சுவாமி விவேகானந்தர் பாரீஸ் நகரிலே இருந்த பொழுது ஓய்வு எடுப்பதற்காகக் குதிரை வண்டியிலே தனது சீடரான ஐரோப்பிய பெண்மணியுடன் பாரீஸ் நகரை வலம் வந்தார்.
ஒரு தெரு வழியாக ஒரு வீட்டுக்குள்ளே இருந்து இரண்டு சிறிய பையன்கள் வெளியே வந்தார்கள்.
அவர்களின் தோற்றம் பணக்கார வீட்டுக் குழந்தைகள் போன்று தோன்றியது. அவர்களது அம்மா அந்தக் குழந்தைகளை அழைத்து வந்தார்கள்.
குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அந்தக் குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு, தட்டிக் கொடுத்து விட்டு மீண்டும் குதிரை வண்டியில் ஏறி ஓட்டிக் கொண்டு போனார்.
“யார் அந்த சிறுவர்கள்?” என்று விவேகானந்தரின் சீடர் கேட்டாள்.
“என்னுடய பிள்ளைகள்தான்” என்று கூறினார் குதிரை வண்டியை ஓட்டியவர்.
அவர்களுக்கு ரொம்ப ஆச்சரியம்.
“குழந்தைகளைப் பார்த்தால் ரொம்பப் பணக்கார வீட்டுக் குழந்தைகள் போலத் தோன்றுகிறது. இவர் குதிரை வண்டி ஓட்டுகிறாரே என்று”
குதிரை வண்டி ஓட்டுகிறவர் திரும்பிப் பார்த்தார்.
பாரீஸ்லே ஒரு வங்கி பேரைச் சொல்லி, ‘அந்த வங்கியை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டடார்.
“ஓ கேள்விபட்டிருக்கிறேனே, ரொம்ப பெரிய வங்கி ஆச்சே அது! எங்களுக்கு கூட அந்த வங்கியிலே கணக்கு இருந்தது. ஆனால், இப்பொழுது அந்த வங்கி திவாலாகி விட்டதாகத் தெரிகிறதே” என்றார் சுவாமியின் சீடர்.
அதைக் கேட்டுவிட்டு… அதற்குப் பிறகு அந்தக் குதிரை வண்டியை ஓட்டியவர் விளக்கினார்.
“நான் தான் அந்த வங்கிக்குச் சொந்தக்காரன். அந்த வங்கி இப்போது கொஞ்சம் கஷ்ட நிலைமையில்தான் இருக்கிறது. பாக்கிகள் எல்லாம் வசூல் பண்ணிக் கடன்களை எல்லாம் அடைக்கச் சிறிது நாள் ஆகும் போலத் தெரிகிறது. இந்த நிலைமையில், நான் மற்றவர்களுக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை. சொந்த ஊரிலே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தேன். என் கிட்டே இருந்தது… என் மனைவி கிட்டே இருந்தது எல்லாவற்றையும் விற்று இந்தக் குதிரை வண்டி வாங்கி வாடகை வண்டியாக ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். என் மனைவியும் கொஞ்சம் சம்பாதிக்கிறாள். எங்களுடைய இரண்டு பேர் வருமானத்தில் குழந்தைகளுக்கு ஆகிற செலவுகளைச் சரி செய்து கொண்டு இருக்கிறோம். பாக்கிகளை வசூல் செய்து கடன்களை அடைத்ததும் மறுபடியும் வங்கியைத் திறந்து விடுவேன்!” என்றார்.
சுவாமி விவேகானந்தர் இருவரது உரையாடலகளையும் கேட்டுக் கொண்டு இருந்தார். மனதிற்கு மகிழ்சியாக இருந்தது.
சுவாமி விவேகானந்தர் சொன்னார், “இதோ இந்த மனிதரைப் பார், இவர்தான் சரியான வேதாந்தி. அப்படியே நடைமுறைப்டுத்தியிருக்கிறார். பெரிய ஒரு அந்தஸ்திலே இருந்து விழுந்து விட்டால் கூட, சூழ்நிலைக்கு இரையாகி விடவில்லை!”
“எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் தளரவிடக்கூடாது” என்று மீண்டும் சொன்னார் விவேகானந்தர்.