காட்டிற்கு அருகிலிருந்த கிராமத்தில் வசித்து வந்த ஒருவன் காட்டிற்கு வேட்டைக்கு போனான், அழகிய புள்ளிமான் ஒன்றைப் பிடித்து வந்தான்.
மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக அதனைக் கொல்லாமல், அதனை அவன் வீட்டிலேயே வளர்க்கத் தொடங்கினான்.
ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது.
அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்துப் போயிருப்பார்கள். அவன் எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்துப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோபாமாக மாறியது.
உடனே அவன் கடவுளை வேண்டினான்.
கடவுள் அவன் முன்பாகத் தோன்றினார்.
“பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன?” என்று கடவுள் கேட்டார்.
அவன் கடவுளிடம் என்ன கேட்டிருக்க வேண்டும்? நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்துச் சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே அவன் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவன் அப்படிக் கேட்கவில்லை. அவனுக்குக் கோபம் கண்ணை மறைத்தது.
“தெய்வமே... நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானைக் காணவில்லை. அந்த மானைத் திருடியது யாராக இருந்தாலும், என் முன்னே வரவேண்டும். என் கோபம் தீரும் வரை அடிக்க வேண்டும்” என்று அவன் வரம் கேட்டான்.
அவனிடன் வேண்டுதலைக் கேட்ட கடவுள், அவனது கோரிக்கைக்குச் சிறிது தயங்கினார். பின்னர், “பக்தா... உன் மானைத் திருப்பித் தருகிறேன். அது காணாமல் போன காரணமறியாமல் வரம் கேட்காதே...” என்றார்.
“இல்லை... என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் என் மானை என்னிடமிருந்து பிரித்தவர்களைப் பழிவாங்காமல் விடமாட்டேன்” என்று பிடிவாதமாக இருந்தான்.
“சரி... நீ கேட்கும் வரத்தைத் தருகிறேன். அதன் பிறகு என் மீது வருத்தப்படக்கூடாது” என்றார் கடவுள்.
“நான் கேட்கும் வரத்தைத் தரும் உங்கள் மீது எனக்கு ஏன் வருத்தம் வரப்போகிறது?” என்றான் அவன்.
“ சரி... நீ கேட்ட வரம் தந்தேன். உன் மானை திருடிச் சென்றது யாரென்று அறியாமல், வரம் கேட்டுத் தவறு செய்துவிட்டாய், உன் பின்னால் திரும்பிப் பார்” என்று வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார்.
பக்தன் திரும்பிப் பார்த்தான்.
அங்கே சிங்கம் நின்றிருந்தது.
சிங்கத்தைப் பார்த்த அவனுக்குப் பழிவாங்கும் கோபம் மறைந்து போன்ற்து. பயம் பிடித்துக் கொண்டது. கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஓடத் தொடங்கினான்.
“கடவுளே என்னைக் காப்பாற்று...”
அவனுடைய நிலையை எண்ணிக் கடவுள் சிரித்தார்.