ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் மனதிற்கு இதமாக இருந்ததால் அந்தச் சேவல் உற்சாகமாய் கூவியது. மகிழ்ச்சியுடன் அது பலதடவை கூவிக் கொண்டே இருந்தது.
அதைக் கேட்ட நரி ஒன்று அங்கே வந்தது.
நரிக்கு சரியான பசி இருந்தது. அந்தச் சேவலை எப்படியாவது பிடித்துச் சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்டது. ஆனால், சேவல் மரத்தின் மீது இருந்ததால் அதைப் பிடிக்க முடியவில்லை.
உடனே நரி அதனைப் பிடிக்க, ஒரு தந்திரம் செய்தது.
அது சேவலைப் பார்த்து, “சகோதரனே! வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விப்பட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது. அன்பாய் நடந்து கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம்” என்றது.
நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. ஆனால், அதை வெளியேக் காட்டிக் கொள்ளவில்லை.
தூரத்தில் எதையோப் பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது. அதைக் கண்ட நரி, “என்ன சகோதரா, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடிப் பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது?” என்று கேட்டது.
அதற்குச் சேவல், “அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள்தானா என்பதைக் கவனிக்கிறேன்” என்றது.
அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது, வேகவேகமாக “சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்” என்று கூறி கிளம்பியது.
சேவல், “அருமைச் சகோதரா, போகாதே, நான் இதோக் கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், பறவை, விலங்குகளுக்கிடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது”
நரி, “அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி இன்னும் பலருக்குத் தெரியாது. அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், என் கதி என்ன ஆவது? நான் செல்கிறேன்” என்றபடி ஓடிக் காட்டுக்குள் மறைந்தது.
சேவல், “யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்காரப் பொய்கள் எதுவும் என்னிடம் பலிக்காது” என்று சொல்லிச் சிரித்தது.
கெட்டிக்காரன் புளுகினாலும் அது புத்திச்சாலியிடம் வெளிப்பட்டுவிடும்.