வீடு கட்டும் போது கீழ்க்காணும் சில குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று திருக்கணிதப் பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. அவை;
1. வாசல்கால் நிலை வைக்காமலும், தரை பூசாமலும், சுவரில் சுண்ணாம்பு அடிக்காமலும், மனைவி கர்ப்பமாக இருக்கும் காலத்திலும், இயற்கை உத்பாதம் நடக்கையிலும், வேதம் சொல்லாமலும். திருமுறை ஓதாமலும், வாஸ்து ஹோமம் செய்யாமலும் புதிய வீட்டில் கிரஹப் பிரவேசம் செய்யக் கூடாது. கிருகாரம்ப காலத்தில் இராசவாசல் மண் அல்லது புண்ணிய ஷேத்திர மண். மலைமண், ஆற்றுமண். புற்றுமண், நண்டுப் புற்றுமண், ஆனைக்கோட்டு மண். எருது கோட்டுமண். குளமண். கொழுமண். இவைகளைச் சமமாகக் கூட்டி பெட்டி செய்து, அடிப்பேழையில் பள்ளமாக்கி அதில் மாணிக்கம், வைடூர்யம், வைரம், நீலம். முத்து. புஷ்பராகம், மரகதம், கோமேதகம், பளிங்கு ஆகிய இரத்தினங்களை வைத்து மூடி தங்கத் தட்டில் வாஸ்து யந்திரம் போட்டு வாஸ்து பூஜையும். நவக்கிரக பூஜையும் செய்து யந்திரத்தைப் பழம்பாசியினாற் சுற்றி நிருதி அல்லது ஈசானத்தில் வைத்து அந்த இடத்தில் ஒரு மண்டல பூஜை செய்யவும்.
2. இயற்கை உத்பாதம் என்பது இடியுடன் கூடிய மழை காலம் மற்றும் புயல்காற்று நிலநடுக்கம் உண்டாகும் காலம் வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றும் காலம் போன்றவை. இவை விலக்க வேண்டும்.
3. கிழமைகளில் செவ்வாய், சனி. விலக்கத்தக்கவை. கிரஹப் பிரவேசம் செய்யும் வீட்டுத் தலைவனின் ராசிக்கு எட்டில் சந்திரன் இருக்கும் காலமும் விலக்கத்தக்கவை. மேலும் நல்ல நாளும் கோளும் அறியாமல் பிரவேசிக்கக் கூடாது.
4. முதலில் பசு செல்வதால் லட்சுமி தேவி சந்தோஷம் அடைகிறாள்.
5. அடுத்து தம்பதிகள் குல தெய்வ, இஷ்ட தெய்வப் படங்களுடன் பிரவேசிப்பதால் முன்னோர்களும் கிரக தேவதைகளும் பிரியமடைகின்றன.
6. சுமங்கலிப் பெண் இல்லத்தில் உள்ளே செல்வதால் மஹாலஷ்மி வாசம் உண்டாகிறது. (ஸ்வஸ்தி வசனம் வேத கோஷம்) இவை இரண்டாலும் அபசகுனங்கள் விலகுகிறது.
7. நண்பர்கள் அன்று விருந்து உண்பதால் அக்னி அருளும், வாஸ்து தோஷமும் நீங்குகிறது.
8. கூடுமானவரை பூஜை அறையும், கழிவறையும் பக்கத்தில் இல்லாமலும், சமையலறை கடந்து கழிவறை அடையாமலும் வாசலுக்கு நேர் கிணறு வைக்காமலும் முதலில் கட்டிய பிரதான வாயிலை மூடாமல் இருப்பதும் நல்லது.
9. வாயிற் பொருத்தம்
இடபம், மிதுனம், கர்க்கடகம், ராசியில் பிறந்தவர்களுக்கு கிழக்கு. வடக்கு வாயில் வீடும்
சிங்கம், கன்னி, துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு கிழக்கு, தெற்கு வாயில் வீடும்
விருச்சிகம், தனுசு, மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு தெற்கு மேற்கு வாயில் வீடும்
கும்பம், மீனம், மேடம் இராசியில் பிறந்தவர்களுக்கு மேற்கு. வடக்கு வாயில் வீடும் உத்தமம்.
