ஒரு பெரிய நிறுவனத்தின் முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்.
ஒரு நாள் அந்த நிறுவனத்தின் மேலாளர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே, "நீங்க நல்லா நிர்வாகம் பண்றீங்க... தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க... இதுவே என்னைப் போல பெரிய நிறுவனத்திலே வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப் போல பெரியஅளவில் முன்னேறி இருக்கலாம் இல்ல..." என்றார்.
பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்.
"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரி இருக்கிறேன்"
"எப்படி?"
"பத்து வருஷத்துக்கு முன்பு, நான் இந்தத் தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க... அப்போது என் வருமானம் மாதம் ஆயிரம் ரூபாய்... உங்கள் வருமானம் மாதம் பத்தாயிரம் ரூபாய்... நீங்க இப்போ மேலாளர் ஆகிட்டீங்க... மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குறீங்க... இப்போ எனக்குச் சொந்தமா இந்தக் கடை இருக்கு... இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு... நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதை விட அதிகமாகவேச் சில சமயம் சம்பாதிக்கிறேன்... நாளை என் வாரிசுகளுக்கு இந்தத் தொழிலை நான் தர முடியும்... அவர்கள் என்னைப் போல் பூஜ்யத்திலிருந்து தொடங்க வேண்டாம்... நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்... ஆனால், உங்களுக்கு அப்படியில்லை...
உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியேத் தர முடியாது... உங்கள் இத்தனை வருட உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்... உங்கள் மகன் மீண்டும் பூஜ்யத்தில் இருந்து தொடங்க வேண்டும்... நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்... உங்கள் மகன், உங்களைப் போல மேனேஜர் ஆகும் போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்... ஒரு வேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்.
அந்த மேலாளர், அந்த சமோசாவுக்கு பணத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பினார்.
“தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது” என்பதை இங்கு உணர வேண்டும்.