கௌதமப்புத்தனோ தன் வீட்டைவிட்டு வெளியேறும் நள்ளிரவில் உறங்கும் தன் குழந்தையை முத்தமிடுகிறார். அதுவே, அவரின் கடைசி முத்தமாகும். அதன்பிறகு, அவர் யாரையும் முத்தமிடவில்லை. முத்தங்கள் யாவும் உறைந்து புன்னகையாகிவிட்டன.
இக்கவிதைப் புத்தகத்தைப் படிக்கும் போது, காலத்தின் சுழலிலும் பேரலைகளுக்கும், வெயிலின் வியப்பிலும் இறங்கி வரும் பனியிலும் ஒரு பிறந்த குழந்தையைத் தூக்கிச் சுமப்பது போலவே இருந்தது நூலாசிரியரின் கவிதைகள்.
கவிஞர்கள் எழுதும் கவிதை நூலில் ஏதேனும் ஒரு பக்கத்தில் புத்தர் புன்னகைப்பார். இவர் நூலில் அனைத்துப் பக்கங்களிலும் புத்தரின் பேரழகின் மொழி அடர்த்தியாக, ஒரு வனத்தின் பாதையில் நடப்பது போல், அத்தனை நேர்த்தியாக எழுதப்பட்ட வரிகள். அனைத்துப் பக்கங்களும் புத்தனுக்காகவே செதுக்கப்பட்டக் காலமாக பரிணமித்துள்ளது . எத்தனை நேசிப்பு இருந்தால் நூற்று இருபது பக்கங்கள் சாரமாகியிருக்கும்? அதிசயமாக உணர்ந்தேன், அகம் சார்ந்த புரிதலும் நிகழ்காலத்தில் வாழும் கலையையும் கற்றுத்தரும் கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
மானுடம் நேற்றைய பொழுதின் வன்மத்தில் இன்றைய நாளைக் கொலை செய்துவிட்டு, நாளை கைதியாகவும் தயங்காத உலகத்தில் இந்தக் கவிதைப் புத்தகம் பேரொளியின் காலை வெயில் பனிக்காலத்தின் பின்னிரவில் பொழியும் பனியோடு சில்லிடும் காற்று எப்படி உடலை ஊடுருவுமோ அது போல ஆன்மாவின் இழைகளால் நெய்யப்பட்ட வரிகள். கடைசியில் மின்னுவது புத்தன்தான் அனைத்துமாய் நிறைந்திருக்கிறார்.
“அகம் புற மென
இரு வெளிகளிலும்
நீ ஏற்றிய அறிவெனும் தீபம்
சுடர் விடுகிறது
எனக்கு நான் மட்டுமல்ல
நீயும் விளக்கு தான்”
என்று தொடங்குகிறது முதல் கவிதை.
எளிய நடையில் மனதில் எண்ண ஓட்டம் நீரோடை போல தெளிந்த பார்வை.
”பொய்களைப் புன்னகைத்துக் கடக்கவும்
மெய்களைக் கவனித்து இருக்கவும்
ஞானத்தின் விதை ஒன்றை
நான் விழுங்கக் கொடுத்தாய்
வணக்கத்திலோ வழிபாட்டிலோ
உன்னை அடைவதில்லை
வாழ்வதில் உன்னைக் கண்டடைகிறேன்”
என்ற வரிகள் வாழும் கலையைக் கற்பித்த ஞானம். அதை கண்டடைந்த வழியை நமக்கும் உணர்த்துகிறார்.
காலத்தை இரசிக்க மனிதனுக்கு நேரமில்லை. இயற்கையை நேசித்தால் தான் நீ உன்னை நேசிக்க முடியும் என்பதை
”மஞ்சளாய் வெயில் காய்கிறது
சப்தமே இல்லாமல் மழை பெய்கிறது
கழனியும் கனிமரங்களும்
பூத்துக் குலுங்குகின்றன...”
வேறொன்றும் இல்லை உன் பேரன்புதான் என முடியும் அந்தக் கவிதை இயற்கையினோடு ஒன்றுதல், புத்தனுக்கு வாய்த்தது, உனக்கு வாய்த்ததா? எனில் நேரமில்லை என்பதே நமது பதில்.
”எவ்வளவு முயன்றும்
நிகழ் எனும் மெய்யுரைத்த
புத்தரை
புத்தராகாமலேயே
தரிசித்துக் கொண்டிருக்கிறேன்”
என்ற வரிகள், எப்படி புத்தனாவது என்பதன் சாவி உங்களிடமே இருக்கிறது.
”வாழ்வெனும் பெருங் கோடையை
குளிர்விக்கும் நீர்கனி
நீ எனக்கு”
என்ற வரிகளில் குளிர்மையின் முகமாக புத்தனே பேரன்பின் மொழியாகிறான்.
“சொற்கள் புதைந்திருக்கும்
உன் அடர் மௌனத்தில்
பெருவனம் பூத்து மகிழ்கிறது”
என்ற வரிகளில் தொடங்கும் கவிதை, ஒரு வனத்தின் உதிர்வும், துளிர்ப்பும், ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும், உன் அமைதியை முன்னிறுத்துவதாக எழுதப்பட்ட வரிகளில் சிறகசைக்கிறார் புத்தர்.
”வாழ்வெனும் பெருங்கொடி
உயர உயர உயர்ந்து கொண்டே போகிறது
மகிழ்வைத்துயரை சமமென மதித்து”
எனும் வரிகளில் நிகழ்காலத்தின் உண்மையால் பேரன்பெனும் கிளை பரப்பி, புத்தனின் அறிவுரை மேலோங்கி நிற்கிறது.
“மனிதர்கள் மலர
மனிதர்கள் அடைய
தேடித் தந்தவன் நீ”
என்று மானுடம் தழைக்கவும், நேசம் மலரவும், தீங்கிழைக்காத மனம் மலரவும் புத்தன் இவ்வுலகத்தின் தேடலாகிறான்.
”நான் பிறந்த நாளென்பது
நான் பிறந்த நாளில்
இல்லை
உன்னைக் கண்டடைந்த
நாளில் இருக்கிறது”
எனும் கவிதையின் வழியாக, பிறந்த நாள் என்பது, ஆண்டுதோறும் வரும் நாளில் இல்லை, ‘உன்னைக் கண்டடைந்த நாளில் இருக்கிறது’ என்கிறார். இங்கு ஒவ்வொருவரும் அவர்களைக் கண்டடைந்த நாளாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
“நின்று கிடப்பதில்ல
துயரோ மகிழ்வோ
வாழ்ந்து கடப்பதே
வாழ்க்கை”
என்றும்,
“பிறப்பின் வழியே பெருமைகள் ஏதுமில்லை
அறிவின் வழியே செயல்களின் வழியே
மனிதர்களை அளவிட்டவன் நீ”
என்று புத்தனைத் தனது கவிதைகள் அனைத்திலும் அறிமுகம் செய்யும் இந்நூல் வாசிப்பில் நாமும் முகமற்ற புத்தனாகிறோம் என்பதுதான் உண்மை.