அது ஒரு அழகிய காடு, அந்தக் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது.
அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போக வேண்டி இருந்தது.
அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, ஆமை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது. ஆனால், அந்தப் பொல்லாத தேள் தம்மைக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.
“எப்படி நீரோடையைக் கடப்பது?” என்று தேள் யோசித்துக் கொண்டு இருந்த போது அந்த நீரோடையில் தவளை ஒன்று வந்து கொண்டிருந்தது.
தவளையைக் கண்ட தேள், “தவளையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும், என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா?” என்று கேட்டது.
"நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்!" என்றது தவளை.
தேளும் தவளையின் முதுகில் ஏறிக்கொண்டது.
தவளை நீரில் நீந்திச் செல்ல ஆரம்பித்தது.
சிறிது தூரம் தான் தவளை சென்றிருக்கும்... தேளுக்கு ஒரு யோசனை வந்தது, நான் பல பேரைக் கொட்டியிருக்கிறேன். அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன். ஆனால் நான் ஒரு நாளும், தவளையை கொட்டவில்லை, இந்தத் தவளையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தவளையை கொட்டிப் பார்க்க நினைத்தது.
தேள் தவளையின் முதுகில் கொட்டியது. அனால் தவளை பேசாமல் போய்க்கொண்டிருந்தது.
தேள் தவளையைப் பார்த்து, "தவளையாரே! உமது உடம்பில் வலியே வருவதில்லையா?" என்று கேட்டது.
தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத தவளை, "எனது முதுகு வழவழப்பானது. அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை. ஆனால், எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும். இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும்” என்றது.
“ஓகோ, அப்படியா?” என்று கேட்ட தேள், “மெதுவாகத் தவளையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது.
கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் தவளையை கொட்ட தனது கொடுக்கைத் தூக்கியது.
தேள் தன்னைக் கொட்ட வருவதை அறிந்த தவளை, தலையைத் தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டது.
தேள் நீரோடையில் விழுந்து விட்டது.
தனக்கு உதவி செய்த தவளைக்கு கேடு விளைவிக்க நினைத்த தேள் தண்ணீரில் மூழ்கி இறந்தது.
தவளை கரையை நோக்கி நீந்திச் சென்றது.