நெப்போலியன் தனது சிறு வயதில், ராணுவ விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான்.
அப்போது அறையில் அவனுடன் தங்கியிருந்த மற்றொரு மாணவன், தன்னுடைய அழகான பை ஒன்று காணாமல் போய்விட்டதாக மேலதிகாரியிடம் புகார் கூறினான்.
மேலதிகாரி “யார் மேலாவது உனக்குச் சந்தேகம் உண்டா?” என்று கேட்டார்.
அந்தச் சக மாணவன் “நெப்போலியன் மேல்தான் எனக்குச் சந்தேகம்” என்றான்.
உடனே அந்த அதிகாரி நெப்போலியனை தன் அறைக்கு அழைத்தார்.
நெப்போலியன் மெதுவாக மேலதிகாரியின் அறைக்குள் நுழைந்தான்.
மேலதிகாரி நெப்போலியனை விசாரிக்காமலேயே, தனது கையில் பிரம்பை எடுத்து அவனை அடித்தார்.
நெப்போலியனை “ஏன் திருடினாய்? இனிமேல் இது மாதிரி தவறு செய்வாயா?” என்று கேட்டார்.
நெப்போலியன் அவ்வளவு அடியையும் வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தான்.
அதற்குப் பிறகு கொடுத்த தண்டனையையும் வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தான்.
சிறிது நாட்கள் கழித்து, புகார் கொடுத்த அந்த மாணவன் மேலதிகாரியிடம் ஓடி வந்து, “ஐயா… என்னோட பையைத் திருடியது நெப்போலியன் அல்ல, வேறொரு மாணவன். இப்பொழுதுதான் உண்மை தெரிந்தது. நெப்போலியன் மேல் தெரியாமல் புகார் கொடுத்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்!” என்றான்.
அந்த அதிகாரிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. உடனே நெப்போலியனை அழைத்தார்.
பிறகு அவர் “உனக்கு என்ன பைத்தியமா? நீ என்ன முட்டாளா? அன்று அந்த அடி அடித்தேன். அப்பொழுதே உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே?” என்றார்.
நெப்போலியன் அமைதியாக, “ஐயா! நீங்கள் என்னை அடிப்பதற்கு முன்பாகக் கேட்டு இருந்தால் நான் சொல்லியிருப்பேன். அடித்துக் கொண்டே கேட்டீர்கள். அப்பொழுது நான் இல்லை என்று சொன்னாலும், அடிக்குப் பயந்து நான் அப்படிச் சொல்வதாக நீங்கள் நினைப்பீர்கள். நான் பயந்ததாக யாரும் நினைக்கக் கூடாது. அதை விட அடி வாங்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை!” என்றான்.
சிறு வயதில் இருந்த நெப்போலியனின் அந்த பயமற்ற துணிவுதான், பின்னாளில் அவர் மாபெரும் வெற்றிவீரனாகக் காரணமானது.