காந்திஜி சிறையிலிருந்த சமயம் அது.
சபர்மதி ஆசிரமத்திலிருந்த சிறுவர் சிறுமியர் வாரத்திற்கு ஒரு முறை காந்திஜிக்குக் கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அவர்களின் கடிதங்களுக்கு காந்திஜியும் நகைச்சுவையோடு சுருக்கமாக பதில்களை எழுதி அனுப்பி வைப்பார்.
அவருடைய சுருக்கமான பதில்கள் சிறுவர், சிறுமியர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.
அவர்கள் காந்திஜிக்கு, "காந்திஜி அவர்களே, பகவான் கிருஷ்ணன் அர்ச்சுணன் கேட்ட சிறு சிறு கேள்விகளுக்குக் கூட அத்தியாயங்களாய் பதில் அளித்தார். ஆனால் உங்கள் பதில்கள் ஓரிரு வார்த்தைகளாகவே இருக்கிறதே...?" என்று கேட்டு கடிதம் அனுப்பினார்கள்.
அதற்கு காந்திஜியும் பதில் அனுப்பினார்.
"குழந்தைகளே, பகவான் கிருஷ்ணருக்கு ஒரு அர்ச்சுனர் மட்டும்தான் கேள்வி கேட்ப்வராயிருந்தார். ஆனால் எனக்கு உங்களைப் போல் பல ஆயிரம் பேர் கடிதம் எழுதுகிறார்கள், கேள்வி கேட்கிறார்கள். எல்லோருக்கும் பதில் எழுத வேண்டியதிருக்கிறதே..." என்று நகைச்சுவையாகப் பதில் எழுதி அனுப்பினார்.
சிறுவர், சிறுமியர்கள் சுருக்கமான இந்த பதிலைக் கண்டு மகிழ்ந்து போனார்கள்.