடைச் செல்வங்கள் உடையவர்களாக இருப்பார்கள்.
4. செளபாக்யம் (செள யோகம்)
பெயரே செளபாக்யம் எனும் போது இவர்களின் சுக செளக்யம் நன்றாகவே இருக்கும். இதுவும் சுபமான யோகம்தான். இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடையவர்களாகவும், உறுதியான மனம் உடைய செயல் திறன் மிக்கவர்களாகவும், நல்ல பக்தி மான்களாகவும், ஈவு இரக்கம் உடைய தர்மவான்களாக இருப்பார்கள். பெரியோர்களை மதிப்பவர்கள் என்பதுடன், சேவை செய்யும் மனப்பான்மையும் இருக்கும். உடல் உறவு சுகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். அழகை ரசிப்பவர்கள்.
5. சோபனம் (சோ யோகம்)
சுப யோகமான இதன் பொருள் இனிமையான சுகம் என்பதாகும். திருமணமாகி முதல் இரவுக்கு “சோபனம்” என்று குறிப்பிடுவதுண்டு இதில் பிறந்தவர்கள் சுகமான இனிமையான வாழ்க்கையை விரும்புவதுடன் “சோபனம்” எனும் உடல் உறவுக் கல்வியில் தணியாத விருப்பத்துடன், நிபுணர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் குறிக்கோளே மகிழ்ச்சியான வாழ்க்கைதான். கஷ்டத்தை வெறுப்பவர்கள். சுற்றம் நட்பை அதிகம் விரும்புவார்கள். செல்வாக்குடையவர்கள் எனலாம்.
6. அதி கண்டம் (அதி யோகம்)
பெயரே கண்டம் என்று பயமுறுத்துகின்றது. அதிலும் அதி கண்டம். எனவே அடிக்கடி விபத்து கண்டங்கள் ஏற்படும். துன்பம் தொல்லை கஷ்டம் தாக்கும். மற்றவர்களுக்குத் தொல்லைகளையும், பிரச்சினைகளையும், துன்பங்களையும் ஏற்படுத்துவார்கள். பிறரைத் துன்பப்படுத்தி, அதில் மனம் மகிழ்ச்சியடைவார்கள். குறுகிய மனப்பான்மையுடையவர்களாக இருப்பதுண்டு. பேராசையும், முன் கோபமும், முரட்டுத்தனமும், அலட்சியமும், சோம்பலும் இருக்கும். எதிலும் அழுத்தமான நம்பிக்கை இல்லாத மேம்போக்கானவர்களாக இருப்பார்கள்.
7. சுகர்மம் (சுக யோகம்)
இது நல்ல யோகம். இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடன், பேரும் புகழும் பெற்று நல்ல வாழ்க்கை வாழக்கூடியவர்கள். பற்று, பாசம், ஈகை உடையவர்கள். நல்ல பக்திமான்களாகவும், தெய்வ காரியங்கள் செய்வதில், தீர்த்த யாத்திரை மேற்கொள்வதில் விருப்பம் இருக்கும். நட்பு சுற்றங்களை விரும்பி மதிப்பவர்களாக இருப்பார்கள்.
8. திருதி (திரு யோகம்)
இது அசுப யோகம்தான் என்றாலும் சிலர் சுபயோகம் என்று கூறுகின்றார்கள். இதில் பிறந்தவர்கள் வைராக்யமும், தன்னம்பிக்கையும் உடையவர்கள். எடுத்த காரியத்தை விடாப்பிடியாக முடிக்கும் ஆற்றல் உடையவர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றக் கூடியவர்கள். நல்ல தைரியம் உடையவர்கள். சாஸ்திரங்களில் ஈடுபாடு இருப்பதுண்டு.
9. சூலம் (சூல யோகம்)
இது அசுபமான யோகம். முன்கோபம், முரட்டுத்தனம், அலட்சியம், சோம்பல், எடுத்தெறிந்து பேசும் குணம் இருக்கும். எவரையும் மதிக்க மாட்டார்கள். எவருடனும் ஒத்துப் போகாமல் முரண்டு பிடிப்பவர்கள். மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பதுடன் வீண் வம்பு, சண்டை பிடிக்கவும் செய்வதுண்டு. உடல் உறவு சுகத்தில் மிக அதிகமான ஆசை இருக்கும். கண்டபடி அளவற்ற காமசுகம் அனுபவித்து அதனால் அவஸ்தைப்படுவதுண்டு.
