காந்தியடிகள் கண்காட்சி ஒன்றுக்கு சென்றிருந்தார். அங்கு ஒருவர் அவருக்குத் துணையாக கண்காட்சியைப் பற்றி விளக்கம் அளித்துக் கொண்டே வந்தார்.
ஒரு இடத்தில் அருகருகே இரண்டு தேனீக்கள் வளரும் பெட்டி இருந்தது. அதைக் காட்டிய அவர், "ஒரு பெட்டியில் உள்ள தேனீ மறந்தும் கூட அடுத்த பெட்டிக்குப் போகாது. எதிர்பாராமல் போக நேர்ந்தால் அடுத்த பெட்டியில் உள்ள தேனீக்கள் புதிதாக நுழைந்த தேனீயைக் கொன்று விடும்" என்றார்.
இதைக் கேட்ட காந்திஜி வாயில்லாப் பூச்சியாக இருந்தாலும் அதற்குண்டான அறிவுத் திறமையைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். அப்போது விளக்கம் அளித்துக் கொண்டு வந்தவர் முதல் பெட்டியின் வாயிலில் இருந்த ஒரு தேனீயை பிடித்தி பக்கத்துப் பெட்டியின் நுழைவாயிலில் வைத்து விட்டார்.
உடனே காந்திஜி குறுக்கிட்டு, "வேண்டாம் நீங்கள் சொல்லியதே போதும். நான் புரிந்து கொண்டேன். அந்த உயிரை ஹிம்சை பண்ண வேண்டாம்." என்றார்.
சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆசாமி தேனீயை பக்கத்துப் பெட்டியின் உள்ளே வைத்து விட்டார். உடனே அந்த பெட்டியிலிருந்த தேனீக்கள் அனைத்தும் ஒன்று கூடி இந்தத் தேனீயைக் கொட்டிக் கொன்று வெளியே தள்ளி விட்டன. அனைத்தும் சில வினாடிகளிலேயே முடிந்து விட்டன.
இந்தக் காட்சியைக் கண்ட காந்திஜியின் கண்களில் நீர் நிறைந்து விட்டது. கண்ணாடியைக் கழற்றி கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அந்த மனிதரைப் பார்த்து, "ஓர் உயிர் மாண்டு போக காரணமாக இருந்து விட்டீர்கள். உம்மால் உயிர் தந்து அதைப் பிழைக்க வைக்க முடியுமா? இனி நான் இந்தக் கண்காட்சியைக் காண மாட்டேன்" என்று சொல்லி வருத்தத்துடன் திரும்பி விட்டார்.
காந்தியடிகள் சிறிய உயிரினமான தேனீயின் உயிர் சித்திரவதையைக் கூட விரும்ப மாட்டார். அனைத்து உயிரிடத்திலும் அன்பு கொண்டவர் அவர். நாமும் அனைத்து உயிரிடத்திலும் அன்பாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.