ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும் லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2, 4, 5, 7, 8, 12வது இடங்களில் ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும்.
பாதிப்புகள்
நாகதோஷம் இருப்பதால் கீழ்க்காணும் பாதிப்புகள் ஏற்படும் என்று ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றன.
1. லக்னம் அல்லது சந்திரனுக்கு 2ல் ராகு அல்லது கேது இருப்பதான நாகதோஷம், கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, அல்லது விவாகரத்து உண்டாகலாம்.
2. லக்னம் அல்லது சந்திரனுக்கு 4ல் ராகு அல்லது கேது உள்ளதான நாகதோஷம் இருதயம் சம்பந்தமான நோய், சொத்து விஷயமான தகராறு, மனைவிக்கு ரோகம், குடும்ப வாழ்க்கையில் அதிருப்தி முதலிய கஷ்டங்கள் வர வாய்ப்பாகும்.
3. லக்னம் அல்லது சந்திரனுக்கு 5 ல் ராகு அல்லது கேது இருப்பதால் வரும் நாகதோஷம் புத்திர பாக்கியம் தடைபடக்கூடும். ஆனால் 5ம் அதிபதி சுபர் சேர்க்கை பெற்று பலமாக இருப்பின் இந்த நாகதோஷம் நிவர்த்தி அடைந்து குழந்தைச் செல்வம் ஏற்படும்.
4. லக்னம் அல்லது சந்திரனுக்கு 7ல்ராகு அல்லது கேது நிற்பது களத்திரதோஷம். இதனால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படலாம். தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், அவநம்பிக்கை ஏற்படக்கூடும், சில தம்பதிகளிடையே பிரிவினை கூட நேரலாம். ஆனால் ஜாதகத்தில் 7ம்அதிபதி சுக்கிரன் பலமாகக் காணப்பட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும்.
5. லக்னம் அல்லது சந்திரனுக்கு 8 ஆமிடத்தில் ராகு அல்லது கேது இருக்கும் நாகதோஷத்தினால், விஷக்கடி, நோய், குடும்பத்தில் சண்டை சச்சரவு, பிரிவினை ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் 8வது வீட்டை சுபர் பார்த்தாலோ, 8ம்அதிபதி பலமாக இருந்தாலோ தோஷ நிவர்த்தி ஏற்படும்.
6. லக்னம் அல்லது சந்திரனுக்கு 12ம்இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதான நாகதோஷத்தால் நோய்த் தொல்லை, விஷக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு, பணவிரயமும் ஏற்படும். 12ம்வீட்டை சுபர் பார்த்தாலோ அல்லது12ம்அதிபதி பலமாக இருந்தாலோ தோஷ நிவர்த்தி ஏற்படும்.
நாகதோஷப் பொருத்தமும், திருமணமும்
1. நாகதோஷம் ஆண்/பெண் இருவர் ஜாதகங்களில் இருந்தாலும் பொருத்தலாம். இல்லாவிட்டாலும் பொருத்தலாம்.
2. ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் இருந்து, மற்றவருக்கு நாகதோஷம் இல்லாவிட்டால் பொருத்தக்கூடாது.
3. ஆண், பெண் இருவருக்கும் சுபர் பார்வையினால் நாகதோஷம் நீங்கினால் சேர்க்கலாம். ஒருவருக்கு மட்டும் நீங்கினால் போதாது.
4. ஆண் ஜாதகங்களில் 2, 4, 5, 7, 8, 12 வதுஇடங்களில் ராகு அல்லது கேது சுபர் பார்வையுடன் இருக்கும் போது, பெண் ஜாதகத்தில் நாகதோஷம் இருந்தாலும், இல்லா விட்டாலும் திருமணம் செய்தால் அது மத்யம பலனைக் கொடுக்கும். இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கை அமையும்.
5. பெண் ஜாதகத்தில் ராகு அல்லது கேது உள்ள அதே இடத்திலேயே ஆண்; ஜாதகத்திலும் இருக்க வேண்டும் என்று ஒரு அபிப்ராயம் ஜோதிடர்களிடையே உள்ளது. அவ்வாறு அமைந்தாலும் நல்லதே. தோஷ சாம்யம் ஏற்படும்.
6. அசுவினி, மகம், மூலம், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்ம நட்த்திர தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோ அல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது.
7. அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்ம நட்த்திரமாக வரும் ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
8. ஜாதக பலன் கூறும் போது, ராகுவிற்கு சனியின் பலனும், கேதுவிற்கு செவ்வாயின் பலனும் சொல்லுவார்கள்.