நன்றாகப் படித்த பொறியாளர் ஒருவர், தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார். வழியில் டயர் பஞ்சர் ஆகிவிட்டது.
கடை ஏதும் இல்லை. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்.
அனைத்துப் போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்க போகும் போது கால் இடறிக் கீழே விழுந்தார்.
கையில் வைத்திருந்த போல்ட்கள் அனைத்தும் அருகிலிருந்த ஒரு குட்டையில் விழுந்து விட்டது.
இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார்.
அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.
அந்த வழிப்போக்கன், அவரைப் பார்த்து, “ஐயா என்ன ஆச்சு...?” என்றான்.
அவரோ அவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று எண்ணியபடி, “ஒன்றும் இல்லை... நீங்கள் போகலாம்”என்றார்.
அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான். அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.
இந்தச் சாக்கடைக் குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் அவனை இறங்க சொல்லலாம் என்று எண்ணி அவனிடம், “நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்தக் குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டுகளை எடுத்துத் தாருங்கள்” என்றார்.
“ஓ... இது தான் உங்கள் பிரச்சனையா...? நான் அந்தக் குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை... ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது. உங்கள் காரின் மீதமிருக்கும் மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்களை கழட்டி இந்தச் சக்கரத்தை மாட்டி, இப்போதைக்கு உங்கள் காரை எடுத்துச் செல்லுங்கள். வழியில் வரும் மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லாச் சக்கரத்திலும் ஒவ்வொன்றை மாட்டிக் கொள்ளுங்கள்” என்றார்.
தான் படித்துப் பொறியாளராக இருந்தும், நமக்கு இந்தச் சுலப வழி தெரியாமல் போய் விட்டதே என்றும், இவருக்கு மூளை இல்லை என்றும் தப்பாக நினைத்ததற்கு வெட்கித் தலை குனிந்தார் அந்தப் பொறியாளர்.
யாரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது...!