சுவாமி ரங்கநாதானந்தர் கல்கத்தாவிலுள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் கல்ச்சரில் அமர்ந்திருந்தார்.
அப்போது அவரது அறைக்குள் சில பிரெஞ்சு நாட்டினர் நுழைந்தனர்.
அவர்களில் ஒருவர் சுவாமி ரங்க்நாதானந்தரிடம், 'இந்தியாவில் பசுவைத் தெய்வமாக வணங்குகிறீர்களே! ஆனால் எவ்வளவு மனிதர்கள் பட்டினியாலும், புரதச்சத்துக் குறைவாலும் இறக்கிறார்கள்! இது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா?' என்று கேட்டார்.
அவர்களை அமரச் செய்த சுவாமி ரங்கநாதானந்தர், 'வெகு காலத்திற்கு முன்பேக் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்குப் பிறகு பசும்பால் கொடுப்பது வழக்கம். எனவே, பசுவையும் தாயாக பாவிக்கும் எண்ணம் எங்களிடம் வளர்ந்தது. நாளடைவில் தாயுள்ளத்தின் அடையாளமாகப் பசுவும் கன்றும் கருதப்பட்டன. பல நூற்றாண்டுகளுக்குப் பின் பசுவையே மக்கள் தாய்மையின் மறு வடிவமாகக் கருதத் தொடங்கினர். விவசாயத்திற்கும் பயனளித்ததால் பசுவை யாவரும் போற்றிப் பாதுகாத்தனர். அவ்வளவுதான்’ என்றார்.
அவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தனர்.
'வயதான தாய் தந்தையர் இளைய தலைமுறைக்குப் பொருளாதாரச் சுமைதான். ஆனால், அவர்களைக் கொன்றுவிட யாரும் நினைப்பதில்லை. அதுபோலவே, தனது தாய்க்கு அளிக்கும் மதிப்பையும் மரியாதையையும்தான் ஓர் இந்தியன் பசுவிற்கும் அளிக்கிறான்” என்றார்
அந்தச் சுற்றுலாப் பயணிகள், 'இப்போது எங்களுக்கு நன்கு புரிந்துவிட்டது. இதற்கு முன் யாரும் எங்களிடம் இப்படி விளக்கம் கூறியதில்லை. மிக்க நன்றி' என்று கூறி விடைபெற்றனர்.