கல்லூரிப் பேராசிரியரான நூலாசிரியர் பாரதியார் குறித்துப் பல்வேறு இதழ்களில் எழுதி வெளியான கட்டுரைகள், பல்வேறு கருத்தரங்குகளில் சமர்பித்த ஆய்வுக்கட்டுரைகள் போன்றவைகளை ஒன்றிணைத்து நூலாக்கம் செய்திருக்கிறார்.
பாரதியைக் கருப்பொருளாகக் கொண்டு ஐந்து கட்டுரைகளை பாரதியின் ஆழம், அகலம், உயரம் என மிகமிக நுண்ணிய அளவில் நுணுகிப் பார்க்கிறார். உதாரணத்திற்கு நூலின் தலைப்பாகிய “பாவேந்தரில் பாரதி“ கட்டுரையை எடுத்துக் கொள்ளலாம்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், மகாகவி பாரதியாரின் மீது கொண்ட மதிப்பும், அன்பும், பற்றும் குறித்து நாடே நன்கு அறியும். தன் இயற்பெயரான கனக சுப்பு ரத்தினம் என்பதை மாற்றி, பாரதிதாசன் என தன்னை அறிவித்துக் கொண்டதே இதற்குத் தக்க சான்றாகும். பாரதிக்கு பாவேந்தர் ஆற்றிய தொண்டும், அவரைப் பற்றிப் படைத்த இலக்கியப் பதிவும் தமிழ் இலக்கிய வரலாற்றில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. பாவேந்தர் தன் கவிதைகளிலும், கட்டுரைகளிலும் பாரதியின் புகழைப் பரப்புவதைத் தன் வாழ்நாள் கடமை எனக் கருதினார். பாவேந்தரிடத்தில் பாரதியின் தாக்கம், விளைவுகள், அவர்களிடத்திலிருந்து வந்த நட்பு, அதனால் தமிழுக்கு விளைந்த நன்மைகள் என நூலாசிரியர் இருபெருங் கவிஞர்களின் முதல் சந்திப்பு முதல் பாடம் புகட்டலும் “உலகக் கவி“ என நிறுவப் பெறுதலும் என கட்டுரையை மிகச் சிறப்பாகத் தந்திருக்கிறார்.
பாரதி, பாரதிதாசன் இருவருக்குமிடையே ஒருவருக்குள் ஒருவர் ஏற்படுத்திய தாக்கங்கள், ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்புகள், நட்பு, நன்மதிப்பு படிப்படியாக அடுக்கடுக்கான சம்பவங்களின் கட்டுமானங்கள் என்று பல்வேறு தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார்.
“பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பாரதிதாசன் பெருமைகளை எடுத்துச் சொல்லி மகிழும் மனநிலை பாரதியாரிடம் இயல்பாகவே இருந்துள்ளது.
ஒரு நாள் பாரதிதாசன் தன் வயது ஒத்த சில தோழர்களுடன் அரவிந்தர் வீட்டு மாடி கைப்படிச் சுவர் மீது அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்தார். அச்சமயம் பாரதியாரும், அரவிந்தரும் படியேறி மாடிப் பகுதிக்கு வந்தனர். அவர்கள் வந்ததைப் பாரதிதாசன் கவனிக்கவில்லை. ஆனால், பாரதிதாசன் புகைத்துக் கொண்டிருப்பதை அவர்கள் கவனித்து விட்டனர். கூட்டுச் சேர்ந்து கொண்டு பாரதிதாசன் புகைத்தது கண்டு மனம் வருந்தினார் அரவிந்தர்.
“யாரது? சுப்புரத்தினமா?“ என்று பாரதியாரிடம் வினவினார். இவ்வளவு மோசமானவரிடம் நீ நட்புக் கொண்டிருக்கிறாயே? என்று இழித்துக் காட்டுவது போன்று அரவிந்தரின் வினாப் போக்கு அமைந்திருந்தது.
உடனே, பாரதியார் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் “ஆமாம் சுப்புரத்தினம்தான். அவன் எல்லாச் செட்டிலேயும் இருப்பான். ஆனால், பெரிய புலவன்“ இதனால், பாரதியார் மதிக்கும் பாரதிதாசனை பிறரும் மதிக்கும்படி ஆயிற்று என்று பதிவு செய்ததன் மூலம் பாரதிதாசனை பாரதியார் எந்த உயரத்தில் புரிந்து வைத்திருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கும் வாசகர் மனதில் பதியம் போடுகிறார் நூலாசிரியர்.
மேலும், கனக சுப்புரத்தினம் எனும் இயற்பெயர் கொண்டவர் “பாரதிதாசன்“ எனப் பெயர் மாற்றம் செய்து கொண்டமையால், எதிர்ப்பும் வந்தது. பொதுவுடமை இயக்கத் தலைவர்களில் ஒருவர் பாரதிதாசனைச் சந்தித்து “எவருக்கும் தாசனாக இருக்க விரும்பாத நீங்கள், பாரதிக்கு மட்டும் தாசனாக ஏன் ஆனீர்கள்?“எனக் கேட்க, “அடிமைப் புத்தியை விரும்பாத நானே ஒருவருக்குத் தாசன் என்று சொல்லிக் கொள்வேன் என்றால், அவர் அவ்வளவு உயர்ந்தவராக இருப்பார் என்பதை நீயே எண்ணிப் பார்த்து அறிந்து கொள்க!“ என பாரதிதாசன் விடையளித்துள்ளார்.
படிப்போரின் மனக்காட்சியில் காட்சிப் படுத்தி, படிப்போரை காண்போராக மாற்றி, மனதில் ஆழமான கருத்தை மிக எளிதாக பதியச் செய்து விடும் பல கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. திரைக்காட்சிகள் போல் கட்டுரையைத் தங்கு தடையின்றி நகர்த்திச் செல்வது இந்நூலில் இடம் பெற்றிருக்கும் அனைத்துக் கட்டுரைகளுக்கும் வலிமை சேர்க்கிறது.
பாரதியார் மற்றும் பாரதிதாசனைப் பற்றிய பல தகவல்களைக் கொண்டுள்ள இந்நூலினை அனைவரும் வாங்கிப் படிக்கலாம்.