ஒருமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் சுவாமி விவேகானந்தர் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் இருந்த பெட்டியில் அவரைத் தவிர இரண்டு ஆங்கிலேயர்கள் இருந்தனர்.
விவேகானந்தர் அணிந்திருந்த காவி உடையைப் பார்த்த அவர்கள், அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரைக் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர். திட்டவும் கூடச் செய்தனர்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தர் அமைதியாகவே இருந்தார். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ளவே இல்லை.
ஒரு ரெயில் நிலையத்தில், ரெயில் நின்றதும், விவேகானந்தர் அங்கிருந்த ஒருவரிடம், “இங்கே தண்ணீர் கிடைக்குமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
அதைக் கவனித்த அந்த ஆங்கிலேயர்கள் இருவரும் அதிர்ச்சிய்டைந்தனர்.
விவேகானந்தர் தனது இருக்கையில் வந்து அமர்ந்ததும், அவர் அருகில் சென்ற அவர்கள் அமைதியாக, “நாங்கள் இவ்வளவு நேரமும் உங்களைக் கேலி செய்தோம். நீங்கள் எங்களை எதிர்த்து ஒரு கேள்வி கூட கேட்கவில்லையே… ஏன்..?” என்று கேட்டனர்.
அதற்கு விவேகானந்தர், “நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதல் தடவை அல்ல” என்றார்.
அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த வெள்ளையர்கள், விவேகானந்தரைத் தாக்க முயன்றனர்.
விவேகானந்தரும் அதை எதிர்கொள்ளத் தயாராக எழுந்தார்.
அவரது வலிமையான உடல் அமைப்பையும், பலமான கைகளையும் பார்த்த அவர்கள், அப்படியே அமைதியாகி விட்டனர்.
அதன் பிறகு, அவர்கள் செல்ல வேண்டிய இடம் வரும் வரை அமைதியாகவே இருந்தனர்.
துறவிகளிடம் அமைதி, எளிமை, அன்பு மட்டுமின்றி, வலிமையும் இருக்கும் என்பதற்கு, சுவாமி விவேகானந்தரே சிறந்த உதாரணம்.