இலக்கியம் பயின்றவர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் புரிந்து கொள்ளும்படியான சுவைக்கும்படியான கற்கண்டு கணிச்சுவை நூல். இதற்கு முன் பல படைப்புகளைத் தந்திருக்கும் நூலாசிரியர் இந்நூலில் பக்திச் சுவை ததும்பும்படியாக உரை எழுதி இருப்பது மிகவும் சிறப்பு. திருப்பாவையில் 30 பாசுரங்கள் உள்ளன. அனைத்துப் பாசுரங்களுமே மார்கழியில் அதிகாலையில் எழுந்து துயில் நீங்கி கண்ணனை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும் என்று தனது தோழியரைத் துயில் எழுப்பவதாக பாடல்கள் அமைந்துள்ளன. 30 ஆவது பாசுரத்தில் 30 பாடல்களையும் பாடி பெருமானை வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும் என்று கூறுகிறார் ஆண்டாள். இதனை நூலாசிரியர் உரை வழி சிறப்பாக அறியலாம்.
வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை, திங்கள் திரு முகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி என்று தொடங்கி எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் என்று முடியும் முப்பதாவது பாடல். இப்பாடலில் வங்கக் கடலாகிய திருப்பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிர்தத்தையும் அசுரர்களுக்கு ஆலகாலத்தையும் அளித்து, தீயவர்களை அழித்து நன்மைகளைக் காத்த மாதவனை பாவை நோன்பு நோற்கும் பாவையர்கள் அதிகாலைத் துயில் எழுந்து நீராடி மணலால் பாவை செய்து மலர்களைத் தூவி பெருமானது திருநாமங்களையும் புகழை எல்லாம் பாடி வணங்குவதால் நன்மை உண்டாகும் என்று பாடுவதாக அமைந்துள்ளது. இறுதியாக ஆண்டாள் பாடி அருளிய இச்சங்கத் தமிழ் பாடல்கள் 30 பாடல்களையும் பாடி பெருமாளை வழிபடுபவர்கள் பெருமானது அருளாசியுடன் எங்கு சென்றாலும் செல்வ வளம் பெற்றுச் சிறப்புடன் வாழ்வார்கள் என்பது திண்ணம் என்று உரை வழங்கி இருப்பது நூலாசிரியருக்குரிய தனிக்கலை.
நாச்சியார் திருமொழி 14 பதிகத்தில் 143 பாசுரங்கள் அமைந்துள்ளன. இதில் நான்கு, ஐந்து, ஆறு ஆகிய பதிகத்தில் 11 பாடல்களும் ஏனையப் பதிகங்களில் பத்துப் பாடல்களும் அமைந்துள்ளன. பெரும்பான்மையாக, பதிகத்தின் இறுதிப் பாடல்கள் குறிப்பிடும் கருத்து இப்பாடல்களை எல்லாம் படித்து வந்தால் நன்மை உண்டாகும் என்று பாடியுள்ளார். நாச்சியார் திருமொழி ஆண்டாளின் மோகம் நிலையாகக் கருதாமல் முக்தி நிலையாக உணர வேண்டும் என்பது ஆசிரியர் ஆன்மீகத்தில் கொண்டுள்ள குறியீட்டை நமக்கு உணர்த்துகிறது. நாச்சியார் திருமொழி ஆண்டாள் எனும் கோதை, கண்ணன் மீது கொண்ட பக்தி கலந்த தீராதக் காதலைப் பாடுகிறாள்.
நான்காம் திருமொழியில், திருவரங்கப் பெருமானோடு சேரும்படியாக கூடலே நீ கூடிடு என்று பாடுகிறாள். ஐந்தாம் திருமொழியில், குயிலைத் தூது அனுப்புகிறாள். என் கண்ணன் என்னை விரைந்து அடையும்படியாக, குயிலே நீ விரைந்து கூவ வேண்டும் என்று பாடுகிறாள். ஆறாம் திருமொழியில், கண்ணன் மனக்கோலத்தில் வந்து ஆயிரம் அலங்கரிக்கப்பட்ட யானைகள் சூழ பரிவாரங்களுடன் வந்து தன்னை மணப்பதாகக் கனாக் கண்டேன் தோழி என்று பாடுகிறாள். ஏழாம் திருமொழியில், கண்ணனின் கையில் இருக்கின்ற சங்கிடம் பேசுவதாகப் பாடல்கள் அமைந்துள்ளன. இதில் கண்ணனின் கையை விட்டுப் பிரியாமல் இருக்கும் சங்கே சக்கரம் கூட எதிரியின் தலையை துண்டிக்கச் சிறிது நேரம் சென்று விட்டுத் திரும்பி வருகிறது. ஆனால், நீயோ கைகளிலேயேப் பிரியாமல் இருக்கிறாய், கண்ணனின் வாய்ச்சுவையை எனக்குச் சொல்லி, எனக்கு நன்மை ஏற்படுத்த வேண்டும் என்று பாடுகிறாள்.
எட்டாம் திருமொழியில், கருமேகத்தைத் தூதாக அனுப்புகிறாள் ஆண்டாள். கண்ணனது காதலை பெறாது என் கண்களில் அழுது வழியும் கண்ணீர், மார்பகங்களை நனைக்கும் படியாக வருந்துகின்றேன். இதனால் என் பெண்மை நலமும் அழிகிறது வருத்தத்தை தருவதுதான் அப்பெருமானுக்கு அழகோ இதனால் தூது சொல்லுங்கள் மேகங்களே என்று பாடுகிறாள். அதுமட்டுமல்லாமல் இயற்கையைத் தூது அனுப்புகிறாள், பூக்களைத் தூது அனுப்புகிறாள். இப்படி தனக்குள்ள பக்தி நிலையில் உள்ள தீராத காதலெல்லாம் இந்த நாச்சியார் திருமொழியில் பாடலாக இடம் பெற்றுள்ளது.
மொத்தத்தில் நூலாசிரியரின் மணி விளக்க உரை அரசனின் செங்கோலாய் மக்கள் மனதில் ஆட்சி செய்யும் என்பது திண்ணம். அனைவரும் இப்புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம், அனைத்து நலனையும் பெற்று, பெருமகிழ்வாய் வாழலாம்.