இராசிப் பொருத்தம், வாயிற் பொருத்தம் இரண்டும் பொருந்தில் உத்தமம். ஒன்று பொருந்தில் மத்திமம். இரண்டும் பொருந்தாவிடில் அதமம்.
10. வீட்டின் நிலப்பிரமாணம்
வீடு கட்டும் நிலம் ஆகக் குறைந்தது 80 முழ நீளமும், 78 முழ அகலமும் கொண்டதாக இருத்தல் வேண்டும். இப்பிரமாணத்துக்கு குறைந்தளவுள்ள நிலத்தில் வீடு கட்ட வேண்டி நேரிடின் நிலத்தின் அகலத்துக்குத்தக்க நீளத்தை அளந்து அவ்வளவு நிலத்தையும் புறம்பான காணியாக எல்லையிட்டு, அக்காணிக்குள் வீட்டு நிலம் வகுத்தல் நலம்.
11. வீட்டுக்கு வாயில் வகுத்தல்
மனையின் நீளத்தை 9 பாகமாகப் பகுத்து வலப்பாலில் 5 பாகமும், இடப்பாலில் 3 பாகமும் கழித்து மற்றொரு பாகமாக வாயில் வகுக்க வேண்டும்.
12. வீட்டுக்குத் தோஷமுள்ளவை
புதிதாகக் கட்டும் மனைக்கு கிழக்கு. தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு இத்திக்குகளிலே சமீபமாக வேறு வீடுகளிருப்பது தோஷம். இடையில் வழி இருப்பின் அதிக தோஷமல்ல. தன் வீட்டுக்குக் கிழக்கே இருக்கும் வீடு 87 முழத்திற்கும், தென்கிழக்கே, தெற்கே இருக்கும் வீடுகள் 73 முழத்திற்கும் தென்மேற்கே இருக்கும் வீடு 83. முழத்திற்கும் அப்பாலிருந்தால் தோஷமல்ல. வீட்டினுள் எதிருக்கெதிராய் ஒன்றையொன்று பார்க்கும்படி இரட்டைக் கூடங்கள் அமைக்கலாகாது. வீட்டின் பார்வையில் தூலங்களின் குத்தாயினும் மூலைக்குத்தாயினும் காணப்படுவது தோஷம்.
13. வீடு கட்டும் மாதங்கள்
சித்திரையில் வடக்கு வாயில் வீடும், வைகாசியில் வடக்குத் தெற்கு வாயில் வீடுகளும், ஆடியில் கிழக்கு வாயில் வீடும். ஆவணியில் கிழக்கு மேற்கு வாயில் வீடுகளும், ஐப்பசியில் தெற்கு வாயில் வீடும். கார்த்திகையில் தெற்கு வடக்கு வாயில் வீடுகளும், தையில் மேற்கு வாயில் வீடும், மாசியில் மேற்கு கிழக்கு வாயில் வீடுகளும், எழுந்திருப்பு முகூர்த்தத்தில் எல்லா வீடுகளும் கட்டத்தகும். ஆனி, புரட்டாதி. மார்கழி, பங்குளி மாதங்களில் வீடு கட்டலாகாது.
14. கிருகப்பிரவேசத்துக்கு வேண்டியவை
தீபம், விநாயகர், இலட்சுமி, சரஸ்வதி, படங்கள், பூரண கும்பம். புஷ்பமாலை, மஞ்சள், தாம்பூலம், பால், பழம், நைவேத்தியங்கள் உப்பு. நெல் முதலிய தானியங்கள், சுவர்ணம், வெள்ளி, நவரத்தினம், நலவஸ்திரம், ஆபரணம், இவைகளை மங்கல வாத்திய கோஷத்தோடு சுமங்கலிகள் கொண்டுவர வீட்டினுள் பிரவேசிக்கவும்.
15. வீடு கட்டுவதற்கு ஆகாத இடங்கள்
தெற்கு மேற்குத் தாழ்ந்த பூமி, முக்கோண வடிவான பூமி, சந்நியாசிகள். பேய் பிடித்தவர்கள், பேய் வித்தைக்காரர்கள், சண்டாளர் வசித்த இடங்கள். கோயிலிருந்த இடங்கள், மயானம், யுத்தஞ் செய்த இடம் முதலியன வீடு கட்டுவதற்கு ஆகாதவை. துலா. கோபுரம், அரசு, வன்னி, வில்வம் இவைகளின் நிழல் வீட்டிற்படலாகாது.