ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார்.
நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன.
ஆசிரியர்,"ஏன் ஒளிந்து கொண்டாய்?'' என்று கேட்டார்.
"நான் வெறும் பூஜ்யம்தானே. என்னைப் பற்றி யார் கவலைப்படுவார்கள்? எனக்கு மதிப்பே இல்லையே'' என்று வருத்தமாக கூறியது.
புன்னகைத்த ஆசிரியர், “ஒன்று” என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார்.
குழுவினரைப் பார்த்து, "இதன் மதிப்பு என்ன?'' என்றார்.
"ஒன்று!'' என்றன மற்ற எண்கள்.
அடுத்து பூஜ்யத்தை அதன் அருகில் நிற்கச் சொன்னார்.
"இப்போது?''
"பத்து!'' என்று மற்ற எண்கள் உரக்கக் கத்தின.
அடுத்து பூஜ்யத்தைப் பார்த்து, "இப்போது தெரிந்து கொண்டாயா உன் மதிப்பு? "ஒன்று” என்ற சாதாரண எண் உன் சேர்க்கையால் பன்மடங்கு அதிக மதிப்பு அடைந்ததைப் பார்த்தாயா?'' என்றார்.
எல்லா எண்களும் மகிழ்ச்சியுடன் கை தட்டின.
"ஆமாம்... நான் சரியான இடத்தில் இருந்தால், நானும் பயனுடையவன்தான். நான் மற்றவருடன் சேர்ந்தால் நாங்கள் அனைவருமே அதிக மதிப்பு வாய்ந்தவர் ஆகிறோம்'' என்று பூஜ்யம் மகிழ்ந்தது.