'அமா' என்பது ஓரிடத்திற் பொருந்தியது, குவிந்தது, அடுத்தது என்று பொருள்படுவது. ஒரு இராசியிற் சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும் வாசியான நாள் அமாவாசி எனப்படும். திதி என்பது சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தூரத்தை - பாகையைக் குறிப்பிடுவதாகும். சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் பூமிக்கு நேரே வரும் போது அமாவாசைத் திதி உண்டாகும்.
சூரியன் ஞானகாரகன், ஆத்மகாரகன் என்பர். ஆண்மை, ஆற்றல், பராக்கிரமம், வீரம், தீரம், தவம் என்பன சூரியனாலேயே தோன்றுகின்றன என்பர். சந்திரன் மனதிற்கு அதிபதி. மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, உற்சாகம், இன்பம் முதலியவை சந்திரன் உதவியாற் பெறத்தக்கனவாம். இத்தகைய ஆற்றல் மிக்க சூரிய, சந்திரர் இருவரும் ஒரு இராசியில் சஞ்சரிக்கும் தினம் புனிதமான நாள்; உயிர்களின் சுகபோகமாகிய மாறுதலை உணர்த்தும் நாள். மேலும், அனைத்துத் தேவர்களும் அமாவாசையில் சிறப்புக்குரியவர்களாக இருப்பர். அமாவாசையன்று நோன்பு நோற்றல், விரதம் காத்தல் சிறந்ததாக இருப்பதுடன் இறைவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதும் பெருமை தருவதுமான நற்செயலாகவும் இருக்கிறது.
இத்தகைய அமாவாசை நாளில் புண்ணிய தீர்த்தத்திலே படிந்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து அதிதிகளோடும், சுற்றத்தாரோடும் உணவு உட்கொண்டு விரத நியமத்துடன் இருப்பது தீர்த்த சிரார்த்தம் எனவும், காமிய சிரார்த்தம் எனவும் பெயர் பெறுகிறது.
ஒருவர் இறக்கும் போது தூல சரீரம் (உருவுடம்பு) அழிந்து போகிறது. சூக்கும சரீரம் (அருவுடம்பு) அழிவதில்லை. சூக்கும சரீரத்தேடு செல்லும் உயிர், பூமியில் புரிந்த வினைகளுக்கு ஏற்ப, இன்ப, துன்பங்களைச் சுவர்க்கம் மற்றும் நரகத்தில் அனுபவிக்கும். இவ்விதம் அனுபவித்துத் தொலையாது எஞ்சி நின்ற பிராரத்துவ வினைகளினாலேயே உயிர் மீண்டும் பூமியில் வந்து பிறக்கின்றது.
புத்தியின்றி செய்த வினைகள் அந்தியேட்டி, தகனக்கிரியைகளால் மாறும்; புத்திப் பூர்வமாகச் செய்தவற்றை அனுபவித்தே ஆக வேண்டும். முன்னோர் செய்வினை தேய்தற் பொருட்டுப் புதல்வர் செய்வது முன்னோர் வழிபாடு, அதாவது பிதிர் சிரார்த்தம். பிதிர் வழிபாட்டை ஏற்று இறைவன் பிதிரர் எப்பிறப்பிற் புகுந்தனரோ அப்பிறவியிற் செலுத்திப் பயனடைவித்தற் பொருட்டு பிதிர் தேவரைப் படைத்தனர். பிதிர் தேவர்களைப் பூசிக்க அவர்கள் அவ்வழிபாட்டை ஏற்று இறந்தவர்களுக்கு உபகரிப்பர்.
அமாவாசைகளிலே, ஆடிஅமாவாசை சிறப்புடையது. தை அமாவாசையும் சிறந்தது என்பர்.