வார்த்தைகளுக்குள் அடங்காத உணர்வை, வார்த்தைகளைக் கொண்டே கடத்தும் ஒரு கலை வடிவம் தான் கவிதை எனலாம். உரைநடை என்பது அறிவுக்கு புரிய வைப்பது. கவிதை என்பது இதயத்தைத் தொட வைப்பது. ஒரு மனிதனின் ஆழ்மனதில் தோன்றும் மகிழ்ச்சி, வலி, காதல், ஏக்கம், தத்துவம், கோபம் போன்ற ஏதோவொரு உணர்வின் உச்சக்கட்ட வெளிப்பாடு, சொற்களின் வழியே அழகிய வடிவம் பெறும் போது அது கவிதையாகிறது.
வெறும் சொற்களின் அடுக்குக் கவிதை அல்ல, அச்சொற்கள் வாசகனின் மனதில் ஒரு காட்சியை அல்லது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எல்லோரும் பார்க்கும் ஒரு சாதாரண விஷயத்தை, ஒரு கவிஞன் முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்க வேண்டும். இந்நூலாசிரியர், தனது பயணங்களின் போது, தான் கண்ட இயற்கையை, மரம், செடி, கொடி, மலர், சமூகம் என கண்ட காட்சிகள் அனைத்தையும் “திருக்காட்சி“ களாய் கவிதைகளாக்கி படிப்போரின் மனதுக்குள் கடத்தியிருக்கிறார்.
உணர்வுகளையும், காட்சிகளையும் சொற்களாக மை தீட்டிய கவிப்பயணத்தில் “திருக்காட்சி“ இவரது 14 ஆவது கவிதைத் தொகுப்பு நூல் ஆகும். கட்டுரைகள், ஆய்வு நூல் ஆகியனவும் இவரது கைவண்ணத்தில் மலர்ந்துள்ளன.
“திரு“ என்பது மேன்மை, தெய்வீகம், அழகு மற்றும் அருளைக் குறிக்கும் அடைமொழி. “காட்சி“ என்பது நாம் காண்பது. திருக்காட்சி என்பது வெறும் சாதாரணப் பார்வையாக அல்லாமல், உலகியல் கடந்து ஆன்மாவால் உணரப்படும் ஒரு தெய்வீகப் பெருங்காட்சியைக் குறிக்கிறது.
கவிஞரின் பார்வையில் படும் இயற்கை, மனிதநேயம், காதல், பிரபஞ்சம் என்று ஒவ்வொன்றும் ஒரு “திருக்காட்சி“யாக கண் முன் விரிவதை இந்நூலில் காண முடிகிறது.
“திருக்காட்சி“ என்று இந்நூலுக்கு பெயர் வைத்திருப்பது, கவிஞரின் முதிர்ச்சியையும், அவரது கவித்துவப் பார்வையையும் பறைசாற்றுகிறது. இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், இந்நூலின் அட்டை முதல் அட்டை வரை திருக்காட்சிகள்தான்!
குறுக்கீடு என்கிற கவிதையில்,
“எத்தனையோ பருவங்களின்
புயல் மழைகளைக் கடந்து
வேர்ப்பிடித்திருந்தது
அந்த ஆலமரம்.
*****
வேரோடு சாய்ந்த மரத்தைக் கண்டால்
அடையும் வலியினும் கடிது
முறிந்து நிலம்படாக் கிளைகளில்
சிதறுண்டு கிடக்கும்
பறவைகளின் கூடுகளைக் கண்டு
இன்னல்படுகிற
நெஞ்சத்தின் துயர்“
இயற்கை நேயத்தையும், கூர்மையான கவித்துவப் பார்வையையும் வெளிப்படுத்தும் இக்கவிதை, ஒரு பெரும் சோகத்தைக் கண்டு மனம் கசிவதற்கும், அந்தச் சோகத்திற்குள் இருக்கும் மிக நுட்பமான, மறைந்திருக்கும் பேரழிவுக் காட்சியை, மெல்லிய உணர்வைப் படிப்போர் இதயங்களுக்குள் இறக்கி வைத்து விடுகிறது.
