ஒரு முறை வாரியாரைச் சந்தித்த மாணவன் ஒருவன், “கடவுளைக் கண்ணால் காண முடியுமா?” என்று கேட்டான்.
“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்… ஒரு கேள்வி, தம்பீ… இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா…?”
“எனக்கென்ன கண் இல்லையா…? இந்த உடம்பை எத்தனையோக் காலமாகப் பார்த்து வருகிறேன்”
“தம்பீ…! கண் இருந்தால் மட்டும் போதாது…! கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா…? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருக்க வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய்... இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா….?”
“ஆம். நன்றாகத் தெரிகின்றது”
“அப்பா! அவசரப்படாதே!! எல்லாம் தெரிகின்றதா…?”
“என்ன ஐயா! தெரிகின்றது… தெரிகின்றது… என்று எத்தனை முறை கூறுவது…? எல்லாம்தான் தெரிகின்றது…?”
“அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா…?”
“ஆம்! தெரிகின்றன”
“முழுவதும் தெரிகின்றதா…?”
அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில், “முழுவதும் தெரிகின்றது” என்றான்.
“தம்பீ…! உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா….?”
மாணவன் விழித்தான்.
“ஐயா…! பின்புறம் தெரியவில்லை” என்றான்.
“தம்பீ! முதலில் தெரிகின்றது... தெரிகின்றது... என்று பலமுறை சொன்னாய்! இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே…? சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா…?”
“முன்புறம் முழுவதும் தெரிகின்றதே...!”
“நிதானித்துக் கூறு…”
“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது...”
“தம்பீ…! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றதா…?”
மாணவன் துணுக்குற்றான்.
பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், “ஐயனே…! முகம் தெரியவில்லை…!” என்றான்.
“குழந்தாய்…! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை... முன்புறம் முகம் தெரியவில்லை, நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டிருக்கிறாய்…! இருப்பினும், கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்…!! அன்பனே…! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால், இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும். இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு, இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்” என்றார்.
அந்த மாணவன் விழித்தபடி நின்றிருந்தான்.
“இருநிலைக் கண்ணாடிகளில் ஒன்று திருவருள்! மற்றொன்று குருவருள்!! திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால், ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்”
மாணவன் அவரைப் பார்த்தபடி இருந்தான்.
“தம்பீ…! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும், அதனைக் குருவருள் மூலமேப் பெறமுடியும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை”
அந்த மாணவன் தன் தவறை உணர்ந்து அவரின் காலில் விழுந்தான்.