தினமணி நாளிதழில் பணியாற்றியதுடன், தினமணிக்கதிர் இதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றிய ப. இளையபெருமாள் என்கிற இயற்பெயர் கொண்ட நண்பர் சுகதேவ், தினமணிக்கதிர் இதழில் எழுதி வந்த ‘நோட்டம்’ எனும் தலைப்பிலான கட்டுரைகள், தினமணி வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. நோட்டம் பகுதிக்காக அவர் எடுத்துக் கொண்ட தலைப்புகள் அனைத்தும் மிகவும் சிறப்பு மிக்கவை. அன்றும் இன்றும் என்றும் வாசிக்கத்தக்கவை. வாசகர்களின் மனநிலையை அறியாது, வாசகர்கள் புரிந்து கொள்ளாதபடி தங்களது திறன்களையெல்லாம் காட்டி எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், சுகதேவின் எழுத்துகள் அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவரும் வகையில் எளிமையாகவும், பல்வேறு தகவல்களை உள்ளடக்கியதாகவும், படிப்பதற்குச் சுவையாகவும் அமைந்திருக்கும்.
சுகதேவின் எழுத்துகள், என்னைப் போன்ற தினமணி வாசகர்களுக்கு மிகவும் பிடித்தமானவை. ஒரு கட்டுரையைத் தொடங்கி, அதனைச் சுவையாக நகர்த்திக் கொண்டு சென்று, கடைசி வரை படித்து முடித்து விட வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தும் வழியில் அவரது எழுத்துகள் அமைந்திருக்கும். அதற்கு அவரது நேர்காணல்களும் விதிவிலக்கல்ல. தினமணி நாளிதழில் இடம் பெறும் அவரது எழுத்துகளிலான கட்டுரைகளுக்கு மட்டுமின்றி நேர்காணலுக்கும் பல ரசிகர்கள் இருந்தனர்.
கேள்விகள் கேட்டுப் பதில்களைப் பெறும் ஓர் உரையாடல்தான் ‘நேர்காணல்’ என்று எளிதாகச் சொல்லிவிடலாம். நேர்காணல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. செய்தியாளர்களாக இருப்பவர்கள் பலர், நேர்காணலுக்குச் சென்று சில கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பெற்றுக் கொள்வதும், நேர்காணல் அளிப்பவர் சொல்லும் செய்திகளை மட்டும் குறித்துக் கொண்டு வந்து அதனை எழுதி வெளியிடுபவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் சிறந்த செய்தியாளர்கள், நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டவர் எத்துறையில் சிறப்பு பெற்றவர்? என்பதை அறிந்து, அத்துறையில் அவரது சிறப்புகளையெல்லாம் கேட்டுப் பெறுவதுடன், அத்துறை சார்ந்த பல்வேறு கருத்துகளையும் அவரிடம் கூடுதலாகக் கேட்டுப் பெற்று எழுதுவதுதான் அந்த நேர்காணலை மிகவும் சிறப்புக்குரியதாக்குகிறது. சுகதேவின் நேர்காணல்கள் அனைத்தும் சுவையானவை மட்டுமில்லை, பல்வேறு சிறப்புகளை வெளிக் கொண்டு வரும் தன்மை கொண்டவை.
தென்கச்சி சுவாமிநாதன், அருணா ராய், மாலா சந்திரா, வசந்தா கந்தசாமி, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், சுதா நாராயணமூர்த்தி, அமர்த்தியா சென், ஏ.எம்.எம். அருணாசலம், மேட்லைன் ஆல்பிரைட், சுவாமி நித்யானந்த கிரி, ஷப்தர் ஹஸ்மி, அருந்ததி ராய், ஸ்டீபன் ஹாகிங், சுப்புடு, அனிதா ரத்னம் என்று புகழ்பெற்ற 15 பேர்களிடம் சுகதேவ் செய்த நேர்காணல்களை சந்தியா நடராசன் தொகுத்து, அவரது சந்தியா பதிப்பகத்தின் வழியாக நூலாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
1970 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை தென்கச்சி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த நிலையில், அப்போதைய அரசியலில் முன்னிலையிலிருந்த எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க கட்சியிலிருந்து அழைப்பு வந்த போதும், அதனை நிராகரித்து விட்டு, தனக்குக் கிடைத்த அகில இந்திய வானொலி நிலையப் பணியைப் பெற்று, ‘இன்று ஒரு தகவல்’ மூலம் புகழ் பெற்ற தென்கச்சி சுவாமிநாதன் நேர்காணலில் அவர் சொன்ன பல தகவல்கள் சிறப்பாக இருக்கிறது.
26 ஆண்டுகள் சளைக்காத சமூகப் பணிகளுக்காக, ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் பிலிப்பைன்சின் மூன்றாவது அதிபராகப் பதவி வகித்த ரமோன் மகசேசே பெயரிலான விருதினைப் பெற்ற அருணா ராயின் சமூகப் பணிகள் பற்றி முழுமையாகச் சொல்லும் நேர்காணல் சிறப்பாக இருக்கிறது. இதே போன்று, கணினித் துறையில் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற ஜாவா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றிய மாலா சந்திராவின் வழியாக, இந்தியப் பெண்களின் நிலையையும், அவர்களது வாழ்க்கைப் போராட்டத்தையும் வெளிக்கொண்டு வந்த நேர்காணல் சிறப்பாக இருக்கிறது.
