அஷ்டமென்றால் எட்டு என்று பொருள்படும். சந்திரனும் எட்டாம் இடமும் இணையும் நாள் சந்திராஷ்டமம் என்று அழைக்கப்படுகிறது. இரண்டரை நாள் சந்திரன் நீடிக்கும் இக்காலம் என்னென்ன துன்பங்களை ஏற்படுத்துமோ என்றுதான் பெரும்பாலோனோரது அச்சமாக இருக்கிறது. ஒரு ராசிக்கு இரண்டேகால் நாள் வீதம் 12 ராசியினரையும் 28 நாட்களிலேயேக் கடந்து விடுகிறான். சந்திரபகவான் மாதந்தோறும் ஒருவரது ஜென்மராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டமம் என்று அழைக்கப்படுகிறது. காலண்டரில் சந்திராஷ்டமக் காலத்தில் தமது ராசிகளை பார்த்து நாட்களை யுகங்களாக நினைப்பவர்கள் நம்மிடையே பலர் இருக்கிறார்கள்.
தமது ராசியில் சந்திரன் வசிக்கும் இக்காலத்தை எத்தகைய புதிய முயற்சியும் இன்றி கடந்துவிடுவது முக்கியம் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அப்படி மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிகளைத் தராது. தடைகளை உண்டாக்கும் என்றும் சொல்கிறார்கள். திருமணநாளைத் தேர்வு செய்யும் போது, மணமக்கள் இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளாக தேர்வு செய்வார்கள். புதுமனை புகுவிழா போன்ற சுபக்காரியங்களை உங்கள் ராசிக்குரிய சந்திராஷ்டம தினத்தில் தவிர்க்கச் சொல்வதற்குக் காரணமும் இதுதான்.
சந்திரன் மனோகாரகன். மனதினை வழி நடத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதால் இப்பெயர் பெற்றான். உடலைக் குறிப்பவன். மனதை ஆள்பவன். அதனால்தான் மனம் சார்ந்த உளவியல் நிகழ்வுகளுக்குச் சந்திர பகவானே காரணமமாகிறான். மனம் தெளிவாக இருக்கும் போது, மேற்கொள்ளப்படும் முயற்சிகள் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கி தரும். அத்தகைய தெளிவான மனம் குழம்பும் நேரத்தில் எத்தகையச் செயலிலும் ஈடுபடக்கூடாது என்பதற்காகத்தான் சந்திராஷ் டமத்தில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளக்கூடாது என்பதோடு அன்றாடப் பணிகளிலும் கூடுதல் கவனத்தை வைக்க வேண்டியதாக இருக்கிறது. அன்றைய தினத்தில் வீண் விவாதங்களிலும், அநாவசியமாக அடுத்தவரது நலனிலும் ஈடுபட்டால் விபரீதங்கள் அதிகரிக்கும் என்றும் சொல்வதுண்டு.
தவிர்க்க முடியாத காரணங்களால் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம் வரும் தினத்தன்று முக்கியப் பணிகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் அம்பிகைக்குப் பாலாபிஷேம் செய்த பிறகு, விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு பிறகு பணியை தொடங்கலாம்.
சந்திராஷ்டமம் என்றாலே தீமைதான் விளைவிக்கும் என்பது பொதுவான பலன்களே. ஒருவரது ஜெனன ஜாதகத்தில் சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்தால் அவர்களுக்கு சந்திராஷ்ட தினம் வரும்போது யோகத்தையேக் கொடுக்கும் என்பதையும் மறக்க வேண்டாம்.
சந்திராஷ்டமம் மனதுக்கு குழப்பத்தை உண்டாக்கும் நாள் என்பதால் எதையும் ஆழ யோசித்துச் செய்வதே நல்லது. கூடுதல் கவனம் இருந்தால் சந்திராஷ் டமத்தை சங்கடமின்றிக் கடக்கலாம்