ஜோதிடவியல் அவரவர் பிறந்த நேரத்து கிரக நிலைப்படி இன்னாருக்கு தனயோகம், இன்னாருக்கு தனயோகமில்லை என்று வரையறுக்கிறது. அனைவருக்கும் தனயோகம் என்பது ஜோதிடவியலின்படி கனவிலும் அசாத்தியமான ஒன்றுதான் . ஆனால் ஜாதகச் சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள், 9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாகக் கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே என்று ஆணித்தரமாக கூறலாம். எத்தனை மோசமான ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் ஒரே ஒரு பாவமாவது, ஒரே ஒரு கிரகமாவது நற்பலன்களை வழங்கும் நிலயிலே உள்ளது.
எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன்களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள், பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி தம் ஜாதகத்தில் நற்பலன்களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம் என்பது என் கண்டு பிடிப்பு. இதை என் கண்டு பிடிப்பு என்று மார் தட்டிக் கொள்வதைவிட அநேகர் வாழ்வில் தெய்வத்தின் திருவருளாலும், பெற்றோரின் புண்ணிய பலத்தாலும், நடந்து வருகிறது என்று கூறுவதே மிகச் சரியானதாகும்.
ஆம்... மிக சாதாரண ஜாதகத்தில் பிறந்தவர்களும், ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகம் நல்ல நிலையில் இருக்க அந்த கிரகம் அல்லது அந்த பாவம் காரகத்துவம் வகிக்கும் விசயங்களில் மட்டும் ஈடுபட்டு தனயோகத்தை அனுபவிப்பதை காண முடிகிறது. மற்ற 8 கிரகங்கள், 11 பாவங்கள் தொடர்பான விஷயங்களில் அவர்களுக்கு கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் தன யோகம் மட்டும் தொடர்கிறது.
அதே நேரத்தில் 11 பாவங்கள், 8 கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவை காரகத்துவம் வகிக்கும் விஷங்களையெல்லாம் விட்டு விட்டு தம் ஜாதகத்தில் தீயபலன் தரும் ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகத்தின் காரகத்துவ விஷயங்களில் ஈடுபட்டு உலகே மாயம் என்று பாடி, சோகம் கொண்டாடுவதையும் காணமுடிகிறது. இந்த கட்டுரைத் தொடருக்கான அடிப்படைத் தத்துவம் இதுதான்...
நாம் அனைவரும் தனயோகம் பெற வேண்டுமானால் அதற்கு செய்ய வேண்டியது ஒன்றுதான்.
நம் ஜாதகத்தில் கெடுபலன்களை அள்ளித் தரும் நிலையில் உள்ள பாவங்கள், கிரகங்கள் எவை, அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள், மனிதர்கள், தொழில்கள், திசை, எண்கள் எவை என்று பார்க்க வேண்டும். அவற்றிற்கு தொடர்பில்லாத வகையில் வாழ்வை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து... நம் ஜாதகத்தில் மிக நல்ல பலனைத் தரும் நிலையில் உள்ள ஒரே பாவம் அல்லது கிரகம் எது என்று பார்க்க வேண்டும். அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள், மனிதர்கள், தொழில்கள், திசை, எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு 100 சதவீதம் தொடர்புள்ள வகையில் வாழ்வைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
முதலில் பாவங்களை பற்றி பார்ப்போம்.
லக்னபாவம்:
உங்கள் ஜாதகத்தில் லக்னபாவம் சுபபலமாயில்லை என்று வைய்யுங்கள். அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். அழகு, அலங்காரம், டம்பம், சுயதம்பட்டம் சொந்த அபிலாஷகள், லட்சியங்கள், யோசனைகளை மூட்டை கட்டிவிட வேண்டும். ஜாதகத்தில் 3, 4, 5, 7, 9, 11 பாவங்களில் ஏதேனும் ஒரு பாவமேனும் சுபபலமாய் உள்ளதா பாருங்கள்.
