மோதிலால் நேருவின் வாழ்வில் நடந்த சிறு நிகழ்வுதான் இது.
முன்னாள் பாரதப் பிரதமர் நேருவின் தந்தையான மோதிலால் நேரு தலைச்சிறந்த சட்ட நிபுணர். வாதாடுவதில் மிகவும் வல்லவர். புத்திக்கூர்மை மிக்கவரும் கூட.
ஒருநாள் காலை, அலுவலகத்திற்குச் செல்ல வெளியே வந்த போது, அவரைப் பார்க்கக் காத்திருந்த ஓர் ஏழை மனிதன் அவரை வணங்கினான்.
மோதிலால் நேரு “யார் நீங்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு” என அன்புடன் கேட்டார்.
“ஐயா, நான் ஒரு ஏழை பிராமணன். புரோகிதம் செய்வதுதான் என் தொழில். அதில் வரும் குறைந்த வருமானத்தில், நானும் என் பெண்ணும் அரை வயிறு உண்ணத்தான் போதுமானதாய் உள்ளது. தாயற்ற என் ஒரே பெண்ணுக்குத் திருமணம் நிச்சயித்து விட்டேன். ஆனால், திருமணம் நடத்தப் பலரிடம் கடன் கேட்டும் எந்தப் பயனுமில்லை. ஓரிருவர் தங்களின் பெயரைக் கூறித் தாங்கள் நிச்சயம் உதவி செய்வீர்கள் என்று சொன்னதால், நம்பிக்கையுடன் உங்களிடம் உதவி கேட்பதற்காக இங்கு வந்தேன். தாங்கள் கருணையோடு என் மகளின் திருமணம் நடக்க உதவ வேண்டும்” என்றார்.
“அப்படியே ஆகட்டும். உங்கள் பெண்ணின் திருமணத்திற்குச் செலவுத் தொகை எவ்வளவு ஆகும்? என்று சொல்லுங்கள்!” என்றார் மோதிலால் நேரு.
ஓரிரு நிமிடங்கள் யோசித்த புரோகிதர் “சுமார் ஒரு முந்நூறு ரூபாய் இருந்தால் போதும், என் மகள் திருமணத்தைச் சிறப்பாக நடத்திவிடுவேன்” என்றார்.
அதைக் கேட்ட மோதிலால் நேரு தமது உதவியாளரிடம், “இன்றைக்கு நம் கட்சிக்காரரிடமிருந்து எவ்வளவு பணம் வருகிறதோ அதை இவருக்குக் கொடுத்து விடுங்கள்” என்று கூறி விட்டுப் புரோகிதரிடம் “ஐயா, நீங்கள் மாலையில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றார்.
புரோகிதரும் மகிழ்வோடு அங்கிருந்து சென்றார்.
மோதிலால் நேருவிற்கு, ஒவ்வொரு நாளும் வழக்குகளைப் பொறுத்துக் கட்சிக்காரரிடமிருந்து பணம் வருவது வழக்கம். மிகச் சிறந்த சட்ட நிபுணர் என்பதால் பலரும் அவரையே நாடினர். அன்றைய தினம் அவருக்கு வந்த மொத்த வருமானம் ஆயிரத்து முந்நூறு ரூபாயாகும்.
உதவியாளர் அவரை அணுகி “புரோகிதருக்கு முந்நூறு ரூபாய் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை வங்கியில் கட்டி விடட்டுமா?” எனக் கேட்டார்.
“வேண்டாம். இன்றைக்கு வரும் பணம் முழுவதும் அவருக்கே கொடுப்பதாக வாக்களித்து விட்டேன். ஆகவே, மொத்தப் பணத்தையும் அவரிடமேக் கொடுத்து விடுங்கள். அவரது பெண்ணின் அதிர்ஷ்டமே, இன்று பணம் அதிகமாகக் கிடைத்திருக்கிறது. அந்தப் பெண்ணின் திருமணம் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக நடக்கட்டும்” என்றார் மோதிலால் நேரு.