ஒரு மரம் வேரோடு சாய்வது இயற்கையின் பேரிழப்பு. அந்தப் பேரிழப்பைத் தாண்டி, அந்த மரத்தைச் சார்ந்து வாழ்ந்த பறவைகள் உள்ளிட்டவைகளும் அழிவை நோக்கிப் பயணிக்கிறது, கவிஞரின் பார்வை, பெரியப் பாதிப்புகளை விட, ஆழமான பாதிப்புகளே அதிக வலியைக் கொடுக்கிறது என்பதை உணர்த்துகிறது.
கூடிழந்த பறவைகளின் நிலையை எண்ணித் “துடிப்பதே நெஞ்சத்தின் கடினமான துயர்“ கவிஞரின் இதயத்தை அதிகமாகவே கீறுகிறது. வீழ்ந்த மரத்திற்காக அழுபவர்கள் மத்தியில், சிதறிய கூடுகளுக்காகக் கண்ணீர் வடிக்கும் கவிஞரின் நெஞ்சம் உன்னதமானது. நூலின் தலைப்பிற்கு ஏற்ப, இயற்கையின் இந்தத் துயரத்தையும் ஒரு தீர்க்கமான அகக் காட்சியாய் மாற்றியிருக்கிறது.
“ஒளிச்சேர்க்கை“ எனும் இன்னொரு கவிதை. இதில்,
“ஒரு மலரை
மலரச் செய்வது
எளிதுதான்
நிலமும் பொழுதும்
நீரும் வேரும்
ஒன்றெனக் கூடி வருகையில்
பருவம் தவறி
மழை பொய்த்துப் போகிற
காலத்தின்
மலர்தலென்பது
மலையைப் பெயர்ப்பதை விட
கடிதினும் கடிது“
இக்கவிதை வரிகளில் பிரபஞ்சத்தின் விதியையும், காலத்தின் தேவையையும் மனித வாழ்வின் எதார்த்தத்தையும் மிக நுட்பமாகப் பேசுகின்றன. இயற்கையின் இயல்பையும், அது தவறும் போது ஏற்படும் பேரிடரையும் ஒரு மலரின் வழியே கடத்தியிருக்கும் திறன் அற்புதம்!
ஒரு மலர் மலர்வது என்பது தனித்த நிகழ்வல்ல! அது ஒரு கூட்டுப் பிரார்த்தனை. நிலம், நீர், பொழுது, வேர் ஆகிய நான்கும் தங்களுக்குள் ஒரு புரிதலோடு இணையும் போது தான் மலர்தல் என்பது சாத்தியமாகிறது.
மழை பொய்த்துப் போகும் போது, வறட்சிக் காலத்தில், ஒரு செடி மலரை உருவாக்குவது என்பது தன் உதிரத்தை வடிப்பதற்குச் சமம். சூழல் மாறும் போது, எளிய விஷயங்களின் மதிப்பு எப்படி பல மடங்கு உயர்கிறது என்பதை உணர்த்தும் கவிதையாக மலர்ந்துள்ளது.
மென்மையான எடையற்ற மலரை மலரச் செய்வதை, பிரமாண்டமான மலையைப் பெயர்ப்பதோடு ஒப்பிட்டிருப்பது சிந்தனையின் உச்சமாகக் கருதலாம். வழக்கமாக மலையைப் பெயர்ப்பதுதானே கடினம். மலர் மலர்வது எளிது. காலம் தவறிய வறட்சியில், அந்த மென் மலர் மலர்வதற்குச் செடி படும் பாடு என்பது, ஒரு மலையையே நகர்த்துவதை விடவும் கடினமானது என்கிறார் கவிஞர். இந்த முரண் படிப்போரின் மனதில் ஒரு பெரும் பாரத்தை இறக்கி வைக்கிறது.
“கண்ணால் காண்பது காட்சி, நெஞ்சால் உணர்வதே திருக்காட்சி“ அனைவரின் நெஞ்சில் ஏந்த வேண்டிய 63 கவிதைகளின் அற்புதத் தொகுப்பு, இந்நூல். அனைவரும் வாங்கிப் படித்துப் பார்க்க வேண்டும்.