நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள கிராமம் ஒழுகினசேரி.
அங்கு ஒரு சிறுவன் தெருவில் வருகிறவர்கள், போகிறவர்கள் மீது சிறிய சிறிய கற்களை வீசி எறிந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
கல்லை எறிவது: அடிப்பட்டவர் திரும்பிப் பார்த்தவுடன் சிரிப்பது; கோபித்துப் பிடிக்க வந்தால் ஓடி ஒளிந்து கொள்வது; இதை அந்தச் சிறுவன் தனது தினசரி பொழுது போக்காகவே செய்து வந்தான்.
ஒரு நாள் அவன் அவசரமாகச் சென்றுகொண்டிருந்த ஒருவர் மீது கல்லை வீசினான்.
அவர் கல் பட்டவுடன் திரும்பிப் பார்த்து சிறுவனிடம், இப்படிச் சின்னக் கல்லைப் போடாதே ! கொஞ்சம் பெரிய கல்லாகப் போடு ! என்று வெடுக்கென்று கூறிவிட்டுப் போய்விட்டார்.
சிறுவன் சிரித்துக்கொண்டே அவர் சொன்னபடி ஒரு பெரிய கல்லைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டான்.
யாராவது வருகிறார்களா? என்று, வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தான்.
வயது முதிர்ந்த சந்நியாசி ஒருவர் அந்த வழியாகச் சென்றார். காவியுடை அணிந்திருந்த அவர் மெதுவாகவே நடந்து சென்றார்.
சிறுவன் தன் கையில் இருந்த கல்லைக் குறி பார்த்து சந்நியாசியின் மீது எறிந்தான்.
அது அவரது தலையில் வேகமாகத் தாக்கியது. அதனால் அவர் தலையில் இரத்தம் பெருகி வழிந்தது.
தலையை ஒரு கையால் காயத்தின் மீது அழுத்திப் பிடித்துக் கொண்டே சந்நியாசி திரும்பிப் பார்தார்.
குறுகலான சாலையின் வளைவில் நின்றிருந்த சிறுவன் இப்போது சிரிக்கவில்லை; அந்த இடத்தை விட்டு ஓடவும் இல்லை; தேம்பி தேம்பிக் கண்களை கசக்கிக் கொண்டே அழுதான்.
சந்நியாசி அவன் அருகில் சென்றார்.
சிறுவன் மீது அவருக்கு இரக்கம் உண்டாயிற்று.
அவர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்து, கல்லடி பட்ட காயம் ஏற்பட்டு இரத்தம் வரத்தான் செய்யும்! எனக்குக் காயம் பட்டது இருக்கட்டும்; இப்போது உன் மனம் நீ செய்த தவறுக்காக வருந்துகிறது; அது எனக்குப் போதும். இனி யார் மீதும் கல் எறிய மாட்டாய் என்பதை உன் முகம் காட்டுகிறது. எல்லோருக்கும் நல்லவனாக, உதவி செய்பவனாக, நீ வாழ வேண்டும். தம்பி, எதிர்காலத்தில் நீ புகழ் பெற்று வாழ்வாய்! என்று கனிவும் அன்பும் ததும்ப அறிவுரை கூறி ஆசிர்வதித்தார்.
அந்த விளையாட்ச் சிறுவன் யாரென்று தெரியுமா? கலையுலகில் ஒரு கலங்கரை விளக்கம் போல் பீடு நடைபோட்ட நகைச்சுவை மன்னன் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான் அவர்.