10. கண்டம் (கண் யோகம்)
இதுவும் அசுபமான யோகம்தான். கண்டம் என்ற பெயரைப் போல, இதில் பிறந்தவர்கள் அடிக்கடி கண்டங்களையும், துன்பங்களையும், உடல் நோய்த் துன்பங்களையும் சந்திக்க வேண்டி வரும். நல்ல எண்ணங்களும் இருக்காது. செயல்பாடுகளும் சிறப்பாக இருக்காது. மற்றவர்களுக்குத் தீமைகள் செய்வார்கள். வஞ்சக எண்ணம் இருக்கும். எவரையும் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்படுவார்கள். கர்வம் அலட்சியம் இருக்கும்.
11. விருத்தி (விரு யோகம்)
செல்வாக்குடையவர்கள். நல்ல அளவில் வசதியான வாழ்க்கை அமைப்பவர்கள். சாஸ்திர நாட்டமும், புலமையும் உடையவர்களாக இருப்பதுடன், தெய்வபக்தியும், நற்பண்புகளும் உள்ளவர்கள். ஈகை, தரும குணம் உடையவர்களாகவும், தெய்வ காரியங்கள் திருப்பணிகள் செய்பவர்களாக இருப்பார்கள். நல்ல எண்ணம் செயல்பாடுடையவர்கள் எனலாம். இது சுபமான யோகமாகும்.
12. துருவம் (துரு யோகம்)
இதில் பிறந்தவர்கள் தனிமையை விரும்பக் கூடியவர்களாக இருப்பதுடன் எதிலும் ஒட்டாமல் தாமரை இலைத் தண்ணீர் போல பட்டும், படாமலும் இருப்பார்கள். கபடமான எண்ணம் உடையவர்கள். சமயம் கிடைக்கும் போது பழி தீர்த்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள். நல்ல எண்ணம் இருக்காது. இது அசுபமான யோகமாகும். சிலர் இதையும் சுப யோகம் என்று கூறுவதுண்டு. எனினும், சுப காரியங்களுக்கு விலக்களிக்க வேண்டிய யோகம்தான்.
13. வ்யாகதம் (வ்யா யோகம்)
இதுவும் அசுபமான யோகம்தான். முன்கோபமும், முரட்டுத்தனமும் உடைய இவர்கள் சமுகத்தோடு ஒன்றிச் செல்லாமல், தன்னிச்சையாக செயல்படக் கூடியவர்கள். நல்லெண்ணம் இல்லாத இவர்கள் சூது வாது, கபடம் உள்ளவர்களே எனலாம். மன உறுதி இல்லாத இவர்கள் எண்ணங்களையும், செயல்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். பழி பாவத்துக்கு அஞ்சாதவர்கள், கெடுதல் செய்வார்கள்.
14. ஹர்ஷணம் (ஹர் யோகம்)
இது சுபமான யோகமாகும். செல்வாக்கும் – சொல்வாக்கும் உடையவர்கள். இனிமையான மென்மையான சுபாவம் கொண்டவர்கள். பின்னால் வருவதை முன்கூட்டியே யூகிக்கும் தீர்க்கத் தரிசிகளாக இருப்பதுண்டு. சுகமான ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். உடல் உறவு சுகத்தில் சற்று கூடுதலான அதிகமான ஈடு பாடுடையவர்கள். தெய்வ பக்தியும், உதவும் மனப்பான்மையும் உள்ளவர்களே எனலாம்.
15. வஜ்ரம் (வஜ் யோகம்)
இது சுபமான யோகமாகும். இதைச் சிலர் அசுபமான யோகம் என்று கூறுகின்றார்கள். ஆனால், இது சுபமான யோகம்தான். இதில் பிறந்தவர்களுக்கு அசாத்தியமான மன உறுதி உடையவர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள், கொள்கைப் பிடிப்புள்ளவர்கள். எதையும் சாதிப்பவர்கள். துணிச்சலும், தைரியமும் உள்ள இவர்களிடம் கனிவும் இருக்கும். உதவும் மனப்பான்மையும் உண்டு. நல்ல தெய்வபக்தியும், பிறர் மேல் மதிப்பு மரியாதையும் உள்ளவர்கள்தான் என்றாலும் தனக்குத் தீங்கு செய்தவர்களை மறக்காமல் பழி தீர்த்துக் கொள்வார்கள்.
