ஒரு குளத்தில் அம்மா மீனும், அதனுடைய குட்டி மீனும் இருந்தன. அம்மா மீன் குட்டி மீனுக்கு நீந்தக் கற்றுக்கொடுத்தது.
அம்மா மீனுக்கு வயதானதால், அதனால் வேகமாக நீந்த முடியவில்லை.
ஆனால் குட்டி மீனோ, அதி வேகமாக நீந்த ஆரம்பித்தது. அதனால் அதற்குக் கர்வம் கூட ஏற்பட்டது. அது அம்மா மீனைக் கிண்டல் செய்தது.
“உன்னால், உன் உணவை பெறக்கூட நீந்த முடியவில்லை... ஆனால் என்னைப்பார்... எவ்வளவு அழகாக நீந்துகிறேன்...”எனச் சொல்லி வேகமாக நீந்திக் காண்பித்தது.
அம்மா மீன் சொல்வது எதையும் அந்தக் குட்டி மீன் கேட்பதில்லை.
ஒரு நாள் மீன் பிடிப்பவன் ஒருவன், மீன் பிடிக்கத் தூண்டிலுடன் வந்தான். கரையில் அமர்ந்து, சிறு புழுவைத் தூண்டிலில் சொருகிக் குளத்தில் வீசினான்.
புழுவைத் தூண்டிலில் பார்த்ததும், அதைப் பிடித்து உண்ணக் குட்டி மீன் விரைந்தது. உடனே, தாய் மீன் அதனிடம் போகாதே... அது உன்னைப் பிடிக்க வைக்கும் தூண்டில், அதில் மாட்டினால் நீ இறந்து போய் விடுவாய்” என்றது.
“உனக்கு முடியாததால்... எதைப் பார்த்தாலும் நீ சந்தேகப்படுகிறாய்... அந்தப் புழுவை நான் பிடித்து வருகிறேன் பார்” என்றது குட்டி மீன்.
அதற்குள் வேகமாக வந்த வேறொரு மீன் அந்தத் தூண்டிலைக் கவ்வி அதில் மாட்டிக் கொண்டு உயிரிழந்தது.
பயத்துடன் குட்டி மீன் தாயைப்பார்த்தது.
பின், “அம்மா நீ சொன்னது உண்மை...தான். உன் பேச்சைக் கேட்காமல் நான் தூண்டிலைக் கவ்வியிருந்தால் அந்த மீனுக்கு ஆன கதியே எனக்கும் ஆகியிருக்கும். உன்னால் என் உயிர் காப்பாற்றப்பட்டது. தாய் சொல்லை மீறக்கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன்” என அம்மா மீனிடம் மன்னிப்புக் கேட்டது.