கம்பர் வீட்டு வாசலில் ஒரு பெண் வரட்டி தட்டிக் கொண்டிருந்தாள்.
அம்பலசோமாசி என்ற புலவர் கம்பரைக் காண வந்தார். அவர் அந்தப் பெண்ணிடம், “அம்மா! கம்பர் இருக்கிறாரா?” என்று கேட்டார்.
“அவரைக் காணப் பல புலவர்கள் வந்துள்ளனர். அவர்கள், அவரிடம் தமிழின்பம் நுகர்ந்து கொண்டுள்ளனர். அவரை யாரும் எப்போதும் பார்க்கலாம். கருணை மிக்கவர்” என்று பதில்களை அடுக்கினாள்.
“இருக்கிறாரா? என்று கேட்டால் ஆம் அல்லது இல்லை என்று சொல்லியிருக்கலாம். வாயாடி... எத்தனை பதில் சொல்கிறாள்' என்று அவர் அசை போட்டார்.
“நீ இவ்வளவு பேசுகிறாயே! கம்பரிடம் தமிழ் படித்திருக்கிறாயா?” என்று கேட்டார் அவர்.
“அதற்கெல்லாம் நேரமேது புலவரே! அன்றாடப் பணிக்கே பொழுது சரியாக இருக்கிறது. சரி... சரி... எனக்குத் தெரிந்த தமிழை உம்மிடம் பேசுகிறேன். ஒரு சின்ன விடுகதை, பதில் சொல்லுங்கள்” என்றாள் அவள்.
புலவர் ஆர்வமானார்.
“வட்டமாக இருக்கும், வன்னிக்கொடியில் தாவும், கொட்டுபவர் கையில் கூத்தாடும். எரித்தால் சிவசிவ என்பர். அது என்ன?” என்றாள்.
புலவர் பதில் தெரியாமல் விழித்தார்.
அவள், “பரவாயில்லை, ஒரு நாள் யோசித்துக் கூடப் பதில் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
அப்போது வெளியே வந்த கம்ப, அந்தப் புலவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
புலவர், தன்னிடம் அந்தப் பெண் கேட்ட கேள்வியைக் கம்பரிடம் கேட்டார்.
கம்பர், “அது ஒன்றுமில்லை புலவரே! அவள் தட்டும் வரட்டியைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறாள். வட்டமாக இருக்கும் வரட்டியை வன்னி என்னும் நெருப்பில் சுடுவார்கள். சுட்டதும் எடுத்த சாம்பலே திருநீறு. அதை நெற்றியில் பூசும்போது சிவசிவ என்பார்கள் இல்லையா” அதைத்தான் அப்படி விடுகதையாகச் சொல்லியிருக்கிறாள்” என்றார்.
“கம்பரின் வேலைக்காரிக்கே இவ்வளவு திறனா?” என்று அம்பலசோமாசி ஆச்சரியப்பட்டார்.