3 ஆம் பாவம் சுபபலமாயிருந்தால்
இது இளைய சகோதர, சகோதிரிகளை காட்டுமிடம். உடன் பிறந்தவர்களில் ஜாதகங்களை ஜோதிடரிடம் காட்டி அல்லது தாங்களே பார்த்து அவர்களில் யாருடைய ஜாதகம் பலம் வாய்ந்ததாக உள்ளதோ அவர்களுடைய யோசனைப்படி, அவர்களின் கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம். (குறிப்பிட்ட சகோதரர் அல்லது சகோதிரியின் ராசி தங்களுக்கு வசியம் / நட்பு ராசியாக இருக்க வேண்டும்)
4ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்
இது தாய், தாய் வழி உறவுகளை காட்டுமிடம். எனவே சென்ற பத்தியில் கூறியபடி தாய், தாய் வழி உறவுகளின் ஜாதகங்களை, ராசிகளைப் பரிசீலித்து அதில் தேர்வு பெறுபவரின் யோசனைப்படி, அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
5ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்
இது புத்தி, புத்திரர்களை காட்டுமிடம். எனவே டேபிள் வர்க், பேப்பர் வர்க் மட்டும் செய்து வர வேண்டும். வயது வந்த மகள் / மகன் இருந்தால் அவர்களது யோசனை, துணையை நாடலாம். (அவர்களின் ஜாதகங்கள் சுபபலமாயிருப்பது முக்கியம். அவர்களின் ராசி தங்கள் ராசிக்கு வசியம் அல்லது நட்பாக இருப்பதும் முக்கியம்). மேலும் பெயர் , புகழுக்கு ஆசைப்படாது, புத்திர, புத்திரிகள் தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணாது வாழவேண்டும்)
7ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்
இது கணவன் / மனைவியை காட்டுமிடம். கணவன் / மனைவியின் ஜாதகம் சுபபலமாய் இருந்து, அவரது ராசி தங்கள் ராசிக்கு வசியம் / நட்பு ராசியாக இருந்தால் அவரது யோசனைப்படி, அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
9ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்
இது தந்தை, தந்தை வழி உறவினர், குருவைக் காட்டுமிடம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாதகம் சுபபலமாய் இருந்து, அவரது ராசி தங்கள் ராசிக்கு வசியம் / நட்பு ராசியாக இருந்தால் அவரது யோசனைப்படி, அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
11ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்
இது மூத்த சகோதர, சகோதிரிகளைக் காட்டுமிடம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாதகம் சுபபலமாய் இருந்து, அவரது ராசி தங்கள் ராசிக்கு வசியம் / நட்பு ராசியாக இருந்தால் அவரது யோசனைப்படி, அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
ஜாதகத்தில் 4 ஆம் பாவம் கெட்டிருந்தால்
"ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது" என்று நினைத்து மேற்படிப்புகளுக்கு குட்பை சொல்லிவிட வேண்டும். தாயிடம் ஒட்டி உறவாடுவதை தவிர்த்து விடவேண்டும். தாய் வழி உறவினர்களிடமும் பட்டும் படாது உறவாட வேண்டும். சொந்த வீடு, வாகனத்துக்குக் கனவு காணக் கூடாது. ஒருவேளை ஜாதகத்தில் சுக்கிரன் சுபபலமாய் இருந்து வீடு, வாகன யோகம் ஏற்பட்டிருந்தாலும் அதை சொந்தத்துக்கு மட்டும் உபயோகிப்பது நல்லது. வாடகை விடுவது, ஹவுஸிங்க ஆட்டோ மொபைல்ஸ் போன்ற தொழில்களில் இறங்க கூடாது.
ஜாதகத்தில் 5 ஆம் பாவம் கெட்டிருந்தால்
இது புத்தி, புத்திர ஸ்தானம். டேபுள் வர்க், பேப்பர் வர்க்கில் ஈடுபடக் கூடாது. அதிர்ஷ்டத்தை நம்பி எந்தச் செயலிலும் இறங்க கூடாது. சொந்த யோசனையுடன் அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போனதே வழி என்று செயல்படக் கூடாது. "தென்னையப் பெத்தா / பிள்ளையப் பெத்தாக் கண்ணீரு!" என்ற கண்ணதாசனின் வரிகளை நினைவில் வைத்து "தாயும் சேயும் என்றாலும் வாயும் வயிறும் வேறு" என்று உணர்ந்து வாழ வேண்டும். பிள்ளைகள் மேல் பற்றை வளர்த்துக் கொள்ளக் கூடாது.
ஜாதகத்தில் 7 ஆம் பாவம் கெட்டிருந்தால்
இது மனைவியைக் காட்டுமிடம். வீதி வரை மனைவி என்ற கண்ணதாசனின் தத்துவப் பாடல் வரி. இறப்புக்கு பின் நம்முடன் வரப்போவது இப்பிறவியின் நினைவுகளே. எனவே உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வாழவேண்டும். மற்ற உறவுகள் எல்லாம் பிறப்பிலேயே அமைந்து விடுகின்றன. ஆனால் கணவன் / மனைவி என்ற உறவு விசயத்தில் மட்டும் நமக்கு இறைவன் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைத் தருகிறான். எனவே 7 ஆம் பாவம் கெட்டிருப்பின் அழகு, கவர்ச்சி, வசதி, கல்வி, குறைவாக உள்ளவரை வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்து கொள்வது நல்லது.
