எண்ணமும் எழுத்தும்
| தொகுப்பாசிரியர் |
முனைவர் ம. ஸ்டீபன் மிக்கேல்ராஜ் |
| பிரிவு |
50 பள்ளி மாணவர்களது கதைவசனம் |
| பக்கங்கள் |
146 |
| பதிப்பு |
ஜனவரி’ 2026 |
| ISBN |
9788199184558 |
| விலை |
ரூ. 200/- |
| பதிப்பகம் |
மௌவல் பதிப்பகம், |
| முகவரி |
21- 9, வரதர் தெற்கு மடவிளாகம் தெரு, வலங்கைமான் - 612804. |
| தொலைபேசி எண் |
----- |
| அலைபேசி எண் |
997877 09687, 94888 40898. |
புத்தகப் பார்வை:

புத்தக வாசிப்பு குறைந்து போயிருந்த வேளையில், அலைபேசிகளில் இணையம் இணைந்த திறன்பேசிகளின் (Smartphone) வரவுகளால், முகநூல் (Facebook), புலனம் (Whatsapp), இன்ஸ்டாகிராம் (Instagram), எக்ஸ் (X), வலையொளி (Youtube) உள்ளிட்டப் பல்வேறு சமூக ஊடகங்களில் மக்கள் அதிக நேரங்களைச் செலவிட்டு வருவதால், வாசிப்புப் பழக்கம் எனபதே பெரும்பான்மையாகக் குறைந்து போய்விட்டது.
குறிப்பாக, இளம் வயதினர் புத்தக வாசிப்பில் கவனம் செலுத்துவதே இல்லை. இளம் வயதினரிடம் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்துடன், பள்ளி மாணவர்களிடம் வாசிப்பு வழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கம் ஒன்றைத் தொடங்கி, அதன் வழியாக, இளமைக் கனல், பள்ளி மன்றத்தின் 16 ஆவது வெளியீடாக 50 மாணாக்கரின் சிறுகதைகளை உள்ளடக்கமாகக் கொண்டு, “எண்ணமும் எழுத்தும்“ எனும் இந்நூல் வெளியாகி இருக்கிறது.
“புத்தகம் திறக்கும் ஒவ்வொரு மனிதனும், புதிய உலகைத் திறக்கிறார்“ என்று சொல்வார்கள். அந்த வழியில், மாணவர்களின் எழுத்துகளில் உருவான கதை வனத்தில் நுழையும் போது, கல்விக்கூடம், நட்பு, நேயம், அன்பு, அறிவு, தியாகம், சூழல், நல்லொழுக்கம் என்று மாணாக்கரின் புதிய உலகத்தைக் காண முடிகிறது.
திருக்குறளின் அறத்துப்பால், குறட்பாக்களின் கருத்துக்களை கருவாகக் கொண்டு, மிக நேர்த்தியாக கதைப்பின்னல் செய்து, வீடு, பள்ளிக்கூடம் என்பதைக் கதைக்களமாகக் கொண்டு, ஒவ்வொரு கதையும் தேர்ந்த படைப்பாளியைப் போல், முத்துகளாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
அந்த முத்துக்களையெல்லாம் முத்தாரமாகத் தொடுத்து உருவாகியிருக்கும் இந்நூலில் இடம் பெற்றிருக்கும் அனைத்துக் கதைகளுக்குமான தலைப்புகள் இந்நூலுக்கு மேலும் அழகூட்டுகிறது
.
“சமயம் மனிதனை நெறிப்படுத்துவதற்குத் தானே... “ என்று கேள்வி எழுப்பியதும், “அவசரத்தில் கை தவறி ஜாடிகள் விழுந்து சிதறலாம்... ஆத்திரத்தில் வாய் தவறி வரும் வார்த்தைகளும் சிதறலாம்... ஒரு போதும் நட்புள்ளம் நேசிக்கத் தவறாது... நீ என் உயிர் நண்பன்“ என்று பேசுவது தெறித்து விழுந்த முத்துக்கள்!
பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த நூலினை, ஒவ்வொரு பள்ளியிலும் வாங்கி, மாணவர்களைப் படிக்கச் செய்திட வேண்டும். அதன் மூலம், பள்ளி மாணவர்களின் மனதிலிருக்கும் நிகழ்வுகளைப் படைப்புகளாக்கும் எண்ணம் மேலோங்கும் என்று நம்புகிறேன்.
- வைகறை கண்ணன்
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|