16. சித்தி (சித் யோகம்)
சுபயோகமான இதில் பிறந்தவர்களுக்கு எதுவும் சிந்திக்கும் உபாசனா சக்தியுடையவர்கள். தியானம், யோகம் போன்றவற்றில் ஈடுபாடு உடை யவர்கள். தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்வதில் விருப்பம் அதிகம். இமாலய யாத்திரை போன்ற கடினமான பயணங்களை மகிழ்வாக மேற்கொள்வதுண்டு செல்வ மும், செல்வாக்கும் உடையவர்களே என்பதுடன் நல்ல குணம், உதவும் மனப்பான்மையுடையவர்கள் எனலாம்.
17. வியதீபாதம் (விய யோகம்)
இது அசுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். துன்பங்களையும், துயரங்களையும், கஷ்டங்களையும் அடிக்கடி சந்திக்க வேண்டி வரும். வாழ்க்கை போராட்டமாக இருக்கும். சிந்தித்து, முன் யோசனையுடன் செயல்படாமல் அவசர முடிவால் பிரச்சினைகளைச் சந்திப்பார்கள். பிடிவாத குணம் உடையவர்கள் என்பதால் பல நல்ல வாய்ப்புகளை இழந்து விடுவார்கள். செயல்பாட்டு உறுதியும், திறனும் இருப்பதில்லை.
18. வரீயான் (வரீ யோகம்)
இது சுபயோகமாகும். இதில் பிறந்தவர்கள் தலைமை தாங்கும் தகுதியுடையவர்களாக இருப்பார்கள். நல்ல தைரியமும் காரிய வெற்றியும் உடையவர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மையுடையவர். தரும காரியங்கள் திருப்பணிகள் செய்வதில் நாட்டமிருக்கும் புகழ் பெறக் கூடிய வகையில் செயல்பாடுகள் இருக்கும். நல் லெண்ணம் நல்வாக்கு உடையவர்களாக இருப்பார்கள்.
19. பரிகம் (பரி யோகம்)
இது சுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் தனக்கென, தனியான கொள்கையும், குறிக்கோளும் உடையவர்கள். அநேகமாக அதிலிருந்து மாற மாட்டார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார்கள். பிறர் வாக்கு தவறினால் கோபம் கொண்டு அவர்களின் தொடர்பை வெட்டிக் கொள்வார்கள். கடும் முயற்சியுடையவர்கள். வெற்றி காணும் வரை ஓய மாட்டார்கள். விளையாட்டுகளில், பொழுது போக்குகளில் ஆர்வமுள்ளவர்கள். சுற்றுப் பயணத்தை விரும்புவார்கள்.
20. சிவம் (சிவ யோகம்)
இதுவும் சுபமான யோகம் தான். இதில் பிறந்தவர்கள் சிவனை வழிபடுபவர்களாகவும், தியான ம், யோகம், பக்தி, ஞான மார்க்கத்தில் அதிக ஈடுபாடுடையவர்களாக இருப்பார்கள். ஞானிகள், மகான்கள், யோகிகள், பெரியோர்களைச் சந்திப்பதில் அதிக ஆர்வமுடையவர்கள். அவர்களின் ஆசியும் வழிகாட்டுதலும் இவர்களுக்குக் கிடைக்கும் தெய்வ காரியங்கள், திருப்பணிகள், தீர்த்த யாத்திரைகள் போன்றவற்றில் அதிக நாட்டமிருக்கும். நல்ல எண்ணமும், நல்ல செயல்பாடும் உடையவர்கள் எனலாம்.
21. சித்தம் (சித் யோகம்)
இது சுபமானயோகமாகும். இதில் பிறந்தவர்கள். அசாத்தியமான மன உறுதியுடையவர்கள். எதற்குமே அஞ்ச மாட்டார்கள். உறுதியான சித்தமுடையவர்கள். எடுக்கும் முடிவுகளைச் சட்டென்று மாற்றிக் கொள்ள மாட்டார்கள். சாஸ்திர புலமை, பரிச்சியமுடை யவர்கள். நல்ல பக்தியும் இருக்கும். பிறருக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கும். பிறருக்குத் தகுந்த ஆலோசனைகளைச் சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள்.
22. சாத்தியம் (சாத் யோகம்)
இது சுபமான யோகமாகும். பெயரே சாத்தியம் என்று உள்ளதால், இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதையுமே சாத்தியமாக்கி விடுவார்கள். பிற பெண்களை வசியம் செய்து கொள்ளும் சாத்தியம் கூட இவர்களுக்கு உண்டு. சற்று கூடுதலான காம இச்சை உடையவர்கள் என்பதில் காமக்கலையில் வல்லவராகவும் கூட இருப்பதுண்டு. வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் பேசுவதில் கெட்டிக்காரர்கள். இந்தப் பேச்சினாலேயே மற்றவர்களைக் கவர்ந்து விடுவார்கள். சங்கீத ஞானமும் இருப்பதுண்டு.