ஒவ்வொரு ஆணும் உலக அழகியே மனைவியாக வரவேண்டும் என்று துடிக்கிறான். ஒவ்வொரு பெண்ணும் மன்மதனே தன் கணவனாக வரவேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால் யதார்த்தத்தில் பார்க்கும்போது 7 ஆம் பாவம் கெட்டுள்ள ஆண், பெண்ணுக்கு அவர்கள் ஆசைக்கேற்ற வாழ்க்கைத் துணை அமையும் போது அது நரகமாக மாறி விடுகிறது. அதே நேரம் 7 ஆம் பாவம் கெட்டிருந்தாலும் அழகு, கவர்ச்சி, வசதி, கல்வி குறைவாக உள்ளவரை வாழ்க்கைத் துணையாக ஏற்று ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதைக் காணமுடிகிறது.
9 ஆம் பாவம் கெட்டிருந்தால்
சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரை போல வருமா என்று நினைத்து சொந்த நாட்டிலேயே குப்பை கொட்டுவது நல்லது. வெளிநாடுகளில் வேலை தேடுவதோ வெளிநாட்டு தொடர்புகளைக் கொண்டு தொழில், வியாபாரம் செய்யவோ முனையக் கூடாது.
11 ஆம் பாவம் கெட்டிருந்தால்
இது மூத்த சகோதர, சகோதரிகளை காட்டுமிடம். லாபத்தைக் காட்டுமிடம். இந்த இடம் கெட்டிருந்தால் லாபத்திற்கோ, வட்டிக்கோ ஆசைப்படக் கூடாது. மூத்த சகோதர, சகோதரிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்யக் கூடாது.
(குறிப்பு: மொத்தம் 12 பாவங்கள் இருக்கும்போது இந்த தொடரில் 3, 6, 8, 10, 12 பாவங்கள் கெட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது கூறப்படவில்லை. காரணம் இவை கெட்டால்தான் நல்லது என்பதே ஆகும்.)
3ஆம் பாவம் கெட்டால்
மனதில் தைரியம் மிகும். பிரயாணங்களுக்கு அஞ்சாமல், கால்களுக்குச் சக்கரம் கட்டிக் கொண்டு சுற்றி வந்து பணம், பொருள் ஈட்டுவீர்கள். சுயமுயற்சியில் நம்பிக்கை வைப்பீர்கள். (அதே நேரம் தைரியம் அளவுக்கு அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்) பிரயாணங்களால் ஏற்படும் நோய்களான மூலம், ஆஸ்துமா போன்றவை வராது பார்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் பெற்றோர்களுக்கு நீங்கள் தான் இறுதி வாரிசாக இருக்க வாய்ப்பு அதிகம். இதர கிரகங்களின் பாதிப்பால் உங்களை அடுத்து வாரிசுகள் பிறந்தாலும் அவர்களை விட நீங்கள் உயர்ந்த நிலையில் இருப்பீர்கள். என்ன ஒரு பிரச்சினை என்றால் வயதாக வயதாக காதுகள் தான் குறைகளாகிவிடும்
6 ஆம் பாவம் கெட்டால்
6 ஆம் பாவம் கெட்டால் எதிரிகள் ஓடி ஒளிவர். கடன்கள் தீரும், நோய்கள் குணமாகும். கோர்ட்டு வழக்குகளில் சாதகம் ஏற்படும்.
8 ஆம் பாவம் கெட்டால்
8 ஆம் பாவம் கெட்டால் ஆயுள் பெருகும். எட்டு துஸ்தானம் என்பதால் இது பலம் பெறுவது ஆயுட்குறைவைக் காட்டும். எனவே இந்த பாவம் சுபபலமாய் இருந்தால் திடீர் மரணம் ஏற்படும்.
12 ஆம் பாவம் கெட்டால்
12 ஆம் பாவம் தூக்கம், உடலுறவு, செலவுகளை காட்டுமிடமாகும். "நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்." "ஆன முதலில் அதிகம் செலவானால் எல்லோர்க்கும் கள்ளனாய், நல்லோர்க்கும் பொல்லனாம் நாடு" "விந்து விட்டான் நொந்து கெட்டான்" "இந்திரியம் தீர்ந்து விட்டால் சுந்தரியும் பேய் போலே" இதெல்லாம் நீங்கள் அறியாத ஒன்றல்ல... ஆக தூக்கம், செலவு, செக்ஸ் குறைந்தால் தான் வாழ்வில் உயர்வு ஏற்படும் என்பது உறுதி. இவை குறைய 12ஆம் பாவம் கெட்டுத்தானே ஆகவேண்டும்.
எனவே தான் மேற்சொன்ன பாவங்கள் கெட்டிருந்தால் தனயோகம் பெற என்ன செய்ய வேண்டும் என்று கூறவில்லை. மேற்சொன்ன பாவங்கள் வாழ்வில் தொல்லைகள் குறைந்து தானாகவே தனயோகம் ஏற்பட்டு விடும்.


இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.