யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் சிறந்த தமிழறிஞர், சைவ சமய ஞானி.
வழக்கு ஒன்றில் அவர் சாட்சியம் அளிக்க வேண்டியிருந்தது. நீதிமன்றத்துக்கு அவரது மாணவர்களும் வந்திருந்தனர்.
அக்கால நீதிபதிகள் ஆங்கிலேயர்கள். அதனால், சாட்சிகள் தமிழில் சொல்வதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அதிகாரிகள் இருப்பார்கள். நாவலர் ஆங்கிலப் புலமை வாய்ந்தவர். அதனால் ஆங்கிலத்திலேயே சாட்சி சொல்ல ஆரம்பித்தார்.
அப்போது நீதிபதி, ''பரதேசிகள் எல்லாம் ஆங்கிலத்தில் பேசுகிறார்களே..!'' என்று முணுமுணுத்ததுடன், அவரைத் 'தமிழிலேயே பேசுங்கள்' என்று உத்தரவிட்டார்.
உடனே நாவலர், ''எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்று காலோட்டப்புக்குழி'' என்று தொடங்க, மொழிபெயர்ப்பாளர் திணறினார்.
கோபமுற்ற நீதிபதி நாவலரை ஆங்கிலத்திலேயே சாட்சியளிக்க உத்தரவிட்டார். நாவலர் மறுத்து தமிழிலேயே கூற, அவரின் மாணவர் ஒருவர் மொழிபெயர்த்தார்.
'சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகைக்கு முன், கடற்கரை ஓரமாகக் காற்று வாங்கச் சிறு நடை புறப்பட்டபோது' என்பதுதான் அதன் பொருள்.
(எல்லி – சூரியன்; ஆழிவரம்பு – கடற்கரை ஓரம்; கால் ஏற்று – காற்று வாங்க; காலோட்டம் – சிறுநடை; புக்குழி – புறப்பட்டபோது)