23. சுபம் (சுப யோகம்)
பெயரே சுபம் என்பதால் சுபமான யோகம்தான். இனிமையான மென்மையான சுபாவம் கொண்டவர்கள். மகான்கள், யோகிகள், ஞானிகள், பெரியோர்களுக்கு சேவை செய்வதில் விருப்பம் உடையவர்கள். தெய்வ காரியங்கள், திருப்பணிகள், பொதுச் சேவையிலும் நல்ல நாட்டமிருக்கும். அனைத்துத் தரப்பினரிடமும், சுமுகமான உறவு வைத்துக் கொள்பவர்கள். அமைதியை நாடும் சாத்வீகமானவர்கள் எனலாம்.
24. சுப்பிரம் (சுப் யோகம்)
இது சுபமான யோகமாகும். நல்ல தெய்வ பக்தியும், தெய்வ நம்பிக்கையும் உடையவர்கள். எது நடந்தாலும் அது கடவுள் செயல் என்று கூறுவார்கள். அனைத்துமே இவர்களுக்குக் கடவுள்தான். தான் எந்தச் சாதனை செய்தாலும், தன்னைப் பற்றி பெருமையாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ள மாட்டார்கள். அதையும் கடவுளுக்கேச் சமர்ப்பணம் செய்வார்கள். மன உறுதியும், வைராக்கியமும் உடைய சாதனையாளர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கும். நல்ல தோற்றம். இனிமையான சுபாவம் உள்ளவர்கள்.
25. பிராம்மியம் (பிரா யோகம்)
இதுவும் சுபமான யோகம்தான். தியானம், யோகம் ஆகியவற்றில் நல்ல அளவில் ஈடுபாடுடையவர்கள். பிரம்ம ஞானம் அறியும் முயற்சியுடையவர்கள். ஞானிகள், யோகிகள், மகான்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் நல்ல அளவில் பயன் பெறுவார்கள். விவேகத்துடன் செயல்படுவதுடன் தியாக உணர்வும், தரும சிந்தனையும் இருக்கும். சிலர் உபாசனை மேற்கொள்வதுமுண்டு. உடல் நலத்தை விரும்புபவர்களாக இருப்பதால், ஹோமம், யாகம், சமாராதனை, அன்னதானம் போன்றவைகளை செய்யக் கூடியவர்கள் எனலாம்.
26. ஐந்திரம் (ஐந் யோகம்)
இதுவும் சுபமான யோகம்தான். இதை சிலர் மாகேந்திரம் என்ற பெயரிலும் குறிப்பிடுவதுண்டு. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றியுடையவர்கள். தீர்க்கதரிசிகள் எனலாம். ஆழ்ந்து சிந்தனை செய்பவர்கள். வரும் பொருள் உரைப்பவர்கள். சிலர் அருள்வாக்கு, ஜோதிடம் போன்றவையும் கூட இவர்களுக்கு வருவதுண்டு. நல்ல நுணுக்கமான அறிவுள்ளவர்கள். புகழ்ச்சியை விரும்புவார்கள். முன்கோபம் இருக்கும். கற்றறிந்த பண்டிதர்களையும், வேதஞானிகளையும் மதிப்பவர்கள். நல்ல தெய்வ பக்தி யுடையவர்கள். தெய்வ காரியங்களைச் செய்வார்கள்.
27. வைதிருதி (வை யோகம்)
இது அசுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். தற்பெருமையும் உடையவர்கள். கலகப் பிரியர்கள். நல்லவர்கள் போல் நடித்து ஆதாயம் பெறுவார்கள். கபடம் உள்ளதுடன், கெடுக்கும் புத்தி இருக்கும். மன உறுதி இல்லாதவர்கள் என்பதால் மறைமுகமான தொல்லைகளை அளிப்பார்கள். நேர்மை இருக்காது. கடவுள் பக்தியைக் கூட வியாபாரமாக்கிக் காசு பண்ணி விடுவார்கள். ஆதாயம் இல்லாமல் எதையுமேச் செய்யமாட்டார்கள். கஞ்சத்தனமும் இருக்கும். காம உணர்வு அதிகமுடையவர்கள், தீய பழக்கங்கள் இருக்கும்.