மதிப்பும் மரியாதையும் எப்படிக் கிடைக்கும்?

பசுவின் பாலுக்குப் பெரிய வருத்தம் ஏற்பட்டது. அது வேறொன்றுமில்லை, பால் சொல்வதை நீங்களேக் கேளுங்கள்...
பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒருத்தி பசுவின் மடியிலிருந்து கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். அடுப்பைப் பற்ற வைத்து, அதில் அந்தப் பாத்திரத்தை வைத்துச் சூடாக்கினாள். சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்
“பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” என்று என்னை நானே நொந்து கொண்டேன்.
பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கி வைத்தாள்.
நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள்.
“இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன்.
அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை.
திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.
அத்துடன் நிறுத்தினார்களா?
என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள்.
நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.
என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள்.
அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்?
அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். எனக்கு நெய் என்று இன்னொரு புதுப்பெயரை வைத்தார்கள்.
உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.
பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில்,
ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதைக் கவனித்தேன்.
ஒருத்தி, “உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள்.
அதற்கு அடுத்தவள், “அரை லிட்டர் 20 ரூபாய்” என்றாள்.
உடனே முதல் பெண்மணி, “ஆனால், இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? அரை லிட்டர் நெய்யின் விலையைக் கேட்டால் கடைக்காரன் 100 ரூபா விலை சொல்றான்” என்றாள்.
ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன்.
“பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான், ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 100 ரூபாயாகக் கூடிவிட்டதே! இதை நினைக்கிற போது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவேத் தெரியவில்லை!” என்றது அந்த நெய்.
இந்தக் கதை மூலம் உங்களுக்க்குக் கிடைக்கிற பாடம் என்ன?
நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தையும் மதிப்பையும் உயர்த்துகின்றன என்பதுதான்.
- பா. காருண்யா
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.