நீலம் அலுமினியம் டிரை ஆக்ஸைடு என்ற மூலப்பொருளால் ஆனது. இக்கல்லுக்கு நீல நிறத்தைத் தருவதற்கு டைட்டானியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. ஆழ்ந்த நீல நிறமுள்ள நீலக்கல்லில் டைட்டானியம் அதிகம் இருக்கும். இதன் நிறத்தின் பெயரே கல்லின் பெயரானது. முன்பெல்லாம் உயர்தரமான நீலம் இந்தியாவில் காஷ்மீரில் கிடைத்து வந்தது. தற்போது இந்தியாவில் கிடைப்பது அரிதாகிவிட்டாலும் தாய்லாந்து, இலங்கை, கென்யா, டான்சானியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து கிடைக்கப் பெறுகிறது.
நீலம் கடினத்தன்மை அதிகமுடையதாக இருப்பதால் நீண்ட நாட்களுக்குப் பளபளப்பு குன்றாமல் இருக்கும். வெளிர் நீலக்கற்கள் பாங்காங்கில் அடர் நீலமாக மாற்றப்பட்டு பாங்காங் நீலம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. அதிக எடையும், சுத்தமான தன்மையும் கொண்ட கல்லைக் கெட்டி நீலம் என்கிறார்கள்.
பர்மா மற்றும் காஷ்மீரில் அற்புதமான நீலக் கற்கள் கிடைக்கின்றன. இவை அழகான ஒளிக்கற்கள் கிடைக்கின்றன. இவை அழகான ஒளிமிகுந்த, கண்களைக் கவரக்கூடியவையாக இருக்கும். நீலக்கல்லை அணிவதால் போட்டி, பொறாமை மற்றும் கண் திருஷ்டிகள் விலகும். மன அமைதியையும், சுகமான, ஆபத்தில்லாத பயணங்களையும் தரும். இடமாறுதலையும், நாள்பட்ட துன்பங்களையும் போக்கும். நீலக்கல்லிலேயே தோசமற்ற இந்திரக்கல் கிடைக்கப் பெற்று அதை அணிபவர்களுக்கு ஏழ்மை விலகி செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமை போன்ற யாவும் தேடி வரும். கஷ்டங்கள் அனைத்தும் விலகும். நீலக்கல்லை நீல நிற சனிக் கிரகத்தின் ஆதிக்கத்திற்குள்ளோரானான மகர, கும்ப ராசி உடையவர்களும், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, சனி திசை போன்றவைகளைக் கொண்டவர்களும், எண் கணிதப்படி 8, 17, 26 நாளில் பிறந்தவர்களும் அணியலாம்.
மருத்துவ ரீதியாகவும் வாதநோய், பாரிச வாய்வு, எலும்பு வியாதி, பல் நோய், ஜலதோஷம், சித்த சுவாதீனம், உடல் சோர்வு, மந்தநிலை போன்ற நோய்களிலிருந்தும் ஓரளவுக்கு விடுதலை கிடைக்கும்.
நீலக்கல்லை வெள்ளியில் பதித்து உடலில் படும்படி நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலில் அணிந்து கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் அணிவது உத்தமம். நீலக்கல் அணிவதால் நம்மைப் பிடித்துள்ள நீசக்குணங்கள் விலகி சனிக் கிரகத்தின் அருளை முழுமையாகப் பெறமுடியும்.
அக்கோமரின், நீலக்கல்லிற்குப் பதிலாக, இந்த அக்கோமரின் கற்களையும் அணியலாம். இதுவும் பார்ப்பதற்கு அழகாகவும், வெளிர்நீல நிறமுடையதாகவும் விலையில் சற்று குறைவாகவும் கிடைக்கின்றது. சனியால் ஏதாவது பாதிப்பு உடையவர்கள் அக்காலங்களில் மட்டும் இக்கற்களை அணிந்து கொள்ளலாம். மற்றோர் அணிவது கூடாது.