ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற ஒரு ஏழை விவசாயி இருந்தார்.
ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது, உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது.
தன் கையிலிருந்தவற்றை அப்படியேப் போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.
நல்லவேளையாக ஃப்ளெமிங் அவனைக் காப்பாற்றினார். ஃப்ளெமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாகப் புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.
அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது.
நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து, நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார்.
“நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்” என்றார்.
“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங்.
அப்போது அவரது பிள்ளை, அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.
“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.
“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.
“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம். என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன். அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார்.
இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. சொன்னதோடு மட்டுமல்ல, செய்தும் காண்பித்தார்.
விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக்கூடங்களில் படித்தான்.
லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்துப் பெரியவனான அவரின் பெயர் என்னவென்று தெரியுமா?
உலகம் புகழும் பெனிசிலின்மருந்தைக் கண்டுபிடித்த சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங் ஆனார்.
வருடங்கள் பல கழிந்த பின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போது, பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.
அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது பிள்ளை யார் என்று தெரிகிறதா?
சர் வின்ஸ்டன் சர்ச்சில்.