ஒரு படைப்பு எப்படி உருவாகிறது? படைப்பாளரின் பின்னால் இருக்கும் உந்துதல் என்ன? படைப்பாளரின் எழுத்துக்குப் பின்னால் இருக்கும் வலி என்ன? என்பது போன்ற தகவல்களைத் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆய்வு செய்பவர்களும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் நன்கு அறிந்திருப்பர். அவ்வழியில், தினமணிக்கதிர் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி, அதன் பிறகு சென்னை, அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் பணியாற்றிப் பணியை நிறைவு செய்த இளையபெருமாள் என்கிற சுகதேவ், சில தமிழ்ப் படைப்பாளர்களைத் தேர்வு செய்து, அவர்களது படைப்புகள் குறித்தத் திறனாய்வுகளின் வழியாக, அவர்களை முழுமையாக இந்நூலில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இதழாசிரியராக விளையாட்டு, கலை, இலக்கியம், பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் கவனத்திற்குரியப் பல பதிவுகளைச் செய்த சுகதேவ், இந்நூலில் 21 அத்தியாயங்களில் படைப்பாளிகளைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். எழுத்தாளர் ஜெயகாந்தன் தொடங்கி, மகாகவி பாரதியின் கொள்ளுப்பேத்தி டாக்டர் விஜயபாரதி வரை மிக நீண்ட இலக்கிய உரையாடலாக ஆழமானதொரு எல்லையை இந்நூல் தொட்டிருக்கிறது. இதில், ஈழத் தமிழ் ஆராய்ச்சியாளர், இலக்கிய விமர்சகர், கவிஞர்கள், பெண்ணியச் சிந்தனையாளர்கள் உள்ளிட்ட தமிழ் எழுத்துலகில் சிறப்பு பெற்றவர்களின் வாழ்நாள் அனுபவங்களும், அவர்களது மாறுபட்ட இலக்கிய கோட்பாடுகளும் புதைந்து கிடக்கின்றன.
மனித வாழ்வின் அற்புதங்களையும், அவலங்களையும் அழகியல், உளவியல் பார்வையில் தன் கவிதைகளில் படம் பிடித்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். அவரது நேர்காணலில், “இலக்கியம் பல சமூக மாற்றங்களைச் செய்திருக்கிறது. இவைகளெல்லாம் அக மாற்றமாக இருப்பதால், வெளிப்படையாகத் தெரியாது. படிப்பவர்களின் மனச்சாட்சியைத் தூண்டி விட்டு, அதன் மூலம் புதிய மாற்றத்தைக் கொணர்வதற்கு இலக்கியம் உதவும்” என்கிற கருத்து எப்போதும் ஏற்புடையது.
கவிஞர் வைரமுத்து விமர்சனம் குறித்தக் கேள்விக்கு, “விமர்சனத்தில் மெய் இருந்தால் விமர்சகனின் அறிவு கண்டு வியக்கிறேன். விமர்சனத்தில் பொய் இருந்தால் விமர்சகனின் அறியாமை கண்டு சிரிக்கிறேன். வியப்பது உள்ளத்துக்கு நன்மை. சிரிப்பது உடம்புக்கு நன்மை. இரண்டிலும் நன்மை காண்கிறேன்“ என்கிற பதில், ஒரு படைப்புக்கான விமர்சனம் என்பது நேர்மறை, எதிர்மறை என்று இரு பிரிவுகளாகக் கொள்ளாமல், இரண்டையும் ஏற்கும் துணிவும் வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
”மனிதர்களின் உளப் போராட்டங்களை நுட்பமாகச் சித்தரிப்பதற்குச் சிறுகதை தான் சரியான களம். மேலும், உலக இலக்கியத்தின் தாக்கமும் தமிழில் சிறுகதையிலேயே அதிகம் இருக்கிறது. கவிதை படைப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே தேங்கிப் போகிறார்கள். விசாலமானப் பார்வை இல்லை” என்கிற வல்லிக்கண்ணனின் பதில் உண்மையில் சிறப்புக்குரியது.
ஜெயகாந்தன் நேர்காணலில் குறிப்பிட்டிருக்கும், “எழுத்தாளன் நம்பிக்கை இல்லாதவனாக இருக்கலாம். எழுத்து நம்பிக்கை தருவதாக இருக்க வேண்டும்” என்கிற பதில், படைப்புகளில் வாசகர்களுக்கு நம்பிக்கையூட்டும் பதிவுகள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
ஒரே நாவலில் உலகப்புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் நேர்காணலில் குறிப்பிட்டிருக்கும், ஒரு வரி எழுதிவிட்டு அதை அடித்து மீண்டும் எழுதும் பழக்கம் அவருக்குக் கிடையாது என்கிற தகவல் வியக்க வைக்கிறது.
தமிழ் இலக்கிய உலகின் அரை நூற்றாண்டுக் கால வரலாற்றையும், படைப்பாளிகளின் அகம் சார்ந்த தேடல்களையும் ஒரே புள்ளியில் இணைத்திருக்கும் முக்கிய ஆவணப் பதிவாக அமைந்திருக்கும் இந்நூலானது, சமகால இலக்கியச் சூழல், சக எழுத்தாளர்கள் பற்றிய ஆளுமைகளின் வெளிப்பாடுகளால் நிரம்பி இருக்கின்றன. வெறும் எழுத்து மட்டுமின்றி, அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள், வறுமை, தனிமை, அவர்களின் தத்துவப் பார்வை என்று பல திசைகளில் விரிந்திருக்கிறது.
சுகதேவ் ஒரு தேர்ந்த ஊடகவியலாளர் என்பதால், அவரது கேள்விகள் அனைத்தும் ஆளுமையின் ஆழமான அகம் நோக்கிப் பாய்கின்றன. ஒவ்வொரு படைப்பாளர்களிடமும் நேர்காணலுக்குச் செல்லும் போது, அவர்களது படைப்புகள், கொள்கைகள், நடைமுறைகள், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றை முன்னரே நன்கு அறிந்து, முன் தயாரிப்புகளுடன் கேள்விகளை எழுப்பிப் பதிலைப் பெற்றிருப்பது போற்றுதலுக்குரியது.
இந்நூலில் பலதரப்பட்ட ஆளுமைகளின் நேர்காணல்கள் இடம் பெற்றிருப்பதால், இது வெறும் நேர்காணல் தொகுப்பாக இல்லாமல், தமிழ் இலக்கியத்தின் பல்வேறு காலக்கட்டங்களின் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் காலக் கண்ணாடியாக இருக்கிறது.
தமிழ் எழுத்துலகின் உண்மையான பக்கங்களைப் பார்வையிட விரும்புகிறவர்கள், தங்களின் புத்தக அலமாரியில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய ஒரு அறிவுப் பெட்டகமாக இந்நூல் அமைந்திருக்கிறது. இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வாங்கி வைத்திருக்க வேண்டிய நூல் இது.