மொழியியல் வல்லுனர் தேவநேயப் பாவாணரிடம் ஒருவர் வந்தார்.
அவர், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்ததுதான் என்கிறீர்களே... இது உண்மையா?” என்று கேட்டார்.
”ஆமாம்” என்றார் பாவாணர்.
“அப்படியானால், மரம் என்கிற சொல்லுக்கு என்ன பொருள்?” என்று கேட்டார்.
“அமரும்” என்றார் பாவாணர்.
நேரம் கடந்து கொண்டே இருந்தது. வந்தவரும் பேசவில்லை. பாவாணரும் பேசிக் கொள்ளவில்லை.
பாவாணர் எதையோ எழுதிக் கொண்டே இருந்தார். மேலும் காலம் கடந்து கொண்டிருந்தது.
பாவாணர் அமர்ந்திருந்தவரை அருகில் வரும்படி அழைத்தார்.
அவர், “வரமுடியவில்லை” என்றார்.
“ஏன்?” என்று கேட்டார் பாவாணர்.
“கால் மரத்துப் போச்சு! நடக்க முடியவில்லை!!” என்றார் அவர்.
“உயிர் இருக்கும். வளர்ச்சி இருக்கும். ஆனால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் தானாகப் பெயர்ந்து செல்ல முடியவில்லை. இப்படிப்பட்ட இயல்புடைய பொருளுக்கு “மரம்” என்று பொருள். இதனால்தான் நம் முன்னோர்கள் மரம் எனப் பெயரிட்டுள்ளனர்” என்று சொன்னார் பாவாணர்.
பாவாணரின் மொழியியல் திறன் கண்டு வந்தவர் வியந்து போனார்.