கணிதத்துறையில் சிறப்பாகப் பங்களிப்பு செய்த சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் வசந்தா கந்தசாமிக்கு வழங்கப்பெற்ற கேம்பிரிட்ஜ் பன்னாட்டு உயிர்வரைவியல் மையத்தின் சிறந்த பெண்மணி விருது குறித்த பெருமையைச் சொல்லி, இந்திய அரசின் அறிவியல் விருதுக்குத் தன்னைப் புறக்கணித்த அரசியல் குறித்துச் சொல்லும் நேர்காணல் பேராசிரியரின் வேதனையை வெளிப்படுத்தினாலும் சிறப்பாக இருக்கிறது. நீதித்துறையில் பணியாற்றும் நீதிபதிகள் அதிகம் பேசக்கூடாது, அவர்களது தீர்ப்புகளே அதிகம் பேசப்பட வேண்டுமென்று சொல்லும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அவர்களது நேர்காணல் மிகச் சிறப்பாக இருக்கிறது.
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் சுதா நாராயணமூர்த்தியின் காதல், திருமணம், நிறுவனத்தின் வளர்ச்சி மட்டுமின்றி அவரது சமூகப்பணிகளை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைந்த நேர்காணலும், கடைசியாக அவர் நல்வாழ்க்கைக்குச் சொன்ன வழிமுறையும் சிறப்பாக இருக்கிறது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் வழியாக, ‘சமூகநலத்தைப் பேணிக்காப்பதில் அரசுக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ, அதற்கு இணையாக குடிமகன்களுக்கும் பொறுப்பு உண்டு’ என்கிற செய்தி சிறப்பாக இருக்கிறது.
டிஐ சைக்கிள் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களைக் கொண்டிருக்கும் முருகப்பா தொழிற் குழுமங்களின் தலைவர் ஏ.எம்.எம். அருணாசலம் நேர்காணல் வழியாக வெளிப்படுத்தும் தொழிற்சிந்தனைகள் மற்றும் தொழில் வளர்ச்சிகள் சிறப்பாக இருக்கிறது. அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்து, வடகொரியா - தென்கொரியா இணைப்புக்கு பேச்சு நடத்தியது மட்டுமின்றி, உலக அளவில் பெண்களின் நலனுக்காக உரத்தக் குரல் எழுப்பி, பெண்களின் நலன்களில் அக்கறை காட்டிய மேட்லைன் ஆல்பிரைட் நேர்காணல் வழியாகச் சொல்லப்பட்ட பெண்களின் முன்னேற்ற நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கிறது.
மேல்நாட்டினர் வியந்து பார்க்கும் வகையில் அமைந்திருப்பது இந்தியாவின் ஆன்மிகம்தான் என்பதை வலுப்படுத்தும் வகையில் அமைந்த நித்யானந்த கிரியின் நேர்காணலில் கிரியா யோகம் குறித்தும், அதனை அடைவது குறித்தும் சொல்லப்பட்ட செய்திகள் சிறப்பாக இருக்கிறது. வீதி நாடகங்களின் வழியே விழிப்புணர்வை ஏற்படுத்திய ஷப்தர் ஹஸ்மி குண்டர்களின் வன்முறைக்குப் பலியான நிலையில், அந்தப் பணியைத் தொடர்ந்து செய்து வரும் அவரது சகோதரி ஷப்னம் ஹஸ்மி பெண்களின் முன்னேற்றத்திற்கும், அதற்காக எடுத்துக் கொண்டிருக்கும் பல்வேறு செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கிறது.
ஒரே நாவலில் உலகப் புகழ்பெற்ற புக்கர் பரிசைப் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் நேர்காணல் வழியாக, அவரது எழுத்துகளை விட அவரது பல்வேறு போராட்டங்களை முன்னிறுத்தும் அமைந்த நேர்காணல் சிறப்பாக இருக்கிறது. ஒரு நோயால் முடக்கப்பட்டு சக்கர நாற்காலியில் பயணித்த போதும், தனது அரிய கண்டுபிடிப்புகளின் வழியாக உலகப் புகழ்பெற்ற ஸ்டீபன் ஹாகிங்கின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமின்றி, தன்னம்பிக்கையின்றி சோர்ந்து கிடக்கும் பல இளைஞர்களுக்கும் வழிகாட்டும் வகையில் சிறப்பாக இருக்கிறது.
இசைக்கச்சேரிகளின் விமர்சனம் என்றாலே அது சுப்புடுவின் விமர்சனம் என்பது அனைவரும் அறிந்ததுதான். தன் விமர்சனத்தில், தனக்குச் சரியெனப்படுவதை எந்தவிதமான மாற்றமுமின்றி வெளிப்படையாகச் சொல்லும் சுப்புடுவின் நேர்காணல் மிகச் சிறப்பாக இருக்கிறது. பரத நாட்டியத்தில் புகழ்பெற்ற நடனக்கலைஞர் அனிதா ரத்னம் பரத நாட்டியக் கலையைப் பற்றிச் சொன்னது மட்டுமின்றி, அமெரிக்கப் பெண்களுக்கும், இந்தியப் பெண்களுக்குமான வித்தியாசத்தை எடுத்துச் சொல்லி, இந்தியப் பெண்கள் தங்களது பழைய நிலையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு புதுமைப்பெண்களாக வலம் வர வேண்டுமென்று சொல்லும் கருத்துகள் மிகச் சிறப்பாக இருக்கிறது.
மொத்தத்தில் சுகதேவ் நேர்காணல்கள் எனும் நூல் சிறப்பாக இருக்கிறது. இந்த நூலினை அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டுமென்பது என் வேண்டுகோள். குறிப்பாக, ஊடகத்துறையில் செய்தியாளர்களாகப் பணியாற்றுபவர்கள் தங்களது எழுத்துகளைப் பட்டை தீட்டிக் கொள்ளவும், தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த நூலை அவசியம் வாங்கி வாசிக்க வேண்டும்.