ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்நாட்டின் மனித வளம், தொழில் வளம், விவசாய வளம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த வளங்களின் மூலம் கிடைக்கும் சேவைகள் மற்றும் பொருட்கள் வணிகர்களிடமிருந்தோ அல்லது விவசாயிகளிடமிருந்தோ நேரடியாகச் சமூகத்தைச் சென்றவடைதில்லை. முதலில் பொருள் உற்பத்தி, பின்பு பொருள் - போக்குவரத்து, இறுதியாக கடைநிலை விற்பனை என்ற சங்கிலிகளால் ஆன பொருளாதாரச் சக்கரம் தொழிலாளர்களின் உழைப்பு என்ற அச்சாணியில் சுற்றுகிறது.
18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில் புரட்சி உலகில் பல பகுதிகளிலும் தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தியை அதிகரிக்க வழி வகுத்தது. அதிகமான தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் குறைந்த கூலியில் வேலைக்குச் சேர்க்கப்பட்டனர். அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது. எனினும் வெளிப்படையாக அவர்கள் தங்களின் உரிமைக்கு குரல் கொடுக்க முடியாத நிலை இருந்து வந்தது.
1866 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் முதல் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது. பிலடெல்பியாவில் உள்ள தையல் தொழிலாளர்களைக் கொண்டு, 1869 ஆம் ஆண்டில் உரியா ஸ்மித் ஸ்டீபன் என்பவர் "தொழிலாளர் போர் வீரர்கள்" என்ற தொழிற்சங்கத்தை ரகசியமாகத் தொடங்கினார். 1886 ஆம் ஆண்டில் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு தோற்றம் பெற்றது. 14 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய இந்தக் கூட்டமைப்பில் 3 இலட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை என்பது இக்கூட்டமைப்பின் முதன்மைக் கோரிக்கையாக இருந்து வந்தது.
அதனை வலியுறுத்தி 1886 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி அமெரிக்காவில் 13 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் 3 இலட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். சிகாகோ நகரில் உள்ள ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு நாளில் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி 1886 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி சுமார் 1500 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க முயன்ற காவல்துறை மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமுற்றனர் தொழிலாளர்கள் 4 பேர் கலவரத்தைத் தூண்டியதாக தூக்கிலிடப்பட்டனர்.
அந்தப் போராட்டத்தின் விளைவாக ஒரு நாளில் 8 மணி நேர உழைப்பு என்பது நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு பலரது தியாகத்தால் 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் மட்டுமே உழைப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தனிப்பட்ட விருப்பு வேலை என ஓரு நாள் பிரிக்கப்பட்டது.
தொழிலாளர்கள் ஒற்றுமையைப் போற்றவும் அவர்களின் போராட்டத்தைப் பாராட்டவும் இறந்த தொழிலாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்தவும் 1889 ஆ,ம் ஆண்டில் பாரிசில் கூடிய தொழிலாளர்கள் சம்மேளனத்தில் மே முதல்நாள் தொழிலாளர் நாளாக அறிவிக்கப்பட்டது. அது முதல் மே 1 ஆம் தேதி உலகின் பெரும்பாலான நாடுகளில் தொழிலாளர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவிலும் கனடாவிலும் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையிலும் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் முதல் திங்கட்கிழமையிலும் தொழிலாளர் நாள் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடு சபை ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் நலன் தொடர்பான கருத்துருவை அறிவித்து, அதன்படி தொழிலாளர் நாளைக் கொண்டாடச் செய்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே நம் நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள் செயல்பட்டு வந்திருக்கின்றன. லேபர் கிசான் கட்சி சார்பில் 01.05.1923 ஆம் நாளில், சென்னையில் தோழர் சிங்காரவேலர் என்பவர் ஏற்பாட்டில் நம் நாட்டில் முதன் முறையாக தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தியா விடுதலை பெற்ற பின்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 நாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் தொழிலாளர் நலன் காக்கும் பல பிரிவுகள் உள்ளன. தொழிலாளர் நலன் என்பது மத்திய மாநில அரசுகளின் இணைவுப் பட்டியலில் உள்ளது.
அரசியல் அமைப்பின் 16 ஆவது பிரிவு வேலை வாய்ப்பில் சமவாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதையும், 19 (1) (இ) ஆவது பிரிவு சங்கம் அமைப்பதற்கான உரிமையையும், 38 (2) ஆவது பிரிவு வருமானத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் களைதல் குறித்தும், 41 ஆவது பிரிவு வேலைவாய்ப்பிற்கான உரிமையையும், 42 ஆவது பிரிவு பணி செய்யும் இடத்தில் வேலை செய்வதற்கு உகந்த சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும், 43 ஆவது பிரிவு தரமான வாழ்க்கை நடத்தத் தகுந்த கூலி வழங்கப்பட வேண்டும் என்றும், 43(அ) ஆவது பிரிவு தொழிலாளர் அவரவர் பணி செய்யும் நிர்வாகத்தில் பங்கேற்கும் நிலை ஏற்பட வேண்டும் என்றும் கூறுகிறது. 23 ஆவது பிரிவு கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதைத் தடை செய்கிறது.