சாக்ரடீஸின் சீடர் ஒருவர், "குருவே, அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?'' என்று கேட்டார்.
உடனே அவர், "அதோ இருக்கிறாரே ஒரு கிழவர், அவரிடம் சென்று, இங்கிருந்து அருகிலிருக்கும் கிராமத்துக்குப் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும் என்று கேட்டு வா!'' என்றார்.
சீடரும் அந்தக் கிழவரிடம் சென்று அவ்வாறே கேட்டார்.
அவர் பதிலேதும் கூறவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டார். பலன் இல்லை.
கிழவருக்குப் புத்திசுவாதீனம் இல்லையோ என்று நினைத்து, வந்த வழியே திரும்பிச் சில அடிகள் எடுத்து வைத்தார் அந்தச் சீடர்.
உடனே கிழவர் அவரை அழைத்து, "நீ பத்து நிமிடங்களில் கிராமத்தை அடையலாம்!'' என்றார்.
"நீங்கள் ஏன் இந்தப் பதிலை நான் கேட்டவுடன் கூறவில்லை?'' என்று சந்தேகத்துடன் கேட்டார் சீடர்.
"நீ எவ்வளவு வேகமாக நடக்கிறாய் என்பதைப் பார்க்காமல் எப்படியப்பா, நீ கிராமத்தை எவ்வளவு நேரத்தில் அடைவாய் என்பதைக் கூற முடியும்?'' என்று திருப்பிக் கேட்டார் அந்தக் கிழவர்.
சீடர் வியப்பும் மரியாதையுமாக சாக்ரடீஸிடம் வந்து நடந்ததைக் கூறியதும்...
சாக்ரடீஸ், "அதற்குப் பெயர் தான் புத்திசாலித்தனம்!'' என்றார்.