கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வீட்டிற்கு எதிர்த்தாற் போலிருந்த வீட்டில் வெளிக்கதவு சாத்தியிருந்தது.
வெளிக்கதவின் பூட்டு திறந்தபடி தொங்கிக் கொண்டிருந்தது. தெருவில் போன ஒரு பையன் அந்தப் பூட்டை எடுத்து தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு நழுவினான்.
இதைப் பார்த்த என்.எஸ்.கிருஷ்ணன் அவனை வழிமறித்து, "இங்கே வாடா, தம்பீ...' என்று அழைத்ததும், அவன் பயத்துடன் அவர் முன் வந்து நின்றான்.
"தம்பி, பையில் என்ன இருக்கு?' என்று கேட்டார்.
"ஒண்ணுமில்லை..." என்றான் அவன்.
"காட்டு, பார்க்கலாம்!' என்று அவன் சட்டைப் பையில் கை விட்டார். பூட்டு!
கையும், களவுமாகப் பிடிபட்டவன், அவரிடம் மன்னிப்பு கேட்டான்.
"ஏண்டா, எடுத்தே?' என்றார்.
"பசி, பழைய சாமான் கடையில் போட்டால் இரண்டு ரூபாய் கிடைக்கும். சாப்பிடலாம்ன்னு எடுத்தேன்!' என்று உள்ளதைச் சொன்னான்.
அப்போது வெளியே வந்த வீட்டுக்காரர், கதவில் பூட்டு இல்லாததைப் பார்த்து விட்டார்.
தெருவில் என்.எஸ்.கிருஷ்ணன் பையனுடன் பேசிக் கொண்டிருப்பதையும் அவர் கையில் பூட்டு இருப்பதையும் பார்த்தார்.
அவன் தான் எடுத்திருப்பான், என். எஸ்.கே., அவனைப் பிடித்து வைத்திருக்கிறார் என்ற எண்ணத்துடன் கோபத்தில் வந்தார் அந்த வீட்டுக்காரர்.
அந்தப் பையன் என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்தான்.
என்.எஸ்.கே., சிரித்தபடி, "வாங்க... வாங்க... பூட்டைத் தேடறீங்களா? ஒரு பையன் தூக்கிட்டு ஓடினான். தம்பி, அவனை விரட்டிப் பிடித்துப் பூட்டைப் பறிச்சிக்கிட்டு வந்தான். நான் வாங்கி வைத்திருக்கேன். இந்தாங்க பூட்டு, பாவம், பையன் கஷ்டப்பட்டான். அதுக்காக அவனுக்கு ரெண்டு ரூபாய் கொடுத்தனுப்புங்கள்..." என்றார்.
பையனிடம், "டேய், தம்பி இவர் இரண்டு ரூபாய் கொடுப்பாரு; போயி வாங்கிட்டுப் போ!' என்றார் என்.எஸ்.கே.