அறிஞர் அண்ணா தமிழக முதல்வராக இருந்தபோது ஒருமுறை எதிர்கட்சி தலைவராக இருந்த கே.விநாயகம் தமிழக அரசு பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கும்.
"யாகவராயினும் நாகாக்க காவாக்கால்
சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு"
- என்கிற திருக்குறள் யாருக்கு? என்று ஒரு வினா எழுப்பினார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றாக அண்ணாவை சிக்கலில் மாட்டிவிட்டார் விநாயகம் என்று தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.
அந்தக் குறள் பேருந்து பணிபுரியும் ஊழியர்களுக்காகவே எழுப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால், பேருந்து ஊழியர்கள் வாய்ச்சொல்லில் அடக்கம் இல்லாதவர்கள் என்று அமைந்துவிடும். அந்தக் குறள் பேருந்துப் பயணம் செய்பவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால் பொதுமக்களின் மனம் வருத்தப்படும்.
எனவே, எப்படிப் பார்த்தாலும் நிலை சிக்கலாகவே இருப்பதால், அவர் எப்படிப் பதில் சொல்லப் போகிறாரோ என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அண்ணாவையேக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அறிஞர் அண்ணாவோ எந்தவிதத் தயக்கமுமின்றி, எந்தவித சஞ்சலமுமின்றி மிகத் தெளிவாக யாருக்கெல்லாம் நாவு இருக்கிறதோ அவர்கள் எல்லோருக்காவும்தான் இந்தக் குறள் எழுதப்பட்டிருக்கிறது என்றார்.
அண்ணாவின் பதிலைக் கேட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உட்பட எல்லோரும் ஒரு சேர ஆர்ப்பரித்துக் கைதட்டி மகிழ்ந்தார்கள்.